You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை பொருளாதார நெருக்கடி: அதிக கடன்களை வழங்கியது யார்? எது அதிகமாக இறக்குமதியாகிறது? 7 வரைபடங்களில் எளிய விளக்கம்
ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது.
உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் இந்த நாட்டை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் வழக்கமான காட்சிகளாகி விட்டன.
இலங்கை நாடு, கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்கிறது. பெட்ரோலிய எரிவாயு முதல் கச்சா சர்க்கரை வரை என அனைத்தும் அதில் அடங்கும். இப்போது அந்த இறக்குமதிகள் தடைபட்டுள்ளன. இதனால் நாடு மிகப்பெரிய பணவீகத்தை சந்திக்கிறது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் எவ்வளவு உயர்ந்திருக்கிறது?
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் (தேசிய நுகர்வோர் விலை குறியீடு) வெறும் 5% ஆக இருந்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், பணவீக்கத்தில் ஆண்டுதோறும் காணப்படும் மாற்றம் கிட்டத்தட்ட 18% ஆக உயர்ந்துள்ளது - இது முந்தைய ஆண்டை விட 13% அதிகமாகும். விநியோகத்திற்கு எதிராக தேவை அதிகமாக இருப்பதால், எஞ்சியிருக்கும் பொருட்களின் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் உச்சவரம்பை பாதிக்கிறது.
விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது?
காய்ந்த மிளகாய் போன்ற எளிய பொருட்கள் - உள்ளூர் உணவு வகைகளை சமைக்க இன்றியமையாதவை, அதன் சில்லறை விலைகள் முந்தைய ஆண்டை விட 190% அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஒரு கிலோ ஆப்பிள் கிட்டத்தட்ட 2021இல் ஏப்ரலில் இருந்த ஒரு கிலோ 55 என்ற விலையை விட இப்போது இரட்டிப்பாகியிருக்கிறது. தேங்காய் எண்ணெய்யை உள்ளூர் மக்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 520 கொடுத்து வாங்கினர். இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ. 820க்கு விற்கப்படுகிறது.
உள்ளூர் நாளிதழ்களில் வெளிவரும் தகவல்களின்படி, சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள அலமாரிகள் முற்றிலும் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையர்கள் பெரும்பாலும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளதை இந்தக் காட்சிகள் காட்டுவதாக உள்ளன. பணவீக்கம் காரணமாக பலர் உணவைத் தவிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
இலங்கை எவற்றை அதிகமாக இறக்குமதி செய்கிறது?
இலங்கை கிட்டத்தட்ட அனைத்தையும் இறக்குமதி செய்கிறது. ஓஇசிடி அமைப்பின் விவரங்களின்படி, இலங்கை 2020இல் 1.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்தது. துணிகள் முதல் மூலப்பொருட்கள் வரை, மருந்துகள் முதல், கோதுமை, சர்க்கரை வரை - அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.
2020ஆம் ஆண்டில், இந்த நாடு 214 மில்லியன் டாலர் மதிப்புள்ள கார்களை இறக்குமதி செய்தது. இத்தனைக்கும் கார்கள், அந்த நாடு இறக்குமதி செய்யும் முதல் 10 பொருட்கள் வரிசையில் கூட இல்லை. 2020இல் மட்டும் 305 மில்லியன் டாலர் பெறுமதியான செறிவூட்டப்பட்ட பாலை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யும் நாடுகள். தற்போது இலங்கை வெளிநாட்டு உதவிக்கு எதிர்பார்த்து நிற்கும் நிலையில், நெருக்கடியை சமாளிக்க, சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளையும் இலங்கை அணுகியுள்ளது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் 70% க்கும் அதிகமானோர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.
அரசாங்கத்தின் மாதாந்திர சுற்றுலா அறிக்கையின்படி, ரஷ்யாவிலிருந்து 15,340 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் - வேறு எந்தவொரு நாட்டிலிருந்தும் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்திருக்கவில்லை.
இருப்பினும், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை முடங்கி விட்டது. இதற்கு முன்பு, கொரோனா பெருந்தொற்று இந்த நாட்டை முடக்கிப்போட்டது. இதுவும் இலங்கை சுற்றுலா துறைக்கு பெரும் அடியை கொடுத்தது. ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் கோதுமை, பெட்ரோலியம் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. மேலும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது.
இலங்கைக்கு யார் கடன் வழங்கியிருக்கிறார்கள்?
இலங்கை மிகப்பெரிய அளவிலான கடனில் மூழ்கியுள்ளது. வெளிநாட்டு வளங்கள் இணையதளத்தின்படி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி அமைப்புகளுக்கு அடுத்தபடியாக இலங்கையின் கடன் பங்குகளுக்கு அதிக கடன் வழங்குவது சீனாவாகும்.
இலங்கையின் கடன் அதன் சொந்த அந்நிய செலாவணி கையிருப்புகளை தாண்டியுள்ளது மற்றும் அதிகரித்து வரும் வெளிநாட்டு கடன்கள் அந்நாட்டை பொருளாதார அவசரநிலையின் விளிம்பில் தள்ளியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்