You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2,174 பேருக்கு தொற்று
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 48 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
மாநில சுகாதாரத் துறை அளித்துள்ள தகவல்களின்படி, இன்று அடையாளம் காணப்பட்ட 2,174 பேரில் 2,094 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 16 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மீதமிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். தமிழ்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193ஆக உயர்ந்துள்ளது.
இந்த 2,194 பேரில் 1,276 பேர் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 162 பேரும் கடலூரில் 63 பேரும் காஞ்சிபுரத்தில் 61 பேரும் ராமநாதபுரத்தில் 50 பேரும் ராணிப்பேட்டையில் 68 பேரும் திருவள்ளூரில் 90 பேரும் திருவண்ணாமலையில் 47 பேரும் தூத்துக்குடியில் 43 பேரும் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,556ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 3,271 பேரும் திருவள்ளூரில் 2,037 பேரும் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 25,463 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்நாட்டில் செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 7,37,787ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் குணமடைந்துள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,624ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 21,990ஆக இருக்கிறது.
இன்று 48 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 38 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோய்த் தொற்றினால் 576 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பத்து பேருக்கு வேறு எவ்வித நோயும் இல்லை என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 36 பேர் ஆண்கள். 12 பேர் பெண்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: