You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருப்பு ஜூலை: இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட ரத்தக்களரி - நடந்தது என்ன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
''40 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்திலிருந்து இன்றும் மீண்டெழ முடியாதுள்ளது" என்கின்றார் அருட்தந்தை எம்.சக்திவேல்.
''எங்களை பொருத்தவரை 83 மாத்திரம் அல்ல கருப்பு ஜுலை என்பது. இந்த நாட்டின் சுதந்திரம் கருப்பு. இந்த நாட்டின் யாப்பு கருப்பு, இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கருப்பாக இருக்கின்றார்கள். அனைத்தும் கருப்பாக இருக்கின்றமையினால் தான் நாங்கள் இந்தளவு பாதிப்புகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஜுலை மாதம் 23ம் தேதி இதேபோன்றதொரு நாளில், 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஜுலை கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கலவரத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து இன்றும் பலருக்கு மீண்டெழ முடியாத நிலை காணப்படுகின்றது.
தமது சொந்த இடங்களை விட்டு பலர் வெளியேறியமை, வெளிநாடுகளுக்கு சென்றமை, சொத்துகளை இழந்தமை, உறவுகளை பலி கொடுத்தமை உள்ளிட்ட பல்வேறு துயரங்களை, கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறு ஜுலை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அருட்தந்தை சக்திவேல், தனது அனுபவங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துக்கொண்டார்.
''1983ம் ஆண்டு ஜுலை கலவரம் என்பது முழு நாட்டையும் பாதித்தது. அதேபோன்று, அந்த காலக் கட்டத்தில் நாங்கள் மாணவர்களாக இருந்தோம். அந்த பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள், மக்களை தூண்டி விட்டு எங்களை தாக்க முயற்சித்தார்கள். எங்களுக்கான பாதுகாப்பு இல்லாததன் காரணமாக, நாங்கள் அகதி முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம். அகதி முகாம் முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கானோர் வந்து சேர்ந்தார்கள். தங்களுடைய உடமைகளை இழந்து, தமது சொத்துகளை இழந்து வந்து சேர்ந்தார்கள்.
நாங்கள் முகாமில் இருக்கும் போது இரவிரவாக பார்த்த காட்சி, கண்டி நகரம் ஊரடங்கு சட்டம் போடப்பட்டதன் பின்னர் தான் கொளுந்து விட்டு எரிந்ததை எங்களால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு போலீஸாரும், ராணுவத்தினரும் காரணமாக இருந்தார்கள் என்பது நன்றாக தெரியும். இரவிரவாக அகதிகள் வந்து சேர்ந்த போது, முகாம்களில் தங்க வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. பேராதனை பல்கலைக்கழக மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அந்த மண்டபங்களில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அங்கிருந்த மண்டபங்களில் மக்கள் நிரம்பியிருந்தார்கள்.
தங்களுடைய ஆடு, மாடுகள் மட்டுமல்ல, தங்களுடைய கத்தரி செடி, மிளகாய் செடி, வாழைகள் ஆகிய எல்லாவற்றையும் கூட வெட்டி வீசியதை அங்கிருந்த மக்கள் கூறியதை கேட்கக்கூடியதாக இருந்தது. தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்துவதற்காகவும், தமிழ் மக்களை தங்களுடைய அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், அரசியலை நகர்த்துவதற்காகவும், பொருளாதார ரீதியில் தமிழர்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காகவும், தமிழர்களின் கலாசாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவும், கல்வியை அழிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த வன்முறை தூண்டப்பட்டது. இதில் அரசியல், பொருளாதார, கலாசார காரணங்கள் இருக்கின்றன.
அதேபோன்று, ஒட்டு மொத்த தமிழர்களையும் அடிமைகளாக வைக்க வேண்டும் என்பது தான் பிரதான காரணம். இந்த நோக்கம் 83ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இன்று வரை நடந்துக்கொண்டிருக்கின்றது என்றே கூற வேண்டும். வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல, மலையகம் ஆகிய பகுதிகளில் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாத நிலையில் இருக்கின்றது." என அருட்தந்தை சக்திவேல் தெரிவிக்கின்றார்.
கருப்பு ஜுலைக்கான முதலாவது கலவரம் ஆரம்பமானது, 1983 ஜுலை மாதம் 23ம் தேதி.
இந்த காலப் பகுதியில் இலங்கையில் 1983ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்ததுடன், அந்த காலத்தில் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சி செய்தார்.
இவ்வாறான நிலையில், கருப்பு ஜுலை கலவரம் இடம்பெற்று 40 வருடங்கள் கடக்கின்ற இன்றைய சூழலில், இலங்கையின் ஜனாதிபதியாக அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 21ம் தேதி இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கியிருந்த மக்கள், கடந்த ஆண்டு இந்த காலப் பகுதியில் வீதிகளில் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டங்களை கலைக்கும் வகையில், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி இரவு, போராட்டக்காரர்களை புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆணையில், ராணுவத்தினரால் அடித்து கலைக்கப்பட்டனர்.
அந்த காலப் பகுதியில் ஜுலை கலவரத்தை போன்றே, ரணில் விக்ரமசிங்கவும் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை போராட்டக்காரர்கள் முன்வைத்திருந்தார்கள்.
கறுப்பு ஜுலை கடைபிடிக்கும் போது சலசலப்பு
1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, கொழும்பு - பொரள்ளை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
தமிழ் மக்கள் இனப்படுகொலையை மறவோம் என எழுதப்பட்டிருந்த வசனத்திற்கு, அங்கு வருகைத் தந்த குழுவொன்று எதிர்ப்பு தெரிவித்தது.
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை எனவும், மாறாக விடுதலைப் புலிகளையே ராணுவம் அழித்ததாகவும் அங்கு வருகைத் தந்த சிலர் கூறியிருந்தனர்.
இதையடுத்து சில மணிநேரம் அங்கு பதற்றம் நிலவியது.
நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு பெருமளவான ராணுவம், விசேட அதிரடி படை, போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையை பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி நினைவஞ்சலி செலுத்த முயற்சித்த வேலையில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.
குறித்த இடத்தில் பதற்ற நிலையை ஏற்படுத்த முயற்சித்த தரப்பினரை, பாதுகாப்பு பிரிவினர் அங்கிருந்து வெளியேற்றி, நினைவேந்தலை நடத்த அனுமதி வழங்கியிருந்தனர்.
கருப்பு ஜுலை ஏன்?
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் தேதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
கருப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கருப்பு ஜுலை வன்முறைகளை நோக்கலாம்.
கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள், சொத்துகள் என அனைத்தையும் அழிக்கும் செயற்படாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களை தேடித்தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி, தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
கருப்பு ஜுலை - காரணம் என்ன?
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாக கூறப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.
கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் முதலில் உயிரிழந்திருந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு - பொரள்ளை மயாகத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகைத் தந்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வருகைத் தந்துள்ளதாக பொய் கருத்துக்கள் வெளியாகி நிலையில், சிறியளவில் ஏற்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
இலங்கையில் தமது சொத்துகளை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதல் முதலில் வித்திட்டதாக இன்றும் தமிழர்கள் கூறி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்