அணுகுண்டு வீச்சில் இருந்து 2 முறை தப்பிய நகரம் - 3 முறை சுற்றி வந்தும் அணுகுண்டை வீசாத விமானம்

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images
- எழுதியவர், பெர்னாண்டோ டுவார்டே
கோகுரா எனும் நகரம் இப்போது இல்லை.
இந்த நகரம், 1963 ஆம் ஆண்டு மற்ற நான்கு ஜப்பானிய நகரங்களுடன் இணைந்து கிடாக்யுஷு என்ற புதிய நகரமாக உருவாக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு ஜப்பானில் உள்ள இந்த நகரத்தின் மக்கள் தொகை ஒரு மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது.
கோகுரா என்ற பெயர் இன்னும் ஜப்பான் மக்களின் நினைவில் உள்ளது. இந்த நகரம், எந்தவொரு நிர்வாக முடிவாலும் தப்பவில்லை, மாறாக, மிகவும் துயரமான மற்றும் கொடூரமான பேரழிவிலிருந்து நூலிழையில் அதிசயமாக தப்பியது.
1945 ஆம் ஆண்டு, அமெரிக்கா அணுகுண்டு வீசத் தேர்ந்தெடுத்த நகரங்களில் கோகுராவும் ஒன்று. ஆனால் இரண்டாம் உலகப் போரின் கடைசி நாட்களில், இந்த நகரம் இரண்டு முறை அழிவிலிருந்து அதிசயமாகத் தப்பியது.
உண்மையில், ஆகஸ்ட் 9 அன்று கோகுரா மீது அணுகுண்டு வீச திட்டமிடப்பட்டிருந்தது. ஹிரோஷிமா மீது வீசப்பட்டதைப் போலவே, சில நிமிடங்களில் அந்த குண்டும் வீசப்படவிருந்தது.
ஆனால் பல காரணங்களால், அமெரிக்க விமானப்படை கோகுராவை விட்டுவிட்டு நாகசாகியை குறிவைத்தது. இதனால் கோகுரா அழிவிலிருந்து தப்பியது.
அணுகுண்டுவீச்சில் ஹிரோஷிமாவில் சுமார் 1,40,000 பேர் மற்றும் நாகசாகியில் 74,000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக கதிர்வீச்சின் பாதிப்பால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாயினர்.
'கோகுராவின் அதிர்ஷ்டம்' என்பது இன்று ஜப்பானில் ஒரு பழமொழியாகவே மாறியுள்ளது. மிகப்பெரிய ஆபத்திலிருந்து அதிசயமாக தப்பியதைக் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
மேகத்தாலும் புகையாலும் சூழப்பட்டிருந்த நகரம்

பட மூலாதாரம், AFP via Getty Images
1945ம் ஆண்டு ஜூலை மாத நடுப்பகுதியில், அமெரிக்க ராணுவம் ஜப்பானில் 12 நகரங்களை அணுகுண்டு தாக்குதலுக்காக தேர்ந்தெடுத்தது. இந்த நகரங்களில் ராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற முக்கிய இடங்கள் இருந்தன.
அணுகுண்டு முதலில் வீசப்படவிருந்த நகரங்களில் ஹிரோஷிமா முதலில் இருந்தது. அதற்குப் பிறகு கோகுரா இரண்டாவது இலக்காக இருந்தது. கோகுரா ஒரு முக்கிய ஆயுத உற்பத்தி மையமாக இருந்தது, ஜப்பானிய ராணுவத்துக்குச் சொந்தமான பெரிய ஆயுதக் கிடங்கும் இங்கு இருந்தது.
ஏதாவது காரணத்தால், ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது குண்டு வீச முடியாமல் இருந்திருந்தால், கோகுரா தான் முதல் இலக்காக மாறியிருக்கும்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில், பி-29 விமானங்கள் கோகுராவை நோக்கிப் புறப்பட்டன.
அவற்றில் ஒன்று 'பாக்ஸ்கார்' என்ற பெயருடைய விமானம், 'ஃபேட் மேன்' என அழைக்கப்படும் புளூட்டோனியம் அணுகுண்டை எடுத்துச் சென்றது. இந்த குண்டு, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட யுரேனியம் குண்டை விட அதிக சக்தி வாய்ந்தது.
ஆனால் அன்று காலை, கோகுரா நகரம் மேகங்களால் மூடப்பட்டிருந்தது. அதற்கு மேலாக, அதன் அருகிலுள்ள யவடா நகரத்தில் முந்தைய நாள் நடந்த குண்டுவீச்சால் வானத்தில் புகை பரவியிருந்தது. இதனால், விமானங்களில் இருந்து தரையை தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டிருந்தது.
கோகுராவின் தொழிற்சாலைகள் வேண்டுமென்றே நிலக்கரியை எரித்து, நகரம் முழுவதும் புகை மூட்டத்தை உருவாக்கியிருக்கலாம். இதனால், அடிக்கடி நடக்கும் விமானத் தாக்குதல்களில் இருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர் என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க ராணுவ ஆவணங்களும், அந்த பயணத்தில் பங்கேற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் வில்லியம் லாரன்ஸ் எழுதிய அறிக்கையும், பி-29 விமானங்கள் கோகுரா மீது மூன்று முறை சுற்றி வந்ததாகக் கூறுகின்றன.
அமெரிக்க விமானப்படைக்கு, இலக்குகளை கண்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தால் மட்டுமே அணுகுண்டு வீச வேண்டும் என்ற உத்தரவு இருந்தது. இதனால் அதிகபட்ச அழிவை ஏற்படுத்த முடியும் என அவர்கள் எண்ணினர்.
ஆனால் இலக்கை உறுதிப்படுத்துவதற்கு முன்பே, கோகுராவில் தரையில் இருந்த ஜப்பானிய படையினர் விமானங்களை பார்த்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது 'பாக்ஸ்கார்' என்ற விமானத்தை இயக்கிய மேஜர் சார்லஸ் ஸ்வீனி, விமானம் ஏற்கனவே நிறைய எரிபொருளைப் பயன்படுத்திவிட்டதால், கோகுராவை விட்டுவிட்டு நாகசாகி நோக்கி பறக்க முடிவு செய்தார்.
இந்த வகையில், கோகுரா இரண்டாவது முறையாக அணுகுண்டு தாக்குதலிலிருந்து அதிசயமாக தப்பியது.
அமெரிக்காவின் உத்தி

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images
மார்ச் 1945 முதல், அமெரிக்க விமானங்கள் ஜப்பானில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தின. இந்த தாக்குதல்களில் தீயைப் பரப்பும் குண்டுகள் (incendiary bombs) பயன்படுத்தப்பட்டன. இவை நகரங்களை முழுவதுமாக சாம்பலாக்கும் அளவுக்கு தீவிரமானவை.
மார்ச் 9 ஆம் தேதி இரவில் டோக்கியோவில் நடந்த ஒரு தாக்குதலில் மட்டும் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடிழந்து துயரமடைந்தனர்.
ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் பி -29 விமானங்கள் கோகுரா மீது பறந்தபோது, அந்த நகரம் எந்தவித சேதத்தையும் சந்திக்கவில்லை.
கோகுரா மீது தீயைப் பரப்பும் குண்டுகளின் தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டது. அமெரிக்க ராணுவ அதிகாரிகள், அணு ஆயுதங்கள் ஏற்படுத்தும் சேதங்களை நன்கு ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காக, தாக்குதலுக்கு முன் கோகுரா நகரத்தை முடிந்தவரை சேதமடையாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
தொடக்கத்தில், அணுகுண்டு தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் நாகசாகி இல்லை. ஆனால் பின்னர், அமெரிக்க போர் செயலாளர் ஹாரி ஸ்டிம்சன் அதை பட்டியலில் சேர்த்தார்.
ஜப்பானின் பழைய தலைநகரான கியோட்டோ மீது தாக்குதல் நடத்தினால், போருக்குப் பிறகு ஜப்பானும் அமெரிக்காவும் நல்லுறவை உருவாக்குவது மிகவும் கடினமாகிவிடும் என்று ஸ்டிம்சன் கருதினார்.
இதை அவரால் அப்போதைய அதிபர் ஹாரி ட்ரூமனிடம் விளக்கி, அவரை நம்ப வைக்க முடிந்தது.
ஆனால், ஸ்டிம்சனுக்கு கியோட்டோவுடன் தனிப்பட்ட பிணைப்பு இருந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவர் ஜப்பானுக்குப் பல முறை சென்றிருந்தார். அவர் தனது தேனிலவைக் கூட கியோட்டோவில் கழித்ததாக நம்பப்படுகிறது.
நிவாரணம் மற்றும் சோகம்

பட மூலாதாரம், Kitakyushu City handout
ஆகஸ்ட் 15, 1945 அன்று, ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோ, ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைகிறது என்று அறிவித்தார்.
இப்போது கிடாக்யுஷு என அழைக்கப்படும் கோகுரா, அணுகுண்டு தாக்குதலிலிருந்து தப்பியது. ஆனால் மக்கள் மனதில் கவலையும் பதற்றமும் இருந்தது.
நாகசாகி மீது வீசப்பட்ட குண்டு, முதலில் தங்கள் நகரம் மீது வீசப்படவிருந்தது என்பதை கோகுரா மக்கள் அறிந்தபோது, அவர்களுக்கு சோகமும், நிம்மதியும், நாகசாகி மக்கள் மீது அனுதாபம் கலந்த உணர்வும் ஏற்பட்டது.
கிடாக்யுஷுவில், நாகசாகி அணுகுண்டு நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. இது, முன்னாள் ஆயுதக் கிடங்கின் மைதானத்தில் உள்ள ஒரு பூங்காவில் அமைந்துள்ளது.
இந்த நினைவுச்சின்னம், கோகுரா நகரம் சிறு இடைவெளியில் தப்பியதையும், நாகசாகி சந்தித்த துயரத்தையும் நினைவுகூர்கிறது.
1973 முதல், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இங்கு இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
2022ஆம் ஆண்டு, கிடாக்யுஷு நகர அமைதி அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

இந்த இரண்டு நகரங்களும் பல ஆண்டுகளாக நட்புறவுடன் உள்ளன. அவற்றின் விதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன என்ற கருத்தை அனைவரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் கிடாக்யுஷு நகரம் பெரிய மாற்றங்களைச் சந்தித்தது. ஜப்பானின் மறுகட்டமைப்பின் போது, இந்த தொழில்துறை நகரம் மிகவும் மாசுபட்டதால், அதன் டோக்காய் விரிகுடா கிட்டத்தட்ட தண்ணீரை இழந்தது.
இப்போது, இந்த நகரம் ஆசியாவின் மிகப் பசுமையான நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பல ஆண்டுகளாக செய்யப்பட்ட முதலீட்டால் சாத்தியமானது.
கடந்த காலத்தை ஒருபோதும் மறக்காத இந்த நகரம், எதிர்காலத்தை நோக்கி உறுதியாக நகர்ந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












