மஹிந்த ராஜபக்ஷ: "இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்"

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். "மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும் அவர் கூறினார். முக்கிய இறக்குமதிகளை செய்ய இயலாத வகையில் போதிய பணமின்றி இலங்கை அரசாங்கம் தவித்து வருவதாகக் கூறி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் இலங்கையின் பல்வேறு நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமயாக உயர்ந்துள்ளன. எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படுமானால், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இந்த கருத்தை அவர் வெளியிட்டார்.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க, பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சரான டளஸ் அழகபெரும கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார். அது பற்றி அவரிடம் ஊடகவியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த பிரதமர், மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.
ஒவ்வொருவருடைய கொள்கைகளும், ஒவ்வொருவருடைய இணக்கப்பாடுகளும் இல்லாமல் எவ்வாறு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ மறுகேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அல்லது வேறு அமைச்சர்களைக் கொண்டு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு, ஏனையோர் விரும்புவார்கள் என தான் நம்பவில்லை என்றும் மஹிந்த தெரிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வரும் கருத்து குறித்தும் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கருத்தை பிரதிபலிக்கவில்லை. வரலாறு பற்றிய தெளிவில்லாத சிலர் அவ்வாறு கூறக்கூடும் என்றார்.
கட்சி தொடர்பிலும், அரசியல் தொடர்பிலும் தன்னிடம் எவரும் அத்தகைய கருத்தையும் முன்வைக்கவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஆளும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, ''போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், தீர்வை பெற்றுக்கொடுக்க அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தரவில்லை. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருகை தராதவரை போராட்டங்கள் தொடரவே செய்யும். பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அலரி மாளிகை திறந்திருக்கும். அவர்கள் வரும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டால், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் வருமாறு நான் அழைக்கிறேன்" என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













