You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னிந்தியாவில் அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி: புதிய திட்டமா? கடினமான அரசியலில் இருந்து தப்பும் வழியா?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசிக்காக
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் வருகை, தென்னிந்தியாவில் அதிகமாகவே இருந்தது. சமீபத்தில் கேரளாவில் மீனவர்களோடு படகில் கடலுக்குச் சென்றவர் அரபிக் கடலில் குதித்து அனாயாசமாக நீச்சலடித்தார்.
தமிழகத்தில் மாணவி ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டு `புஷ் அப்ஸ்` எடுத்தார். மற்றொரு இளைஞரிடம் அகிடோ எனும் தற்காப்புக் கலையைக் காட்டினார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி மீனவர்களோடும், மாணவர்களோடும் உரையாடியதை, தென்னக நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள், வடக்கத்திய ஊடகங்களைப் போல அல்லாமல் நியாயமாகவே செய்திகளை வெளியிட்டன. கடந்த வாரம் கூட தென் இந்தியாவில் சமூக ஊடங்களில் ராகுல் காந்தி குறித்து அதிகமாக பேசினார்கள்.
50 வயதான ராகுல் காந்தி, தென்னகத்தில் குறிப்பாக சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம் மற்றும் கேரளாவில் முழு கவனத்தை ஈர்ப்பது போலத் தெரிகிறது. தென்னக மக்களோடு இருப்பது அவருக்கு ஆறுதல் அளிப்பது போலத் தெரிகிறது.
தென் இந்தியாவில் இருக்கும் ஊடகத்தை கவனிப்பவர்கள், பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் நிலவிய சூழல் குறித்து உண்மையிலேயே ஆச்சர்யப்படவில்லை. ராகுல் தீவிர அரசியலில் இருந்து தப்பிப்பதற்கும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்குமான இடமாக தென்னகம் இருக்கிறது என சிலர் நம்புகிறார்கள்.
"ஊடகங்கள் அவருக்கு ஒரு நீண்ட வாய்ப்பைக் கொடுக்க விரும்புகிறது. சில நேரங்களில் ராகுலே அதைக் கோருகிறார். அதற்காக அவர் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறார், இருப்பினும் அவருக்கு சரியான அளவில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பிராந்திய அளவிலான ஊடகங்களால் ராகுல் விமர்சிக்கப்படுகிறார், ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லை மீறுவதில்லை," என இந்தியாவின் முதல் பிராந்திய தொலைக்காட்சி சேனலின் நிறுவனரான சசி குமார் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.
மற்ற காரணங்களும் இருக்கின்றன
பிராந்திய ஊடகங்கள் இப்படி நடந்து கொள்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. "உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைக் காட்டிலும் தென் இந்தியாவில் அரசியல் குறைந்த அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் இந்துத்வா என்கிற விஷயம் மிகவும் பரவலாக இருக்கிறது. தென்னகத்தில் மிகக் கடுமையான சொற்போர் இல்லை," என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார் தி இந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராம்.
"அதற்கு காரணம் தென் இந்தியாவில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால் அல்ல, கர்நாடகம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வலுவாக இல்லாதது தான் காரணம்," என்கிறார் சசி குமார்.
"தன்னால் கடலில் குதித்து நீந்த முடியும், தன்னால் புஷ் அப்ஸ் எடுக்க முடியும் என்பது எல்லாம் அவரை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியை விட நல்ல உடல் வலிமை கொண்ட ஒருவராக வந்து கொண்டிருக்கிறார் ராகுல். இது ஓர் அருமையான முரண். அரசியலில் தன்னை அதிக உடல் வலிமை கொண்டவராக காட்டிக் கொள்ளும் உத்தி ராஜிவ் காந்தியால் அறிமுகப்படுத்தப்படவில்லை, மாறாக நரேந்திர மோடி அதை அறிமுகப்படுத்தினார். 56 இன்ச் மார்புடையவர் என்கிற கோட்பாட்டை எதிர்க்கும் ஒரு வழி இது" எனக் கூறுகிறார் சசி குமார்.
"தன் தந்தை தமிழகத்தில் கொல்லப்பட்டார் என்கிற போதும், ராகுல் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறது. அதை அவர்கள் கடந்து வந்துவிட்டார்கள் என்பதும், அந்த நிகழ்வு ஒரு நிரந்தர வடுவை ஏற்படுத்தவில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது. தன் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தன் தந்தை ராஜிவ் காந்தியை விடவும் ராகுல் காந்தி தமிழகத்தில் சகஜமாக இருக்கிறார்" என என்.ராம் கூறுகிறார்.
அரசியல் ரீதியாகவும் ராகுல் காந்தி தென்னகத்துக்கு வர வேண்டியது அடிக்கடி அவசியமாகிறது "காரணம் கேரளாவின் வயநாடு தான் ராகுலை அமேதி தொகுதியின் தோல்வியில் இருந்து காப்பாற்றியது. தென்னகத்தில் நேரு - காந்தி குடும்பத்துக்கு எப்போதும் இருந்த ஆதரவை அவர் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். தற்போது காங்கிரஸ் கட்சி தன் செல்வாக்கை இழப்பது போலத் தோன்றுகிறது, ஆனால் நேருவின் கட்சி இதைக் கடந்து வந்துவிடும் என்பது போலத் தான் தெரிகிறது" என்கிறார் விமர்சகரான பிஆர்பி. பாஸ்கர்.
அலட்டிக் கொள்ளாத ’கூல் கை’ பிம்பம்
"ராகுல் காந்தி தமிழகத்தில் சிறப்பாகவே நடத்தப்படுகிறார். சொல்லப் போனால் அவரை தமிழகத்தின் குழந்தை போல நடத்துகிறார்கள். ஒரு வில்லன் போல பார்க்கப்படும் அமித் ஷாவைப் போல ராகுல் காந்தி பார்க்கப்படவில்லை. ஒரு `கூல் கை` போலத் தான் பார்க்கப்பட்டார். இது தான் மக்களுக்கு ராகுல் காந்தி மீதிருக்கும் பிம்பம்" என்கிறார் நக்கீரன் பத்திரிகையைச் சேர்ந்த தாமோதரன் பிரகாஷ்.
தெலுங்கு மொழி பேசும் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் இதே கருத்து தான் நிலவுகிறது. "வடக்கத்திய ஊடகங்களைப் போல ராகுல் காந்தி இலக்கு வைத்து தாக்கப்படவில்லை. பிராந்திய அளவில் எந்த தலைவர்களும் இல்லை மற்றும் அப்பிராந்தியத்தில் ஆளும் பிராந்தியக் கட்சிக்கு, காங்கிரஸ் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை ஆங்கில ஊடகங்கள் அறிந்திருந்தார்கள்," என ஹைதராபாத்தில் இருக்கும் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் துறைப் பேராசிரியராக இருக்கும் பத்மஜா ஷா கூறுகிறார்.
"தெலுங்கு ஊடகங்களில் எல்லா விஷயங்களும் பிரசூரிக்கப்படவில்லை அல்லது ஒளிபரப்பப்படவில்லை, ஆனால் இதுவரை வெளியான எல்லாமே ராகுலுக்கு நேர்மறையாகவே இருந்தன. குறிப்பாக இளைஞர்களுடனான உரையாடல்கள் நல்ல விதத்திலேயே பார்க்கப்பட்டது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜின்கா நாகராஜு.
"கன்னட பத்திரிகைகள் தேசிய ஊடகங்களிலிருந்து அதிகம் மாறுபடவில்லை. கன்னட ஊடகங்கள் ராகுலை வேடிக்கைக்கு உள்ளாக்கியது அல்லது விமர்சித்தது. அதிலும் குறிப்பாக 2014-க்குப் பிறகு," என்கிறார் உதயவானி என்கிற கன்னட நாளிதழின் முன்னாள் ஆசிரியர் பூர்ணிமா.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தியே நின்றது, அக்கட்சிக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. ஊடக வெளிச்சம் தொடர்ந்து ராகுல் காந்தி மீதே குவிந்திருந்தது. "இருப்பினும் சபரிமலை குறித்து அவர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மோசமாகப் பேசுவதை அவர் தடுத்து நிறுத்தவில்லை. இங்கு தான் அவருடைய அரசியல் மிகவும் மேலோட்டமானதாகிவிட்டது," என்கிறார் என்.ராம்.
"சில பிரச்னைகளைக் குறித்து அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்கள், ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்புகிறது. இப்படிப்பட்ட பாகுபாட்டை ராகுல் காந்தியிடம் ஊடகங்கள் காட்டுகின்றன," என பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிபிசி இந்தி சேவையிடம் கூறினார்.
’எல்லாம் விளம்பரம் தான்’
"அவர் சச்சின் டெண்டுல்கர் போல இருக்கிறார். சச்சின் கூட்டத்தில் இருந்து தப்பித்து மைதானத்துக்கு நடுவில் விளையாட விரும்பினார், அதை அவர் ரசித்தார். அதே போல, தீவிர அரசியலில் இருந்து ராகுல் காந்திக்கு தப்பிக்கும் ஓரிடம் தான் தென் இந்தியா. ராகுல் காந்திக்கு ஆலோசனை வழங்குபவர்களுக்கு நீண்ட கால திட்டம் இருக்கிறது. புஷ் அப்ஸ் எடுப்பது எல்லாம் வெறும் விளம்பரத்துக்குத் தான்" என பிபிசி இந்தி சேவையிடம் கூறுகிறார் இந்திய ஜர்னலிஸம் ரிவ்யூவின் ஆசிரியர் மற்றும் அவுட்லுக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கிருஷ்ண பிரசாத்.
``தேர்தலுக்கான அமெரிக்க வழிகள் பல இருக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன் பாஜக விளையாடிய ஆட்டத்தை தற்போது காங்கிரஸ் விளையாடுகிறது. ஊடகங்கள் ராகுலை `பப்பு` என கட்டமைத்திருக்கிறது. உண்மையில் அவர் தன் பலத்தை வெளிகாட்டியுள்ளார், தனது வேலையைச் செய்து வருகிறார். இவை அனைத்தும் கொஞ்ச காலத்துக்கு தான். இது போன்ற விஷயங்கள் வாக்குகளாக மாறுவதைப் பார்ப்பது தான் மிகவும் கடினம், என்றார் கிருஷ்ண பிரசாத்.
``அவர் காலப்போக்கில் முதிர்ச்சியடைந்திருக்கிறார். அவர் தனது சொந்த பாணியைக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். மில்லினியல் தலைமுறை அதை வெறுப்பாகப் பார்க்காது எனலாம்," என்கிறார் சசி குமார்.
பிற செய்திகள்:
- திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?
- தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன?
- ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: