You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசுப் பணிகளுக்கு ஆள் எடுக்க இந்திய அரசிடம் பணம் இல்லையா? - நிதி அமைச்சகம் விளக்கம்
தேவையற்ற செலவினங்களை குறைக்கும் நோக்கில் புதிதாக அரசு பணியிடங்கள் எதையும் உருவாக்கக் கூடாது என்று நேற்று சுற்றறிக்கை மூலம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை அது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ளது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), குடிமைப் பணிகள் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி), ரயில்வே பணிகள் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) உள்ளிட்டவற்றில் வழக்கமான ஆள் எடுப்புகள் தொடரும் என்றும் அதில் எவ்விதமான தடையும் இல்லை என்றும் இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை உள்ளக நடைமுறைகள் தொடர்பானது என்றும் அது புதிதாக அரசு பணிகளுக்கு ஆள் எடுப்பதை எந்த விதத்திலும் தடை செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு முன்னுரிமை இல்லாத செலவுகளை குறைத்துக் கொண்டு முன்னுரிமை உள்ள செலவுகளுக்கு மட்டுமே அரசின் வளங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தல் உடனடியாக அமலுக்கு வருவதாக செப்டம்பர் 4ஆம் தேதி நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில் அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளில், நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறையின் ஒப்புதல் இல்லாமல் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதற்கு தடை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து விதமான அதிகாரங்களும் உடைய அரசுத் துறைகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜூலை 1-ஆம் தேதிக்குப் பிறகு, அவ்வாறு ஏதாவது பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்து , ஒருவேளை அவை இன்னும் நிரப்பப்படாமல் இருந்தால் அந்த பணியிடங்களை நிரப்பக் கூடாது என்றும் அந்தப் பணியிடங்களை நிரப்புவது மிகவும் அவசியமானது என்ற சூழல் இருந்தால் செலவினங்கள் துறையின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அச்சிடுதல் மற்றும் பதிப்பித்தல், கொண்டாட்டங்கள், பயணங்கள் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளையும் குறைக்க வேண்டும் என அரசுத் துறைகளுக்கு அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: