துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு - த.வெ.க. வேட்பாளர் இடையே தள்ளுமுள்ளு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த சமீபத்திய தகவல்களை சுருக்கமாக இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு அதிகரிப்பு - எஸ்ஐஆர் காரணமா?

    மேற்கு வங்கம்

    பட மூலாதாரம், Subham Dutta

    மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மாலை நிலவரப்படி, 91.68 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இம்மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறுகிறது.

    கொல்கத்தாவைச் சேர்ந்த 'சாபர் இன்ஸ்டிடியூட்' என்ற சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளரான சாபிர் அகமது, பிபிசி வங்க மொழி சேவையிடம் பேசுகையில், "முர்ஷிதாபாத் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவாகி வருகின்றன. இருப்பினும், கடந்த தேர்தல்களில், 2024 மக்களவைத் தேர்தலில்கூட, அப்பகுதியில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் அதிகமாக இருப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். இதற்கு ஒரு காரணம், அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதுதான்" என்று கூறினார்.

    'புலம்பெயர் தொழிலாளர் ஒற்றுமை மன்றத்தின்' மாநில பொதுச் செயலாளர் ஆசிஃப் ஃபாரூக் பேசுகையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக இந்த முறை வாக்குப்பதிவு விகிதம் அதிகமாக இருந்ததாகக் கூறினார்.

    "பிற மாநிலங்களில் பணிபுரியும் பலர் வாக்களிக்க அதிக எண்ணிக்கையில் வந்துள்ளனர். எஸ்ஐஆர் குறித்த அச்சமே இதற்கு காரணம்" என்று ஃபாரூக் கூறினார்.

    எனினும் தேர்தல் ஆணையம் பாலினம் சார்ந்த வாக்குப்பதிவு குறித்த விவரங்களை இதுவரை தெரிவிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றது.

    சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையைத் தொடர்ந்து, சுமார் 9 மில்லியன் வாக்காளர்கள் - அதாவது மாநில வாக்காளர்களில் ஏறத்தாழ 12% - நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் லட்சக்கணக்கானோர் வராதவர்கள் அல்லது இறந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 27 லட்சம் பேரின் நிலை இன்னும் ஆய்வில் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இந்த முதல் கட்ட வாக்குப்பதிவின் இடையே பல கட்டங்களில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

  2. சேகர்பாபு - த.வெ.க. வேட்பாளர் இடையே தள்ளுமுள்ளு

    சேகர்பாபு தவெக

    பட மூலாதாரம், TVK

    சென்னை துறைமுகம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அங்கப்பன் தெருவில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான சேகர் பாபுவுக்கும், த.வெ.க. வேட்பாளரான சினோரா அசோக்குக்கும் இடையே நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    அங்கப்பன் தெருவில் உள்ள தவெக அலுவலகம் அருகே வேட்பாளர் அசோக் மற்றும் சேகர் பாபு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் சூழ்ந்திருக்க தள்ளுமுள்ளு ஏற்படும் காட்சி வெளியாகியுள்ளது.

    அசோக் தமது அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த போது சேகர் பாபு அவரை நோக்கி சில வார்த்தைகளை பேசியதாகவும், இதனால் மோதல் சூழல் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

    தகவலறிந்து வந்த போலிசார் இரண்டு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  3. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் - வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்குப்பதிவு

    தமிழ்நாடு தேர்தல்

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 6 மணிக்கு பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    இதில் 1951 முதலான மாநில தேர்தல் வரலாற்றிலேயே சதவிகித அடிப்படையில் அதிகபட்சமான வாக்குப்பதிவு பதிவாகும் சூழல் உள்ளது. மாலை 6 மணி நிலவரப்படியே 84.51 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இதற்கு முன்பாக வாக்குச்சாவடிக்குள் வந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரையிலான தேர்தல்களில் வாக்குப்பதிவு என்ன?

    • 1951 - 54.75%
    • 1957 - 46.56% காமராஜர் அரசு அமைந்தது
    • 1962 - 70.65% காமராஜர் அரசு அமைந்தது
    • 1967 - 76.57% ஆட்சி மாற்றம் முதன்முறையாக திமுக வென்றது
    • 1971 - 72.10% திமுக ஆட்சி தொடர்ந்தது
    • 1977 - 61.58% ஆட்சி மாற்றம் நடைபெற்று முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றது
    • 1980 - 65.42% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
    • 1984 - 73.47% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
    • 1989 - 69.69% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
    • 1991 - 63.84% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது முதன்முறையாக முதலமைச்சரானார் ஜெயலலிதா
    • 1996 - 66.95% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
    • 2001 - 59.07% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
    • 2006 - 70.82% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
    • 2011 - 78.01% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
    • 2016 - 74.24% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
    • 2021 - 72.73% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
  4. மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்

    காணொளிக் குறிப்பு, ஷுவேந்து சர்கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் ஷுவேந்து சர்கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் குமார்கஞ்சில் உள்ள 24-ஆம் வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் ஷுவேந்து சர்காரை திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அடித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    பாஜக வேட்பாளரை அவரது பாதுகாப்பு பணியாளர்கள் அங்கிருந்து மீட்டு அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது .காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

  5. வாக்குச்சாவடியில் தலைமைக் காவலரை கத்தியால் தாக்கியவர் கைது

    தமிழ்நாடு தேர்தல்

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமாலியா நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தலைமைக் காவலரை கத்தியால் தாக்கியவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை முதல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், 11 மணியளவில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமைக் காவலர் விக்னேஷ் என்பவரை ஒருநபர் கத்தியால் தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த தலைமைக் காவலர் பொறையார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே கத்தியால் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பெயர் பிரபாகரன் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த நபர் ஏற்கெனவே சீருடையில் இருக்கும் காவலரை தாக்கியதாக, அவர் மீது வழக்கு இருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

  6. 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
    படக்குறிப்பு, வாக்களித்த 4 வாக்காளர்கள்

    கேரளா மாநில எல்லையில் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்திற்குள் ஐந்து வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை பகுதியில் 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி
    படக்குறிப்பு, மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி

    ஆண்டிபட்டியில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் காலையில் சென்று சேர்ந்தன. பகல் 12 மணி நிலவரப்படி 5 வாக்காளர்களில் 4 பேர் வாக்கை பதிவு செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு என தனியாக மண்டல அலுவலர், மண்டல அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர், உதவி ஆய்வாளர், துணை ராணுவ வீரர், மற்றும் உதவியாளர் என ஆறு நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

  7. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் - 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவு

    தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    மாவட்ட வாரியாக நாமக்கலில் 76.43 சதவிகிதமும் அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 75.79 சதவிகிதம் மற்றும் திருப்பூரில் 75.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தொகுதிவாரியாக குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 80.67% வாக்குகளும் அதற்கு அடுத்தபடியாக சங்கரி தொகுதியில் 78.42 வாக்குகளும், வீரபாண்டியில் 78.05% வாக்குகளும், காங்கேயத்தில் 78.31% வாக்குகளும் பவானியில் 77.64% வாக்குகளும் அவிநாசியில் 77.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    சட்டப்பேரவைத் தேர்தல்
  8. வாக்குப்பதிவு நேரத்தை 8 மணி வரை நீட்டிக்க வேண்டும் - மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் த.வெ.க. நேரில் மனு

    விஜய்

    பட மூலாதாரம், TVK

    தேர்தல் நாளுக்காக சென்னையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் செல்ல பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என த.வெ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் த.வெ.க.வின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் புகார் அளித்தனர்.

    இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா," தேர்தல் நேரத்தில் சென்னையிலிருந்து ஊருக்கு செல்வதற்காக, பேருந்து நிலையங்களில் ஏராளமான மக்கள் கூடியிருக்கின்றனர்" என கூறினார். ஆனால் இவர்களுக்கு பேருந்து வசதி சரிவர இல்லாததால் இவர்கள் வாக்களிப்பதற்காக ஊருக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

    எனவே வெளியூர்களிலிருந்து வந்து வாக்களிக்கும் மக்களுக்காக வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரையிலும் நீட்டிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி த.வெ.க. தலைவர் விஜய் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

  9. வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு - வேட்பாளர், 2 முகவர்கள் கைது

    கலசப்பாக்கம், வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு

    திருவண்ணாமலை அருகே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் முகவர் சேதப்படுத்தியதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் உள்ளே வருகையில் அங்கிருந்த கட்சி முகவர்களுக்குள் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அந்த நேரத்தில், சுயேச்சை வேட்பாளரின் முகவர் ஒருவர் திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் வீசியெறிந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரம் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி தர்ப்பகராஜ், தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது இரு முகவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சுமார் ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்னர், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டு, அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. சேதமடைந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறிய வாக்குச்சாவடி அலுவலர்கள், அந்த இயந்திரம் உரிய வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதில் பதிவான வாக்குகளை வாக்கு எண்ணிக்கையின் போது மீட்டுவிட முடியும் என்றும் தெரிவித்தனர்.

    அந்த வாக்குச்சாவடியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட பிறகே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

  10. மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு இடையே மோதல்

    காணொளிக் குறிப்பு, முர்ஷிதாபாத்தில் ஆம் ஜனதா உன்னாயன், திரிணாமுல் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    தேர்தல் ஆணைய தரவுகளின்படி மேற்கு வங்க மாநிலத்தில் பகல் 1 மணி நிலவரப்படி 62.18 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தோம்கால், முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

    முர்ஷிதாபாத் மாவட்டத்தின் நௌடா சட்டமன்றத் தொகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் ஹுமாயூன் கபீரின் ஆம் ஜனதா உன்னயன் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அதே தொகுதியில் காலையில், சிவநகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு அருகே வெடிப்பு நடந்ததாக செய்தி வெளியானது.

    முர்ஷிதாபாத்தில் உள்ள டோம்கல் வாக்குச்சாவடியில் இன்று காலை சிபிஐ(எம்) மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.

    ஜார்க்ரம் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் யானை ஒன்று புகுந்ததால் காலை நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

  11. காவலர் விசில் ஊத எதிர்ப்பு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வாக்குவாதம்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

    கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக விசில் ஊதிய கர்நாடக காவலருடன் திமுக முன்னாள் எம்எல்ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்,

    அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் வரிசையில் காத்திருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தொடர்ந்து விசில் ஊதிக்கொண்டிருந்தார்.

    திமுக சார்பில் முதன்மை முகவரான (chief agent) முன்னாள் எம்எல்ஏ காமராஜ், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்,

    “குறிப்பிட்ட கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் இது போன்று விசில் அடிக்கக் கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் அவர் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார்.

    காணொளிக் குறிப்பு, கரூரில் பாதுகாப்பு பணியிலிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த காவல் விசில் ஊதியதாக சர்ச்சை
  12. வாக்குப் பதிவு செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்டதாக ஒருவரிடம் விசாரணை

    சக்திவேல்
    படக்குறிப்பு, சக்திவேல்

    திருப்பத்தூர் அருகே வாக்குச்சாவடியில் வாக்களித்ததை வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டதாக ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது, அங்கு வீடியோ பதிவு செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனையும் மீறி திருப்பத்தூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் சக்திவேல் என்பவர் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்ததை செல்போனில் வீடியோ எடுத்து அதனை ரீல்ஸாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து, கந்திலி காவல் நிலைய போலீஸார் சக்திவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர் எஸ்.பி. ஷ்யாமளா தேவி கூறுகையில், “சக்திவேல் வாக்குப்பதிவை வீடியோவாக எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பகிர்ந்தது உண்மைதான். இதுகுறித்து எந்த வழக்கும் அவர்மீது பதிவு செய்யப்படவில்லை.அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

  13. மணக்கோலத்தில் சென்று வாக்களித்த மணமக்கள்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட 146வது வாக்குச்சாவடி பகுதியில் வசித்துவரும் அண்ணன்-தங்கையான சித்தநாதன் - விஷாலிக்கும் ஜெயவீரகார்த்தி - சிவசங்கரிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதில் சித்தநாதன் - சிவசங்கரி இருவரும் அண்ணன் - தங்கை, அதேபோன்று, ஜெயவீரகார்த்தி, விஷாலி இருவரும் அண்ணன் - தங்கை. திருமணம் முடிந்தபின் இரு ஜோடிகளும் எம்.எஸ்.கே. நகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்குப் பதிவு செய்தனர்.
    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பில் ஜெகன்-பிரியா இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, ஜெகன் தேரிகுடியிருப்பிலும் பிரியா மெஞ்ஞானபுரத்திலும் வாக்களித்தனர்.
    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த சுபாஷ் - கனிமொழி இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இதன்பின், சுபாஷ் குடியாத்தம் கஸ்பா கௌதம பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியிலும் கனிமொழி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர்.
    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி தனி சட்டமன்ற தொகுதி தொட்டியம் கிராமத்தில் திருமணம் முடிந்த புதுமண தம்பதியினர் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினர்.
    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, நாமக்கல் அடுத்த N.கொசவம்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த தீபிகா என்பவருக்கும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் இன்று காலை நாமக்கல்லில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, மணப்பெண் தீபிகா N.கொசவம்பட்டி மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, காஞ்சிபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடி சென்று வாக்களித்த மணமக்கள் ரவிராகுல்-சிவரஞ்சனி
  14. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் - வாக்களித்த திரைத்துறையினர்

    காணொளிக் குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 - வாக்களித்த திரைத்துறையினர்

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், திரிஷா, தனுஷ், இளையராஜா, சூர்யா, ஜோதிகா, பிரதீப் ரங்கநாதன், விக்ரம், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அட்லி, பா. ரஞ்சித், கார்த்திக், அர்ஜூன் போன்ற திரைத்துறையினர் வாக்களித்தனர்.

  15. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் - 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவு

    தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
  16. வேங்கைவயல்: பட்டியல் பிரிவு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

    வேங்கைவயல், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் தங்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை என குற்றம் சாட்டி பட்டியலின மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது.

    இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வழக்கு புதுக்கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மார்ச் மாதம் 3 பேருக்கும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது.

    வேங்கைவயல், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்

    இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தங்கள் கிராம மக்களையே அரசும் சிபிசிஐடி போலீசாரும் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தங்கள் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் மீதே சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக கூறி, பட்டியலின மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், அந்த கிராமத்தில் நுழைவுவாயில் பகுதியிலும் அவர்கள் கருப்பு கொடியேற்றி உள்ளனர்.

    எனினும், அங்கு சுமார் 5 பேர் வரை வாக்களித்துள்ளனர்.

    தொடர்ந்து, பட்டியலின மக்களுடன் காவல்துறை அதிகாரிகளும் வருவாய்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்ததன் முழு பின்னணியை இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்:

  17. நாங்குநேரி அருகே தேர்தல் புறக்கணிப்பால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
    படக்குறிப்பு, வெறிச்சோடிய வாக்குச்சாவடி

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள 290-வது வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் யாரும் வாக்கு செலுத்த வராததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கடந்த மார்ச் 2-ம் தேதி இரவு பெரும்பத்து மெயின் ரோட்டில் இந்திரா காலணியை சேர்ந்த ஜான் மார்க், வட மாநில தொழிலாளர் திரிநாத்கட்டா ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர், மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை என்று கூறி தேர்தல் புறக்கணிப்பு நடத்தப் போவதாக கிராம மக்கள் முன்பே அறிவித்திருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக தெருக்களில் கருப்பு கொடியேற்றியும் பதாகை வைத்தும் தேர்தல் புறக்கணிப்பை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அங்குள்ள வாக்குச்சாவடியில் 471 ஆண் வாக்காளர்களும் 498 பெண் வாக்காளர்கள், ஆக மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ள நிலையில், கிருஷ்ணன்புதூரை சேர்ந்த ஷீலா என்ற பெண் மட்டுமே இன்று வாக்களித்துள்ளார். அப்போது கிராம மக்கள் அப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். போலீசார் தலையிட்டு அப்பெண்ணை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

    மற்ற வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.

  18. ஸ்டாலின், பழனிசாமி, சீமான், விஜய் வாக்களித்த காட்சி

    காணொளிக் குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் - முதலமைச்சர் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் வேட்பாளர்களான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வாக்களித்தனர்.

  19. வாணியம்பாடியில் திமுக - தவெக கட்சியினர் மோதல்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இடையேயான மோதல் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    'கள்ள ஓட்டு போடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

    தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, 'கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசிடிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.

  20. வாக்காளர்களை வரவேற்ற ரோபோ

    காணொளிக் குறிப்பு, வாக்காளர்களை வரவேற்ற ரோபோ

    தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச் சாவடிகளில் ரோபோ வாக்காளர்களை வரவேற்றது.