You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோலியை நெருங்கிய இளைஞர் யார்? பாலத்தீன ஆதரவு வாசகங்களுடன் வந்த அவர் எந்த நாட்டவர்?
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, பார்வையாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் நுழைந்தார்.
பாலத்தீன கொடி இடம்பெற்ற முகக் கவசமும், பாலத்தீன விடுதலை (Free Palestine), பாலத்தீனம் மீது குண்டுவீசுவதை நிறுத்துங்கள் (Stop Bombing in Palestine) ஆகிய வாசகங்கள் இடம்பெற்ற டி சர்ட்டுடனும் கையில் கொடியுடனும் அவர் காட்சியளித்தார்.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் மைதானத்திற்குள் நுழைந்த அந்த நபரின் பெயர் தெரியவந்துள்ளது. அவர் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்திற்கு போலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கோலியை நெருங்கிய இளைஞர் யார்?
சிறிது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இவரைப் பிடித்து மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றாலும் இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்படுகிறது.
செய்தி நிறுவனமான ANI சமூக ஊடக தளமான X இல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது, அதில் இந்த நபரை காவல்துறை அழைத்துச் செல்கிறது.
இந்த வீடியோவில் அந்த நபர் தனது பெயரை ஜான்சன் என கூறி உள்ளார். அவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்றும் விராட் கோலியை மைதானத்தில் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் கூறுகிறார்.
அவர் பாலஸ்தீன ஆதரவாளர் என்றும் கூறினார்.
ஆமதாபாத் மைதானத்தில் பாதுகாப்பு குறைபாடா?
சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த பாதுகாப்பு குறைபாட்டை பொறுப்பற்றத்தன்மை என்றுக் கூறி விமர்சித்து வருகின்றனர்.
ஆஷிஷ் என்ற நபர் X சமூக வலைதளத்தில் குறிப்பிடுகையில், "நரேந்திர மோதி ஸ்டேடியத்திலேயே பாதுகாப்பு குறைபாடு நடந்துள்ளது. ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுள்ளனர். இது உலகக் கோப்பை இறுதிப் போட்டி, தெரு கிரிக்கெட் அல்ல” என்று விமர்சித்துள்ளார்.
பிரிதேஷ் ஷா என்பவர் எழுதுகையில், "இது மிகவும் தவறானது. பார்வையாளர் எப்படி உள்ளே நுழைய முடியும்? நரேந்திர மோதி மைதானத்தின் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் பொறுப்பற்றதாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
சென்னையிலும் இளைஞர் அத்துமீறல்
முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் இதே இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய லீக் சுற்றில் ஜார்வோ என்கிற டேனியல் ஜார்விஸ் ஆடுகளத்திற்குள் அத்துமீறிச் சென்றார். தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்த் அவரை பாதுகாப்பு ஊழியர்கள் ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றியதோடு, உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்குள் வர டேனியல் ஜார்விஸ்க்கு ஐசிசி தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)