You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரயாக்ராஜில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொலை - வீட்டுக்கு தீவைப்பு
உத்தர பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை காலை பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள வீட்டில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரயாக்ராஜின் தர்வாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெவ்ராஜ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் செங்கற்கள் மற்றும் கற்களால் அந்த குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிக் கொலை செய்ததாகவும் பின்னர் இறந்தவர்களின் வீட்டிற்கு தீ வைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இத்போன்ற படுகொலை சம்பவம் சில நாட்களுக்கு நடந்தது. இப்போது இரண்டாவது முறையாக அதே பாணியில் நடந்த தாக்குதல் மற்றும் கொலைச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.ராம் குமார் யாதவ் (55), அவரது மனைவி குசும் தேவி (52), மகள் மனிஷா (25), மருமகள் சவிதா (27), பேத்தி மீனாக்ஷி (2) ஆகியோர் முதுகுத் தண்டுவடம் கடுமையாக காயம்பட்ட நிலையில் உயிரிழந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மற்றொரு பேத்தி சாக்ஷி (5) உயிர் பிழைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் நடந்தபோது வீட்டில் இல்லாத யாதவின் மகன் சுனில் (30), தற்போது போலீஸ் விசாரணைக்கு உதவி வருகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்குள் நிலவிய கடும் உஷ்ணம் காரணமாக முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத சிலரால் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டனர்.
அவர்கள் வாழ்ந்த குடியிருப்பில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்ததும், அருகே வசிப்பவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது 5 பேர் முறையில் கொல்லப்பட்டதைக் கண்டனர்.
தற்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலீஸார் தங்களுடைய விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆனால் கொலைக்கான காரணத்தை இதுவரை அவர்களால் கண்டறிய முடியவில்லை.குறிப்பிடத்தக்க வகையில், பிரயாக்ராஜில் இத்தகைய ஒரு கொடூரமான படுகொலை பதிவாகியிருப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம், இந்த நகரின் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் அதிர்வலை அடங்குவதற்குள்ளாக பிரயாக்ராஜின் சோரன்வ் பகுதியில் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டதாக உள்ளூர் காவல்துறையில் வழக்குப் பதிவாகியிருக்கிறது.
அந்த வழக்குகளிலும் காவல்துறையினர் துப்பி துலக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
"உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது, கண்டிக்கத்தக்கது மற்றும் கவலை அளிக்கிறது. இந்த சம்பவத்தின் வேர்வரை சென்று குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும்," என்று மாயாவதி ட்வீட் செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு ராஜ்குமாரின் மகன் சுனில் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் காத்ரி ,காவல் முதுநிலை கண்காணிப்பாளர் அஜய் குமார் ஆகியோரும் சம்பவ பகுதியைப் பார்வையிட்டு விசாரணை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
குற்றவாளிகளின் அடையாளத்தை கண்டறிய உதவுவதற்காக மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. கிராம மக்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, வீட்டுக்குள் இருந்து புகை கிளம்பியதையடுத்து உள்ளூர்மக்கள் அளித்த தகவலின்படி சம்பவ பகுதிக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அப்போது பலத்த காயங்களுடன் அந்த குடும்பத்தினர் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பவம் குறித்து நாங்கள் முழுமையாக விசாரித்து வருகிறோம், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார்.
"இந்த சம்பவம் மிகவும் தீவிரமானது. சம்பவ இடத்திற்கு சிறப்புக்குழு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு இந்த சம்பவத்தின் பின்னணி தெரியவரும்," என்று உத்தரபிரதேச சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
மாநில அரசு உறுதி
இந்த நிலையில், குற்றவாளிகளை சட்டப்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா தெரிவித்துள்ளார்.
இதேவேளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்