You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரபாகரன் படங்களை வைத்திருந்த பெண்ணை நாடு கடத்த கொழும்பு நீதிமன்றம் ஆணை
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தமை சம்பந்தமாக கைது செய்யப்பட தமிழ் பெண் ஒருவரை நாடு கடத்துமாறு கொழும்பு மாஜிஸ்திரேட் நிதிமன்றம் போலிசாருக்கு உத்தரவிட்டது.
ஜெர்மன் நாட்டின் குடியுரிமை கொண்ட மலர்விழி ஈஸ்வரராஜா எனும் பெண்ணை அண்மையில் யாழ் சுன்னாக்கம் பிரதேசத்தில் வைத்து போலீசார் கைது செய்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
விசாரணைகளின் போது சந்தேக நபரிடம் இருந்து விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் அடங்கிய 34 போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேக நபரை நாடு கடத்தும் படி உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேக நபரை உடனடியாக நாடு கடத்துமாறு குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.