குஜராத் கலவர வழக்கு: "நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கம் குற்றமற்றது" - நானாவதி ஆணையம் அறிக்கை

பட மூலாதாரம், Getty Images
2002 குஜராத் கலவர வழக்கில், குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்து நரேந்திர மோதி தலைமையிலான அரசு குற்றமற்றது என இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நானாவதி - மேத்தா ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாநிலத்தில் சில இடங்களில் மக்கள் கும்பலாக கூடுவதை கட்டுப்படுத்துவதில் மாநில போலீசாரின் திறன் சிறப்பாக இல்லை என இந்த ஆணைய அறிக்கை தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வேகம் மற்றும் ஆர்வத்தை போலீசார் வெளிப்படுத்தவில்லை என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
1984 சீக்கியர்கள் கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நானாவதி ஆணையம் அமைக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், கடந்த 2002-ம் ஆண்டு, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் சில யாத்ரிகர்கள் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த இனக்கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இந்த கலவரங்களை விசாரிக்க தற்போதைய இந்திய பிரதமரும், அப்போதைய குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோதி, நானாவதி ஆணையத்தை அமைத்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் படேலிடம், 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை நானாவதி ஆணையம் சமர்ப்பித்தது.
2000 பக்கங்களுக்கும் அதிகமான இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக இந்த ஆணையம் அப்போது தெரிவித்த போதிலும், அதன் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மாநில அரசிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு சமர்பிக்கப்பட்ட அறிக்கை இன்று (புதன்கிழமை) குஜராத் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தகவலை மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதி செய்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












