You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவின் கொடூர நிலைமை - மக்களின் துயரத்தைச் சொல்லும் புகைப்படங்கள்
அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது.
ஒரே நாளில் கொல்லப்பட்ட 700 மக்கள், ஐ.நா கண்டனம்
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோன்யோ கூட்டேரெஷ், காஸாவில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை மீறுவதாக அமைந்திருக்கின்றன என்றும், அதுகுறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும்’ தெரிவித்திருக்கிறார்.
கூட்டேரெஷ் குடிமக்களை ‘மனிதக் கேடயங்களாக’ பயன்படுத்துவதையும், மக்கள் வெளியேற்ற உத்தரவுக்குப் பிறகும் தெற்கு காஸா மீது குண்டுவீசுவதையும் கண்டித்திருக்கிறார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ‘காரணமின்றி நடக்கவில்லை’ என்று கூட்டேரெஷ் கூறியதற்கு இஸ்ரேலிய தூதர்கள் கோபமாக எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர்.
மின்சாரம், மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக காஸாவில் மூன்றில் ஒரு பகுதி மருத்துவமனைகள் செயல்படவில்லை. சுத்தமான தண்ணீருக்கும் மிகத்தீவிரமான பற்றாக்குறை இருக்கிறது.
பல குடியிருப்புக் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருக்கின்றன.
கான் யூனிஸில் குடியிருப்புகளின் மீது தாக்குதல்
முன்னர், வடக்கிலிருக்கும் காஸா நகரத்திலிருந்து மக்களை தெற்கு நோக்கி இடம்பெயரச் சொல்லியிருந்தது.
ஆனால், இஸ்ரேல் நேற்று தெற்கிலிருக்கும் யூனிஸ் மற்றும் ரஃபா ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதில் கான் யூனிஸில் பொதுமக்கள் குடியிருக்கும் இரண்டு கட்டடங்களின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் படுகாயமடைந்திருக்கின்றனர்
கான் யூனிஸ் நகரில் நிரம்பி வழியும் மக்கள்
நடந்துவரும் இந்த மோதல்களால் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் பல லட்சம் மக்கள் காஸா முழுவதுமுள்ள ஐ.நா. முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
கான் யூனிஸ் நகரத்தில், மிகச்சிறிய வீடுகளில் பல மக்கள் நெருக்கடியில் வசித்து வருகின்றனர். சில இடங்களில் இரன்து படுக்கையறைகள் இருக்கும் வீட்டில் 50 பேர் வசிப்பதாக அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.
தீவிரமடையும் மனிதாபிமானப் பேரழிவு
பாலத்தீனிய மக்களுக்கான ஐ.நா மீட்புக் குழு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
சில உதவி டிரக்குகள் முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் நுழைந்திருந்தாலும், உதவி நிறுவனங்கள் தொடர்ந்து ஒரு பேரழிவு நிலைமை குறித்து எச்சரித்து வருகின்றன. குறிப்பாக காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளில் சூழ்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில், காஸாவில் எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருவதாகவும், இன்று (புதன்கிழமை, அக்டோபர் 25) இரவு எரிபொருள் தீர்ந்துவிடும் என்றும் அங்கிருக்கும் ஐ.நா மீட்புப் பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் மனிதாபிமானப் பணிகள் தடைபடலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் குழு எரிபொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்
இந்நிலையில் செவ்வாயன்று (அக்டோபர் 24) ஹமாஸ் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை பாதுகாப்பாக விடுவிக்கக்கோரி இஸ்ரேலியர்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் தலைமையகத்துக்கு முன் போராட்டம் நடத்தினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)