திருவண்ணாமலை: தலித் பெண் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்வதை காவல்துறை தடுத்ததா? புதிய சர்ச்சை

திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சடலத்தை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவு மக்கள் போராடினர்.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

'பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் உடலை பொது வழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது' என்று காவல்துறையினரே தடுத்ததாக திருவண்ணாமலையில் சர்ச்சை எழுந்துள்ளது.

"பாதை மறுக்கப்பட்டதால் நாள் முழுக்க சடலத்தை வைத்துப் போராடினோம்", என்று பட்டியலின மக்கள் கூறுகின்றனர்.

"பொது வழியில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை."என்கிறார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

பட்டியல் பிரிவு பெண்ணின் சடலத்தைக் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?

திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்துள்ள மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிளியம்மாள். சென்னையில் தனது மகளுடன் வசித்து வந்த இவர், கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 54.

பட்டியல் பிரிவினர் குற்றச்சாட்டு

சொந்த ஊரில் அடக்கம் செய்ய தீர்மானித்து கிளியம்மாளின் உடலை சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மோத்தக்கல் கிராமத்திற்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர்.

"கிராமத்தின் ஒருபுறம் பட்டியல் பிரிவினர் அதிகம் வசிக்கின்றனர். அதன் பின்புறம் வழியாக இறந்தவர்களின் உடலை வழக்கமாக கொண்டு செல்வோம். அந்தப் பாதை கரடுமுரடாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், பொதுப் பாதையில் கிளியம்மாளின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் தீர்மானித்தோம். இதுபற்றி டி.எஸ்.பி முருகனிடம் தெரியப்படுத்திய போது, 'பொது வழியில் சடலத்தைக் கொண்டு செல்லுங்கள். ஆனால் பட்டாசு வெடிக்க வேண்டாம்' என கூறினார்" என்று பிபிசி தமிழிடம் மஞ்சுநாதன் குறிப்பிட்டார்.

சடங்குகளை முடித்துவிட்டு கிளியம்மாளின் உடலை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முற்பட்ட போது அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. அதற்குள் பொதுப் பாதையில் குவிக்கப்பட்டுவிட்ட காவல்துறையினர், கிளியம்மாளின் உடலை அவ்வழியே சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்ததாகவும், பிற சமூகத்தினர் எதிர்ப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றதாகவும் மஞ்சுநாதன் கூறினார்.

ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம்

இதையடுத்து, கிளியம்மாளின் உடலை வைத்துக் கொண்டு பட்டியல் பிரிவினர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, அங்கே சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டியல் பிரிவு மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இறந்தவரின் உடலை நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், நாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வழியை சீரமைத்துத் தந்தால் அவ்வழியே உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதாக ஒப்புக் கொண்டோம் என்கிறார் மஞ்சுநாதன். அதனைத் தொடர்ந்து, மாலை வரையிலும் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கிளியம்மாளின் உடலுடன் பட்டியல் பிரிவு மக்கள் அங்கேயே இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில், பட்டியல் பிரிவினர் வழக்கமாக பயன்படுத்தும் பாதையின் குறுக்கே கட்டப்படும் வீட்டிற்கு அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளருடன் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில், அந்த நிலத்தின் வழியே கிளியம்மாளின் உடலை எடுத்துச் செல்ல அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அந்த பாதை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தற்காலிகமாக சரிசெய்யப்பட்டு, அவ்வழியே கிளியம்மாளின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, நில உரிமையாளர்கள் சிலரிடம் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிற சமூகத்தினர் கூறுவது என்ன?

பட்டியல் பிரிவினர் வழக்கமாக பயன்படுத்தும் பாதையில் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதே பிரச்னைக்கு காரணம் என்கிறார் பிற சமூகத்தைச் சேர்ந்த ரமேஷ். "பட்டியல் பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியின் பின்புறம் வழியாக சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது அவர்களின் வழக்கம். அதே வழியை அவர்கள் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால் எந்த பிரச்னையும் எழுந்திருக்காது. ஆனால், அந்தப் பாதையில் அதே பிரிவைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதனால் தேவையற்ற பிரச்னை ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டதால் பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது" என்று ரமேஷ் கூறினார். பொதுப்பாதை குறித்து நேரடியாக எதுவும் பேசுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?

இந்த சர்ச்சை குறித்து டி.எஸ்.பி முருகனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசியபோது, "பிரச்னை என்பது சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை தொடர்பானது. மாவட்ட ஆட்சியரிடம் தான் நீங்கள் பேச வேண்டும்" என்றார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

"சுடுகாட்டுக்குச் செல்வதற்கு பட்டியல் பிரிவு மக்களுக்கு பாதை ஒன்று உள்ளது. அந்தப் பாதையை அதே சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் வீடு கட்டி மறித்துவிட்டார். பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் இது தான். மோத்தக்கல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் அதிகம் வசிக்கும் இடத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சுடுகாடு உள்ளது. பட்டியல் பிரிவினர் சுடுகாட்டுக்குச் செல்ல வழக்கமாக பயன்படுத்தும் பாதையில் 13 தனி நபர்களின் பட்டா நிலங்கள் உள்ளன. இவர்கள் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாரும் சடலத்தைக் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று பாஸ்கர பாண்டியன் கூறினார்.

சுரேஷ் என்பவர் கட்டி வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள பட்டா நிலத்தை சமன்படுத்தி, அதன் வழியே பெண்ணின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "அந்த பட்டா நிலத்தின் உரிமையாளர் பிற சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்றார்.

திருவண்ணாமலை, தலித் பெண் சடலம்
படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

பொதுப் பாதையை பட்டியல் பிரிவினர் பயன்படுத்த அனுமதி மறுப்பா?

பட்டியல் பிரிவைச் சேர்ந்த கிளியம்மாளின் உடலை பொதுவழியில் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதை காவல்துறை தடுத்ததா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், "பொது வழியில் யார் வேண்டுமானாலும் செல்லலாம். அதில் எந்த தடையும் இல்லை. ஆனால், அதனால் சட்டம்-ஒழுங்கு சிக்கல் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)