You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட்: தென் ஆஃப்ரிக்க மண்ணில் இந்தியாவுக்கு முதல் தொடர் வெற்றி - 5 முக்கிய காரணங்கள்
தென் ஆஃப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5-ஆவது ஒரு நாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிராக 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்று இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம் தென் ஆஃப்ரிக்க மண்ணில் இருதரப்பு அணிகள் விளையாடும் ஒருநாள் தொடரை முதல்முறையாக இந்தியா வென்றுள்ளது. ஒருநாள் தொடரை இந்தியா வெல்ல 5 முக்கிய காரணங்களை இங்கே காண்போம்.
கோலியின் அதிரடி ஆட்டம் மற்றும் அற்புத வியூகம்
- ஒருநாள் தொடரை இந்தியா வென்றதற்கு ஒரு முக்கிய காரணம் அணித்தலைவர் விராத் கோலி. இந்த தொடரில் அவரது சிறப்பான பேட்டிங்கும், தலைமையும் இந்தியாவுக்கு பெரிதும் உதவியுள்ளது. இதுவரை இந்த தொடரில் கோலி 2 சதங்கள் மற்றும் 1 அரைச்சதம் அடித்துள்ளார். அவரது அதிரடி பேட்டிங் மற்றும் வியூகம் தென் ஆஃப்ரிக்க அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தது என்று கூறலாம்.
பயமறியாத இளங்கன்றுகள்
- இந்திய சுழல் பந்துவீச்சாளர்களுக்கும், தென் ஆஃப்ரிக்க மட்டைவீச்சாளர்களுக்கும் இடையே நடந்த போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சை கணிக்க முடியாத தென் ஆஃப்ரிக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். சில போட்டிகளில் தென் ஆஃப்ரிக்க பேட்ஸ்மேன்கள் அடித்தாடிய போதும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கும் விதமாகவே அச்சமின்றி பந்துவீசி வருகின்றனர்.
சோபிக்காத தென் ஆஃப்ரிக்க பேட்ஸ்மேன்கள்
- தென் ஆஃப்ரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த ஒருநாள் போட்டி தொடரில் பெரிதும் சோபிக்காததற்கு காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேன்களின் பங்களிப்புதான். டி வில்லியர்ஸ், பாப் டு ப்ளசிஸ் மற்றும் டி காக் போன்ற மூத்த வீரர்களை மட்டுமே அந்த அணி பெரிதும் சார்ந்திருந்தது தற்போதைய தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
யாரும் சோடை போகவில்லை
- இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு கைகொடுக்கும் விதமாக இளைய வீரர்களும் சிறப்பாக விளையாடினர். ஹர்திக் பாண்ட்யா பெரிய அளவில் பேட்டிங்கில் ஜொலிக்காத போதும் பந்துவீச்சில் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். முன்னாள் கேப்டன் டோனி, பூம்ரா, புவனேஸ்வர் குமார் போன்றோரும் தங்கள் பங்கினை சிறப்பாக செய்தனர்.
என்ன ஆனது தென் ஆஃப்ரிக்க பந்துவீச்சாளர்களுக்கு?
- இந்திய பந்துவீச்சாளர்களை ஒப்பிடும்போது தென் ஆஃப்ரிக்க பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் நன்றாக செயல்படவில்லை. இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் பெரிதும் தவறிவிட்டனர். இதுவே பல போட்டிகளில் இந்திய அணி அதிக அளவில் ரன் குவிக்க காரணமாக அமைந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்