இலங்கையில் நல்லாட்சி வர அரசமைப்பில் மாற்றங்கள் வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இலங்கை

பட மூலாதாரம், Getty Images

இலங்கை அரசியலமைப்பின் 18ஆம் மற்றும் 19ஆம் திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கத்திற்கு நான்கரை வருடங்கள் நிறைவடைந்துள்ள பின்னணியில், எதிர்வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கான தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறித்த நான்கரை வருடங்களில் இந்த அரசாங்கம் நன்றாக செயற்பட்டதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நான்கரை வருடங்களில் தாம் சரியாக செயற்படாதிருந்தால், அதற்கு அரசியலமைப்பின் 19ஆம் திருத்தமே காரணமாக அமைந்துள்ளதாகவும், 19ஆம் திருத்தம் கொண்டு வராதப்பட்சத்தில் இந்த அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தானும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரண்டு புறங்களிலிருந்து செயற்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அந்த குற்றச்சாட்டிற்கு 19ஆம் திருத்தமே காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.

ரணில்

பட மூலாதாரம், Getty Images

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தப்பட்ட 18ஆம் திருத்தமானது, சர்வாதிகாரம் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டம் எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 18ஆம் மற்றும் 19ஆம் திருத்தங்களை இல்லாதொழித்தால் மாத்திரமே, இலங்கையில் நல்லாட்சியொன்றை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பு

1978ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் இலங்கையில் தற்போது அமலில் உள்ள அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டிருந்தது.

1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த அரசியலமைப்பில் 19 தடவைகள் இதுவரை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் தலையீட்டில் 13ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

மாகாண சபைகள், போலீஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் 13ஆம் திருத்தத்தின் ஊடாக அமுல்படுத்தப்பட்டிருந்தன.

மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதிலும், அதற்கான உரிய அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தமிழர் தரப்பு இன்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், அரசியலமைப்பில் மேலும் பல திருத்தங்களை மேற்கொள்ள ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

எனினும், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைகள் இன்றும் கிடைக்கவில்லை என்பதே தமிழர்கள் தரப்பின் குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

18ஆம் திருத்தச்சட்டம்

இலங்கையில் ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும், ஜனாதிபதியாக இருப்பதற்கு காணப்பட்ட தடைகளை தகர்த்தும் வகையில் இந்த 18ஆம் திருத்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்ச

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் ஒருவர், இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற வகையில் இலங்கையின் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருந்தது.

19ஆம் திருத்தச்சட்டம்

மஹிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட 18ஆம் திருத்தத்தை இல்லாதொழிக்கும் வகையில் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்திருந்தது.

இலங்கையில் ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற சரத்து, 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் அரசியலமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டது.

அத்துடன், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, சுயாதீன போலீஸ் ஆணைக்குழு, அரசியலமைப்பு சபை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டிருந்தது.

20ஆம் திருத்தச்சட்டம்

நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கும் வகையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினால் இந்த அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே, அரசியலமைப்பின் 18ஆம் மற்றும் 19ஆம் திருத்தங்களை இல்லாதொழிப்பதன் ஊடாகவே, சிறந்ததொரு ஆட்சியை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :