கச்சத்தீவில் கண்டது என்ன? உயிர் பயம் காட்டிய படகு அனுபவம் - ஒரு செய்தியாளரின் பயணக்குறிப்பு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீட்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்ற விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், கொழும்புவில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்தி சேகரிக்கும் செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் கச்சத்தீவுக்கு தாம் மேற்கொண்ட பயண அனுபவத்தை நேயர்களோடு பகிர்ந்துகொள்கிறார்:
இலங்கை - இந்திய கடல் எல்லை பகுதியான கச்சத்தீவு பகுதிக்குள் செல்வதற்கு வருடத்தில் ஒரு தடவை மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
கச்சத்தீவு பகுதியிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர உற்சவத்தை முன்னிட்டு, இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்குவது வழமையானது.
அந்தோணியார் திருவிழா தவிர, கச்சத்தீவு பகுதிக்குள் செல்வதற்கு யாருக்கும் எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படாது.
ஆனால், நான் இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் தொடர்பிலான செய்தி சேகரிப்பிற்காக (வேறொரு செய்தி நிறுவனத்துக்காகப் பணியாற்றியபோது) 2014ஆம் ஆண்டு கச்சத்தீவு பகுதிக்குள் சென்றிருந்தேன்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் (பாதுகாப்பு அமைச்சு) 2014 மார்ச் மாதம் கச்சத்தீவு நோக்கி பயணித்தேன். யாழ்ப்பாணத்தின் குருநகர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவப் படகொன்றில் கச்சத்தீவு நோக்கிய எமது பயணத்தை நாம் ஆரம்பித்தோம்.

பட மூலாதாரம், Screengrab/Google Maps
யாழ்ப்பாணம் முதல் கச்சத்தீவு வரை
யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கச்சத்தீவு நோக்கி பயணிக்கும் போது, மிக முக்கியமான தீவான நெடுந்தீவு உள்ளிட்ட பல சிறிய தீவுகளை கடக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 8 மணிநேர பயணத்தின் பின்னர், கச்சத்தீவை நாம் சென்றடைந்தோம்.
கச்சத்தீவு அருகில் வந்தபோது, மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவை நம்மால் காண முடிந்தது.
கடும் சீற்றத்துடனான கடல், கடும் காற்று மற்றும் கடும் வெப்பத்துடனான வானிலை என அனைத்தையும் தாண்டி, கச்சத்தீவை மாலை வேலையில் நெருங்கினோம்.
இவ்வாறான நிலையில், கச்சத்தீவு கரையோர பகுதியில் எமது படகை நிறுத்தி, நாம் கச்சத்தீவு நிலப்பரப்பில் தரையிறங்கினோம்.
கச்சத்தீவுக்குள் நாம்
எம்மை வரவேற்கும் வகையில் அந்தோணியார் சிலை, அந்தோணியார் தேவாலயம் என கிறிஸ்தவ மதத்தை பிரதிபலிக்கும் வகையிலான சிறு சிறு கட்டமைப்புகள் அவதானிக்கக்கூடியதாக இருந்தன.
கச்சத்தீவில் தரையிறங்கிய போது, அங்கு ஒருவரை கூட எம்மால் பார்க்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, கச்சத்தீவு நிலப்பரப்பிற்கு சென்று, கச்சத்தீவு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ந்தோம்.
நாம் சென்ற சந்தர்ப்பத்தில், கச்சத்தீவில் மரங்கள், செடிகள், கற்பாறைகள், சிற்பிகள், முள் தாவரங்கள் ஆகியவை சேர்ந்த இயற்கை அழகு காணக்கூடியதாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றாலும், அது இந்தியாவுக்கு அருகிலிருப்பதை அங்கு சென்ற என்னால் உணர முடிந்தது.
கச்சத்தீவுக்கு சென்ற எனக்கு அன்று பல்வேறு உண்மை நிலைமைகளை கண்டறிவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று சொல்லப்பட்டாலும், நான் சென்ற சந்தர்ப்பத்தில் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்கள் கச்சத்தீவை தாண்டி, இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தரும் காட்சிகளை காணக்கூடியதாக இருந்தது. இந்த காட்சிகளை நாம் எமது கேமராவில் முழுமையாக பதிவும் செய்தோம்.
அன்றைய தினம் இலங்கை கடற்பரப்பிற்குள் வருகை தந்த இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம், நெடுந்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடற்பரப்பிற்குள் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட காட்சிகளை எம்மால் பதிவு செய்ய முடிந்தது.
குறிப்பாக தடை செய்யப்பட்ட இழுவை முறையிலான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட காட்சிகளையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பிற்கு வருதைத் தந்து எவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பதை முழுமையாக அறிந்துகொள்ள, அன்றிரவு கச்சத்தீவில் நேரம் செலவிட முடிவு செய்தோம்.
கச்சத்தீவுக்குள் சென்று, இரவு வேளையைக் கடத்திய முதல் ஊடகவியலாளர் குழு நாம் என்பதை, எனது தலைமையில் சென்ற ஊடகவியலாளர் குழு, அன்று வரலாற்றில் பதிவு செய்தது.
அதேசமயம், கச்சத்தீவில் தங்குவதற்கான எந்தவொரு ஏற்பாட்டையும் நாங்கள் ஏற்கனவே செய்திருக்கவில்லை. எனினும், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம் எமக்கு அன்றிரவை கடத்துவதற்கு அடைக்கலம் வழங்கியது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு சென்ற பாண் (பன்), எமக்கு இரவு நேர உணவாக இருந்தது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தை விட்டு வெளியில் சென்றால், முழுமையாக இருள் சூழ்ந்த ஓர் அச்சம் தரும் சூழ்நிலைதான் காணப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கடும் இருள், கடல் காற்று, கடல் சத்தம், நிலவின் சிறிய வெளிச்சம் ஆகியவை முழுமையான இயற்கையை ரசிப்பதற்கான சந்தர்ப்பம் அளித்தாலும், யாரும் இல்லாத தீவில் இரவில் தனியாக இருப்பது மனதிற்கு ஏதோ வகையான ஒரு அச்சத்தையும் கொடுத்தது.
எனினும், தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, நாம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் தங்கியிருந்தோம்.
இரவு நித்திரையில் இருக்கும் போது, எம்முடன் வருகை தந்த ஒளிப்பதிவாளர் மீது எலியொன்று ஏறி ஓடி, அவர் கூச்சலிட்டதை இன்றும் மறக்க முடியாது.
உயிர்பயத்தை உணர்ந்தோம்
இந்த நிலையில், அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவிலிருந்து பார்க்கும் போது, இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இதையடுத்து, நாம் மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி அதிகாலை 3.30 அளவில் எமது பயணத்தை தொடங்கினோம்.
இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகிற்கு அருகில் சென்று, அந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே உயிர் ஆபத்தின் உச்சத்தை என்னால் உணர முடிந்தது.
இந்திய மீனவர்களின் படகுகளுக்கு அருகில் சென்று ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இந்திய மீனவர்கள் தங்கள் படகை, முன்னோக்கி நகர்த்த ஆரம்பித்தார்கள்.
எமது படகோ சிறிய ரக மீன்பிடி படகு, இந்திய மீனவர்களின் படகு மிக அதிகத் திறன் கொண்ட பெரிய படகு.
எமது சிறிய ரக படகை நோக்கி, இந்திய மீனவர்கள் தமது படகை நகர்த்த ஆரம்பித்த நிலையில், கடல் அலைகள் மேலெழுந்தன.
எமது படகு கவிழும் வகையில் சென்றதை அடுத்து, படகிலிருந்து எமது குழு உயிர் ஆபத்தின் உச்சத்தை அன்று உணர்ந்தது.
எனினும், கூச்சலிட்டு, இந்திய மீனவர்களின் படகுகளிடமிருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொண்டோம்.
கடல் எல்லையை தாண்டுவதில்லை என இந்திய மீனவர்கள் எவ்வளவு கூறினாலும், இலங்கை தீவின் வட பகுதி நிலப்பரப்புக்கு அருகில் இரவிரவாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததை அன்று எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
இலங்கை இந்தியாவிற்கு இடையில் சரியான கடல் எல்லை இல்லாத போதிலும், கச்சத்தீவை எல்லையாக இந்திய மீனவர்களுக்கு கருத முடியும்.
கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை அன்று விரட்டியடிக்கவில்லை.
ஆனால், நெடுந்தீவை அண்மித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படை விரட்டியடித்தது மாத்திரமன்றி, சிலரை கைது செய்திருந்தது.
கச்சத்தீவில் என்ன நடக்கின்றது என்பது குறித்து, ஆராய்வதற்காக அந்த தீவிற்கு சென்று செய்தி சேகரித்த முதலாவது ஊடகவியலாளர் நாம்.
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதை அன்று எம்மால் உறுதியாக, காணொளி ஆதாரங்களுடன் வெளிக்கொணர முடிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













