இலங்கையில் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? திடீரென இயற்கை உரத்தை கட்டாயமாக்கியது காரணமா?

இலங்கை
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ், இலங்கையிலிருந்து

இலங்கையில் ரசாயன உரத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தத் தடை இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருளாதார நெருக்கடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று கருத்துத் தெரிவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, "மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்? இலங்கையில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத அளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும்" என்று தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்து இலங்கையின் விவசாயத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை சுட்டிக்காட்டுவதாக இருந்தது. உரத் தட்டுப்பாடு, விளைந்த பொருட்களை விற்பதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றால் இலங்கையின் விவசாயிகள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்னைகள் அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அறிகுறிகள்.

இந்த நிலையில்தான் இலங்கையில் ரசாயன உரத்திற்குத் தடை விதித்ததன் மூலம் பெரும் தவறிழைத்துவிட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

உரம்

ரசாயன உர பிரச்னையின் பின்னணி

இலங்கையின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு சுமார் 7 சதவீதமாக இருக்கிறது. மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் பேர் விவசாயத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இனி ரசாயன உரங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும் இயற்கை உரங்களையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவித்தது. ரசாயன உரங்களால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதால் இந்த முயற்சி என வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், டாலர் தட்டுப்பாடும் இதற்கு ஒரு காரணம்.

பல்வேறு காரணங்களால் இலங்கையில் அந்நியச் செலவாணி வெகுவாகக் குறைந்ததால், பல இறக்குமதிகளைத் தடைசெய்துவந்த இலங்கை, ஒரு கட்டத்தில் ரசாயன உரத்தின் இறக்குமதிக்கும் தடை விதித்து, விவசாயிகளை இயற்கை உரத்தைப் பாவிக்கும்படி கூறியது.

இலங்கை அரசின் இந்த முடிவு, இலங்கையின் விவசாயத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது.

விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

முல்லைத் தீவு மாவட்டத்தில் கொக்குத் தொடுவாய் கிராமத்தில் தனது ஐந்து ஏக்கர் காணியில் விவசாயம் செய்துவரும் சிவஞானசுந்தரம், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனக் கூறியதால் பெரும் இழப்பைச் சந்தித்ததாகத் தெரிவிக்கிறார்.

"இவர்கள் திடீரென்று இயற்கை உரங்களையே நீங்கள் பயன்படுத்துங்கள். ரசாயன உரத்தைப் பயன்படுத்த முடியாது. அதனை நாங்கள் வாங்கித் தரப்போவதில்லை என்று அறிவித்தார்கள். எங்களுக்கும் அதைக் கேட்க நல்லாத்தான் இருந்தது. ஆகவே அதன்படி செய்தோம். ஆனால், இழப்புதான் ஏற்பட்டது. இது தவிர, இன்னொரு பிரச்சனையும் எழுந்தது. அதாவது இயற்கை உரத்தில் இருந்த விதைகள், நாங்கள் போட்ட பயிர்களைச் சுற்றி களைகளாக வளரத் துவங்கின. ஒரு சின்ன மழைக்கே நாங்கள் வைத்த பயிரைவிட அவை வேகமாக வளர்ந்தன. களைக் கொல்லிகளும் இல்லாத நிலையில் இது பெரும் பிரச்சனையாக மாறியது" என்கிறார் சிவஞான சுந்தரம்.

இலங்கை

எல்லோரும் இயற்கை உரங்களையே பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு இயற்கை உரமும் கிடைக்கவில்லை.

இதனால், தேயிலை, அரிசி, புகையிலை, காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் கடுமையான பொருள் இழப்புக்கு ஆளானார்கள். குறிப்பாக நெல் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

"2020-21 காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்திலிருந்து 25 முதல் 30 மூட்டை நெல்லைப் பெற்றுக் கொண்டோம். இந்த வருடம் அதே நிலத்திலிருந்து 5 மூட்டை, பத்து மூட்டை நெல்லைக்கூட நாங்கள் பெறவில்லை. அதற்கு முக்கியக் காரணம் இந்த சேதனப் பசலையைப் (இயற்கை உரத்தை) பாவிச்சது. யூரியா இல்லாமல் நாங்கள் பயிர் செய்ய இயலாது" என்கிறார் முல்லைத் தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவலிங்கம்.

சிவலிங்கம்

ரசாயன உரத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் நைட்ரஜன் இருந்தது என்றால், விவசாயிகளுக்குக் கிடைத்த இயற்கை உரத்தில் சுமார் 16 சதவீதம் அளவுக்கே நைட்ரஜன் இருந்தது. இதனால் விளைச்சல் அடிவாங்கியது.

"இயற்கை உரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால், எதிர்காலத்தில் அதற்குரிய நன்மைகள் எங்களுக்குக் கிடைக்குமோ தெரியலை. ஆனால், இப்போது கிடைக்கவில்லை. இழப்புதான் ஏற்பட்டது." என்கிறார் முல்லைத் தீவைச் சேர்ந்த கிட்ணபிள்ளை சிவகுரு.

இதுதவிர, ரசாயன களைக் கொல்லிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதில் இரண்டு பிரச்சனை ஏற்பட்டது. ஒன்று, களைகளை ஆட்களை வைத்து கையால் அகற்ற வேண்டியதிருந்ததால் கூடுதல் தொகையை விவசாயிகள் செலவழிக்க வேண்டியிருந்தது. மற்றொரு பக்கம், இயற்கை உரமாக பெரிதும் கால்நடைகளின் சாணமே பயன்படுத்தப்பட்டதால், அதிலிருந்த விதைகள் கூடுதல் களைகள் முளைக்கக்காரணமாயின.

யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிட்டத்தட்ட 70 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார் வடமாகணத்தில் உள்ள விவசாய கூட்டுறவு சங்கங்களில் ஆலோசகராக செயல்பட்டுவரும் தனபால சிங்கம் துளசிராம்.

"அரசாங்கம் இயற்கை உரங்களைத்தான் பயன்படுத்த வேண்டுமென அறிவித்தபோது எல்லா விவசாயிகளிடமும் இயற்கை உரக் கிடங்குகள் கிடையாது. வெளியிலிருந்துதான் வாங்க வேண்டியிருந்தது. ஆனால், எல்லா விவசாயிகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு யாரிடமும் இயற்கை உரங்களும் இல்லை. முடிவில், தங்களுடைய பயிர்களுக்கு தேவையான தருணத்தில் பசலைகளை போட இயலாத நிலைமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டார்கள். இதனால், விவசாய உற்பத்தியில் 70 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி ஏற்பட்டது." என்கிறார் துளசிராம்.

ரசாயன உரத்தைப் பயன்படுத்தக்கூடாது என அறிவித்தது தவறு என ஜனாதிபதி இப்போதுதான் கூறினாலும், அதற்கு முன்பாகவே விவசாயிகள் ரசாயன உரத்தை நாட ஆரம்பித்திருந்தார்கள். இருந்தாலும் இறக்குமதிக்குத் தடை இருப்பதால், அவற்றின் விலை கடுமையாக அதிகரித்திருந்தது. முன்பு 1,800 ரூபாய்க்கு விற்ற 50 கிலோ மூட்டையின் விலை தற்போது 32 ஆயிரம் ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

பயிர் நிலம்

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பிரச்சனை

ஏற்கனவே விளைச்சல் குறைவு என்ற நிலையில், இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சந்தைப்படுத்தும் வாய்ப்புகளையும் குறைத்திருக்கிறது.

யாழ்ப்பாணத்தின் கோப்பாயில் வாழை விவசாயம் செய்துவரும் கதிர்காமநாதன், டீசல் தட்டுப்பாடு நீங்கும்வரை விவசாயிகளுக்குப் பிரச்சனைதான் என்கிறார்.

"முன்பெல்லாம் ஆயிரம், ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு விற்கும் வாழைக் குலையை இப்போது 800 ரூபாய்க்குத்தான் கேட்கிறார்கள். காரணம், போக்குவரத்து வசதி இல்லாததுதான். விவசாயிகளின் நிலையே இப்படியிருக்கிறதென்றால், விவசாயத் தொழிலாளர்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். அவர்கள் எப்படி ஜீவிக்கிறார்கள் என்று நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது" என்கிறார் கதிர்காமநாதன்.

இதெல்லாம் போக, விவசாயிகள் நீரிறைக்கப் பயன்படுத்திவரும் பம்ப்களுக்கான மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு இருப்பதும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையின் பிரதான உணவான அரிசி, தேயிலை, காய்கறிகள், புகையிலை போன்றவை நாடு முழுவதுமே பயிர்செய்யப்படுகின்றன. இதில் தேயிலை பெருமளவில் ஏற்றமதிசெய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது.

கோதுமை, பருப்பு, சர்க்கரை, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 2018ஆம் ஆண்டின் இறக்குமதியில் உணவுப் பொருட்களின் இறக்குமதி மட்டும் 7.2 சதவீதமாக இருந்தது.

பருப்பு வகைகளைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்தே பெருமளவில் அவை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தனக்குத் தேவையான கோதுமையில் 45 சதவீதத்தை ரஷ்யா மற்றும் யுக்ரேனில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது நடந்துவரும் ரஷ்ய - யுக்ரைன் யுத்தமும் இலங்கையின் டாலர் பற்றாக்குறையும் இந்த இறக்குமதியைக் கடுமையாக பாதித்திருக்கின்றன. இதுவும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :