You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கன் உள்பட 66 நாடுகளை பத்திரமாக கடந்து வந்த ஸ்பெயின் தம்பதிக்கு இந்தியாவில் நேரிட்ட கொடூரம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தின் தீவிரம் கருதி, மாநில முதல்வர் சம்பாய் சோரன் இந்த முழு விவகாரம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் டிஜிபி அஜய் குமார் சிங், “இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்,” என்று தெரிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் ஜார்க்கண்டின் காவல்துறை நிர்வாகத்தையும் சட்டம் ஒழுங்கையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் வீடியோவில் கணவன்–மனைவி வேதனை
பிரேசிலில் பிறந்த ஸ்பானிய பெண்ணான ஹியானா, அவரது கணவர் ஜான்(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) உடன் மார்ச் 2ஆம் தேதியன்று காலை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இணைந்து பயன்படுத்தும் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர். வீடியோவில், ஹியானாவும் ஜானும் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்த தகவல்களை அளித்துள்ளனர். அவர் ஸ்பானிய மொழியில் பேசியுள்ள அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “எங்களுக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. என்னை ஏழு பேர் பாலியல் வல்லுறவு செய்தனர். அவர்கள் எங்களை அடித்து, கொள்ளையடித்தனர். அவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை, ஏனெனில் அவர்களுக்கு என்னை வல்லுறவு செய்வதே நோக்கமாக இருந்தது. நாங்கள் மருத்துவமனையில் காவல்துறையுடன் இருக்கிறோம். இந்தச் சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீடியோவில் ஜான், “எனது முகம் சேதமடைந்துள்ளது. ஆனால், ஹியானாவின் நிலை என்னைவிட மோசமாக உள்ளது. அவர்கள் என்னை ஹெல்மெட்டால் பலமுறை அடித்தார்கள். அதிர்ஷ்டவசமாக அவள் ஜாக்கெட் அணிந்திருந்தாள். ஆகையால் அவளுக்குக் காயம் சிறிதளவு ஏற்பட்டது,” என்று கூறியுள்ளார்.
அந்தக் காணொளிகளில், இருவரின் முகத்திலும் பல இடங்களில் காயங்கள் காணப்படுகின்றன. இந்த வீடியோ மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஹியானா, “விசாரணையில் சிக்கல்களை உருவாக்கக் கூடும் என்பதால், வழக்கு குறித்த தகவல்களை வெளியிட காவல்துறை மறுக்கிறது” என்று தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தின் அவர் பகிர்ந்துள்ள சுய விவரக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் குடிமக்கள்
ஜான், ஹியானா இருவருமே ஸ்பானிய சுற்றுலாப் பயணிகள். ஜான் ஸ்பெயினில் உள்ள கிரனாடா என்ற கடலோர நகரத்தில் வசிப்பவர். ஹியானா பிரேசிலை சேர்ந்தவர். அனால், அவர் ஸ்பானிய குடியுரிமையைப் பெற்றுள்ளார். இருவரிடமும் ஸ்பானிய பாஸ்போர்ட் உள்ளது.
மோட்டார் சைக்கிளில் உலகைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இந்தக் கணவன்-மனைவி, கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து 1,70,000 கிலோமீட்ட தூரத்தைக் கடந்துள்ளதாக அவர்களது சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் ஒன்றாகப் பயணிக்கும் இருவரும் இந்தியாவை தொடர்ந்து நேபாளம் வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிருந்தனர். அவர்களது பயணத்தின்போது, ஜான் - ஹியானா தம்பதி இரான், இராக், இத்தாலி, ஜார்ஜியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைக் கடந்து வந்துள்ளனர்.
இந்தத் தம்பதி கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவில் இருந்தனர். ஜார்க்கண்ட் வருவதற்கு முன், அவர்கள் தென்னிந்தியா, காஷ்மீர், லடாக், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளனர்.
சமூக ஊடகங்களில் அவர்களுக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தவிர, யூடியூப்பிலும் அவர்கள் பிரபலமாக உள்ளனர்.
ஜார்க்கண்டில் என்ன நடந்தது?
ஹியானாவும் ஜானும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பிகார் வழியாக நேபாளம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டமாக இருந்தது. அவர்கள் இருவருமே சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளனர்.
மார்ச் 1ஆம் தேதி இரவு, அவர் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கினார்கள். அப்போது சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தமது மற்ற நண்பர்கள் சிலரை அங்கு அழைத்தனர். அவர்கள் அனைவரும் ஜான், ஹியானாவின் கூடாரத்திற்குள் நுழைந்து ஹியானாவை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.
அப்போது, ஹியானா, ஜான் இருவரும் தாக்கப்பட்டனர். ஹியானாவின் குற்றச்சாட்டுப்படி, அவர்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அவர்களது கூடாரத்தையும் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் திகிலடைந்த ஜான், ஹியானா இருவரும் தங்களது பொருட்களைச் சேகரித்துக் கொண்டு சாலைக்கு வந்தனர். பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹன்ஸ்திஹா காவல் நிலைய போலீசார், இரவு 10:30 மணியளவில் இருவரும் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து விசாரித்தனர். போலீசார் அவரை சரையாஹாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஹியானாவுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை பற்றிய முழு தகவலும் கிடைத்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)