You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி வன்முறைக்கு அரசியல் சக்திகளும், வெளியாருமே காரணம்: அரவிந்த் கேஜ்ரிவால்
இந்தியத் தலைநகர் டெல்லியில் கடந்த திங்கள்கிழமை தொடங்கிய வன்முறையில் 23 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த வன்முறைக்கு, சமூக விரோதிகளும், அரசியல் சக்திகளும், வெளியில் இருந்து வந்தவர்களுமே காரணம், சாமானிய மக்கள் காரணமில்லை என்று கூறியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
டெல்லியில் நிகழ்ந்த கலவரத்தில் பலியான தலைமைக் காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு டெல்லி அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என்றும் இன்று (புதன்கிழமை) சட்டமன்றத்தில் அவர் அறிவித்துள்ளார்.
இந்துக்களோ, முஸ்லிம்களோ பயன் அடையவில்லை
இந்த கலவரத்தால் இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ லாபம் அடையவில்லை என்று குறிப்பிட்ட அரவிந்த் கேஜ்ரிவால், அனைவரும் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்துக்களும், முஸ்லிம்களும் பலியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், "இதுவரை நிகழ்ந்த சம்பவங்கள் போதும். நவீன டெல்லியை உடல்களின் குவியல்கள் மீது கட்ட முடியாது. வெறுப்பு அரசியலுக்காக வீடுகளை கொளுத்துவதும், வன்முறையில் ஈடுபடுவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார் அவர்.
அரசியல் சக்திகளும் வெளியில் இருந்து வந்தவர்களுமே வன்முறைக்கு காரணம் என்று கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்படவேண்டும், வன்முறை பாதித்த பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே
மோதி - சோனியா கருத்து
இதனிடையே, அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்து பிரதமர் நரேந்திரமோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோதி விடுத்த செய்தி
அமைதியும், நல்லிணக்கமும் நமது விழுமியங்களின் மையப் பகுதி. எனது டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நிசப்தமும், சகஜ நிலையும் மிக விரைவாக திரும்புவது முக்கியமானது.
முன்னதாக, அவர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில்,
"டெல்லியின் பல பகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜநிலையை உறுதி செய்ய போலீசும் மற்ற முகமைகளும் களத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
சோனியா வேண்டுகோள்
மத்திய அரசு, குறிப்பாக உள்துறை அமைச்சர்தான் டெல்லியின் தற்போதைய நிலைக்குப் பொறுப்பு. இதற்குப் பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறுகிறது காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பதிவு.
டெல்லி வன்முறை குறித்த இன்றைய செய்திகளைப் படிக்க:
டெல்லி நிலவரத்தை விவாதிப்பதற்காக, கூட்டப்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியின் அவசரக் கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், தேசத்தின் சார்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டி கேட்கும் கேள்வி என்று கூறி இரண்டு கேள்விகள் விடுக்கப்பட்டிருந்தன.
அதில் "கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டின் உள்துறை அமைச்சர் எங்கே? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் டெல்லி முதல்வர் எங்கே? அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?" என்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: