தமிழுக்காக குழந்தைகளுடன் சிறை புகுந்த 73 பெண்கள் - அறியப்படாத முதல் மொழிப்போர் வரலாறு

பட மூலாதாரம், DMK
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இந்த தினத்தில் அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. அப்படி பல அரசியல் தலைவர்கள் முதல் தமிழறிஞர்கள் வரை சென்று அஞ்சலி செலுத்துமிடம் தமிழ்போராளிகளான நடராசன், தாலமுத்து ஆகிய இருவரும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ராயபுரம் மூலக்கொத்தளம் சுடுகாடு.
300 ஆண்டுகள் பழமையான இந்த சுடுகாட்டில் தான் தமிழ் உரிமைக்காக போராடிய பல தமிழ் போராளிகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஏன் எப்போதும் மொழிப்போர் தியாகிகள் தினம் என்றால் நடராசன், தாலமுத்து பெயர் மட்டுமே அதிகம் பேசப்படுகிறது?
அவர்களது சமாதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இதே சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருக்கும் டாக்டர் எஸ். தருமாம்பாள் குறித்து வரலாறு அதிகம் பேசாதது ஏன்? முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பெரும் பாத்திரம் வகித்த பெண் தமிழ்போராளிகள் குறித்து யாருமே பேசாதது ஏன் என்ற கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த தொகுப்பு.

தமிழ்நாட்டில் மொழிப்போர்
1938ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கட்டாய இந்தித்திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் வெடிக்க தொடங்கின. அதற்கு முன்பாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடந்து வந்தாலும் 1938ஆம் ஆண்டுதான் தமிழகம் முழுவதும் தமிழ்மொழி உரிமைக்கான போராட்டம் வீரியமாக எழுந்தது.
அதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்பு அதிகம் அரசியல் போராட்டங்களில் பங்கு பெறாமல் இருந்த பெண்கள் அமைப்பாக திரண்டு இந்தித் திணிப்பை எதிர்க்க தொடங்கினர். அவர்களை தட்டியெழுப்புவதில் பெரியாருக்கு முக்கிய பங்கு இருப்பதாக தெரிவிக்கிறார் “1938 முதல் மொழிப்போரில் பெண்கள்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், எழுத்தாளருமான நிவேதிதா லூயிஸ்.
1925 ஆம் ஆண்டு பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு வந்த பெண்களை இந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்குள்ளும், பிரதான அரசியல் களத்திற்குள்ளும் தள்ளியது பெரியாரே என்று கூறுகிறார் அவர். குறிப்பாக 1938ஆம் ஆண்டில் தொடர் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சிறைநிரப்பும் போராட்டங்கள் என மாதர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது.
மேலும் 1938ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பெண்கள் மாநாட்டுக்கு தனித்தமிழ் இயக்கம், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகளை கூட்டாக இணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருப்பியதில் பெரும் பங்குண்டு. இதற்கு பின்புதான் 1939-ஆம் ஆண்டில் நடராசன் மற்றும் தாலமுத்து ஆகிய இருவரும் அடுத்தடுத்து தமிழ் மொழிக்காக சிறையில் உயிர்நீத்தனர்.

பட மூலாதாரம், 1938 MUDHAL MOZHIPORIL PENGAL
முதல் மொழிப்போரில் பெண்கள்
1938-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து ஏற்கெனவே கனன்று கொண்டிருந்த தமிழ் உரிமை போருக்கான தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக தியாகராய நகர் மாதர் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை தொடங்கி ‘முன்னேற்ற கழகம்’ என்ற பதத்தை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய டாக்டர் தருமாம்பாள் அம்மையார் முன்னெடுப்பில் முதல் பெண்கள் மாநாட்டிற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது. இதே மாநாட்டில் தான் பெரியாருக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார் தருமாம்பாள் அம்மையார்.
13.11.1938ஆம் ஆண்டு நாள்குறிக்கப்பட்டு மாநாட்டின் தலைவராக மறைமலையடிகளின் மகள் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தின் செயற்பாட்டளாரான நீலாம்பிகை அம்மையார் அறிவிக்கப்பட்டார்.
இவர்களோடு தீவிர திராவிட அரசியல் செயற்பாட்டாளராக இருந்த வ.பா. தாமரைக்கண்ணி அம்மையார் (ஜலஜாக்ஷி), மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பண்டிதை அ. நாராயணி, மீனாம்பாள் சிவராஜ் மற்றும் கலைமகள் அம்மையார் ஆகியோரும் அந்த மாநாட்டை வழிநடத்தி கொண்டு சென்றவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
மாதர் மாநாட்டுக்கும் , இந்தி எதிர்ப்புக்கும் என்ன தொடர்பு?
‘நிலம், நாடு, மொழி, கலை, செல்வம் ஆகிய ஐந்தினையும் நிலமகள், தாய்நாடு, தாய்மொழி,கலைமகள், திருமகள் என மகளிர் பெயரால் அழைக்கப்பெறுவது தமிழ் வழக்கமாதலால் மொழிக்கு வரும் கேட்டினை, ஆடவரினும் பெண்பாலரே முன்னின்று நீக்குதற்குரிய பணிகளைச் செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே இன்றைய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு இன்றியமையாது வேண்டப்படுவதாகும். தமிழ் வளர்ச்சி கருதும் ஒவ்வொரு ஆண்மகனாரும் தங்கள் தங்கள் இல்லத்திலுள்ள பெண் மக்களை மாநாட்டிற்கு அனுப்பிவைப்பார்களாக' என்று பெண்கள் மாநாட்டின் இரண்டாம் விளம்பர அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. (ஆதாரம் : 1938 முதல் மொழிப்போரில் பெண்கள்)
மொழியை காப்பதில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பொறுப்புள்ளதை நிறுவும் வண்ணமே இந்த மாநாடு நடைபெற்றது. பெண்கள் மாநாடாக இது கூட்டப்பட்டிருந்தாலும், மகளிர் உரிமையை மட்டும் வலியுறுத்தாமல் இந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானங்கள் பலவும் மொழி உரிமைக்கானவையாகவே இருந்தன.
ஆந்திர தலைநகராக சென்னையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை கண்டிப்பதில் தொடங்கி தமிழ் மொழி சார்ந்த தீர்மானங்களே பெரும்பான்மையாக இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
- சென்னை நகர வீதிகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்.
- பீச், போர்ட்டு, பார்க் என பெயரிடப்பட்டுள்ள ரயில்நிலையங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும்.
- நாணயங்களில் அதன் மதிப்பை தமிழில் குறிக்க வேண்டும்.
- பொதுமருத்துவம் மற்றும் சித்தமருத்துவம் உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் பாடங்கள் தமிழில் வெளியியிடப்பட்டு நடத்த வேண்டும்.
- இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் மீது வழக்கு போடப்பட்டதற்கு ராஜாஜி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்.
- தமிழ் மொழியை காக்க சிறைபுகுந்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
- மறுமண ஆதரவு
- கலப்புத்திருமணம் ஆதரவு
- பெரியாருக்கு ‘பெரியார்’ என்ற சிறப்பு பெயரை வழங்குதல்

பட மூலாதாரம், 1938 MUDHAL MOZHIPORIL PENGAL
தீவிரமான அரசியல் உரைகள்
தங்களை ஒத்த பெரும்பான்மையான பெண்கள் கல்வி கற்க கூட அனுமதிக்கப்படாமல் இருந்த காலத்தில், அவர்களையும் இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் குதிக்க வைத்ததே தமிழ் பெண் போராளிகளின் சாதனை. மேற்குறிப்பிட்ட போராளிகள் மட்டுமல்லாது நூற்றுக்கணக்கான பெண் தலைவர்கள் மாதர் முன்னேற்ற கழகத்தில் செயல்பட்டுள்ளார்கள்.
முதல் பெண்கள் மாநாட்டில் பேசிய டாக்டர் தருமாம்பாள் முதல் தாமரைக்கண்ணி அம்மையார் வரை தங்களது முழு உரையிலும் தமிழ் உரிமையை மையப்படுத்தியே பேசினர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் 3 கோடி மக்களில் 95% பேர் இன்னமும் எழுதப்படிக்க தெரியாமல் இருக்கும் நிலையில், இதில் மூன்றாவது மொழி இந்தியை திணிப்பது நியாயமா என்று தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
பெண்கள் மாநாட்டின் மூலம் உறக்கத்தில் இருக்கும் தமிழர்களை தட்டியெழுப்புவதே இலக்கு என்று அறைகூவல் விடுத்த தாமரைக்கண்ணி அம்மையார், இந்தி நுழைவால் தமிழ்நாட்டில் வடநாட்டவரின் வருகை அதிகரிக்கும் என்று 85 ஆண்டுகளுக்கு முன்பே அந்த மேடையில் தெரிவித்துள்ளார்.
மேலும், 'இந்தி அதற்குரிய இடத்திலிருந்தால் அதைப்பற்றி நாம் கவலைப்படப் போவதில்லை. நமது தாய்மொழிக்குரிய இடத்தில் அது வலுக்கட்டாயமாக வந்து புகுவதால்தான் நாம் அதை வெறுக்கிறோம். தமிழ்நாட்டில் விருப்பமுள்ளவர்கள் அதைப் படிப்பதில் எனக்கொன்றும் தடையில்லை. இதுதான் என் கருத்து’ என்று அன்றே இந்தி எதிர்ப்பு குறித்த அரசியல் புரிதலை வெளிப்படுத்தியுள்ளார்.

பெண்கள் சிறைபுகும் போராட்டம்
மாநாடுகள், பேரணிகள், கூட்டங்கள் நடத்துவதோடு மட்டுமன்றி ஆண்களை போலவே பெண்களும் சிறைபுகும் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. முதல் பெண்கள் மாநாட்டில் உரையாற்றிய பெரியாரும் அதையே வலியுறுத்தினார்.
இதனால் உத்வேகம் அடைந்த பெண்கள் மாநாடு முடிந்த இரண்டு நாட்களில் சென்னை இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு இந்தி திணிப்புக்கு எதிராக மறியல் செய்ய முயன்றனர். அதில், டாக்டர் எஸ். தருமாம்பாள், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மலர்முகத்தம்மையார், சீதம்மாள்(தருமாம்பாள் அவர்களின் மருமகள் தனது மூன்று வயது, ஒரு வயதுடைய மங்கையர்க்கரசி, நச்சினார்க்கினியன் ஆகிய இரு குழந்தைகளுடன்) பட்டு அம்மாள் (திருவாரூர் பாவலர் பாலசுந்தரம் மனைவி) , பழனியப்பா, பிஸ்மல்லா சாகிப் ஆகிய இரு ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக மாற்றி இறுதி வரை தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாமல், சிறை சென்றனர் இந்த பெண்கள். முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மட்டும் 73 பெண்கள் மற்றும் அவர்களுடன் 32 குழந்தைகளும் சிறைக்கு சென்றுள்ளனர். இவர்களோடு 1164 ஆண்களும் சிறைக்கு சென்றுள்ளனர்.
மேலும் காவல்துறை சித்ரவதைக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் பலர். அப்படி இறந்தவர்களில் முக்கியமானவர்கள் தான் பத்மாவதி மற்றும் தனலட்சுமி.

தமிழ் வாழ்க என்ற வாசகத்துடன் சேலை கட்டியதற்காக நிகழ்த்தப்ட்ட கொடுமை
1938ல் இந்தி எதிர்ப்பில் தனித்தமிழ்நாடு கேட்டு தமிழ்வாழ்க சேலை கட்டியதற்காக கைது செய்யப்பட்ட பத்மாவதி காவல்துறையினரால் துன்புறத்தப்பட்டு உயிர் துறந்ததாக மூலக்கொத்தளம் சுடுகாட்டில் உள்ள அவரது கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது படத்தை அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான N.V. நடராசன் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
மற்றுமொரு போராளியான தனலட்சுமி, 1948 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல் லாரியில் ஏற்றிச்சென்று 40 மைலுக்கு அப்பால் திரும்பி வரவே முடியாத அளவுக்கு தொந்தரவு செய்து விட்டு சிஐடி போலீஸ் வந்தமையால் கருச்சிதை ஏற்பட்டு நோயுற்று அதே காரணத்தால் உயிர் துறந்தார் என அவரது கல்லறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது கல்லறையை தொழிலாளர் நலத் துறை அமைச்சரான கா. இராசாராம் திறந்து வைக்க, அவரது படத்தை ஈ.வே.ரா.மணியம்மை திறந்து வைத்துள்ளார்.
1967ஆம் ஆண்டு அமைந்த அண்ணாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முதல் தலித் பெண் அமைச்சரும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முன்னின்றவருமான அன்னை சத்யவாணி முத்துவின் கல்லறையும் இதே மூலக்கொத்தளம் சுடுகாட்டில் தான் உள்ளது. மேலும் சில ஆண் போராளிகளும் இங்குதான் நல்லடக்கம் செய்யபட்டுள்ளனர். இதற்கு காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்த ராயபுரம் பகுதியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. மாதர் முற்போக்கு மன்றத்தின் பல பொதுக்கூட்டங்கள் இந்த பகுதியை சுற்றி நடந்துள்ளதை விடுதலை உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

பெண் போராளிகளின் மறைவு
1938ஆம் ஆண்டு முதல் மொழிப்போரில் வீரியமாக செயல்பட்டு வந்த பெண்கள் மற்றும் பெண் போராளிகள் பலரும் இரண்டாவது மொழிப்போரில் மறைந்துவிட்டதை பார்க்க முடிகிறது. அவர்கள் மறைந்ததை போலவே அவர்களது வரலாறும், சாதனைகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் மறைந்துவிட்டது.
இதுகுறித்து ஹெர் ஸ்டோரீஸ் என்ற பதிப்பகம் மூலம் முழுவதும் பெண்களுக்கான புத்தக பதிப்பை முன்னெடுத்து வருபவரும், '1938 முதல் மொழிப்போரில் பெண்கள்' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டவருமான எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் தனது புத்தகத்தில் அறியப்படாத பல தகவல்களை வழங்கியுள்ளார்.
அதை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்ட அவர், “ படித்த பெண்கள், நடுத்தர வர்க்க பெண்கள், படிக்காத பெண்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்கள் என எல்லா தரப்பை சேர்ந்தவர்களும் இந்த மொழிப்போரில் கலந்துக் கொண்டனர். அதை அவர்கள் ஏதோ சாதாரணமாக நடத்தவில்லை. மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழியில், பெண்களை ஒருங்கிணைத்து சிறப்பான அமைப்பை நடத்தினர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களை நாம் மறந்துவிட்டோம். குறிப்பாக இந்த பெண்கள் மீது அப்போது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மிக மோசமானவை. ராஜகோபாலாச்சாரியாரே இந்த பெண்களை குழந்தைகளுக்கு பால் வாங்க காசில்லாமல் இந்த பெண்கள் போராட்டம் செய்து குழந்தைகளோடு சிறைக்கு வருகின்றனர் என விமர்சித்தார். ஆனால் அதையெல்லாம் கண்டித்துவிட்டு இந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்கிறார்.

பட மூலாதாரம், NIVEDITA LOUIS
படிக்க தெரியாதவர்கள், எதுவுமே அறியாதவர்கள் என்ற நிலையில் இருந்து, யாரோ படித்து கூறியதை கேட்டு, உரைகளை கேட்டு, கடினமாக படித்து பெண்கள் போராட்டக்களம் புகுந்தனர். ஆனால், அது எங்கு சறுக்கியது என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று என கூறுகிறார் நிவேதிதா லூயிஸ்.
தமிழ் மொழி உரிமை போரை ஒருங்கிணைத்து கொண்டு வந்த இவ்வளவு பெரிய தலைவர்களின் வரலாறு நீர்த்து போனதற்கு காரணமாக பெரியார் மற்றும் அண்ணாவுக்கு பிறகு பெண்களை தட்டி கொடுத்து அரசியல் களத்திற்கு இழுத்து வரும் தலைவர்கள் யாரும் இல்லாததாக கூட இருக்கலாம் என்று கூறும் இவர், திமுக சில விஷயங்களை செய்திருந்தாலும் இந்த பாரம்பரியத்தை கடத்துவதில் திராவிட கட்சிகள் தோல்வியடைந்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
மேலும் பெண்களுக்கு அரசியல் அறிவெல்லாம் தேவையில்லை, அவர்கள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று சமூகம் சொல்வதை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் இந்த கால பெண்கள் ஆழ்ந்த வாசிப்பின் மூலம் தங்களது பாட்டிகளின் வீரம் செறிந்த அரசியல் வரலாற்றை தெரிந்து கொள்வதே அவர்கள் விடுதலையடைவதற்கான வழி என்பதை வலியுறுத்துகிறார் எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












