You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே: “பழிவாங்கலின் மூலம் நீதியை பெறக்கூடாது”
"நீதியை பழிவாங்கலின் மூலம் பெறக்கூடாது; பழிவாங்கலின் ஊடாக கிடைக்கப்படும் நீதி அதன் அம்சத்தை இழப்பதாக நான் நினைக்கிறேன்," என இந்திய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற கட்டட தொடக்க விழாவில் பேசிய பாப்டே, "நீதி என்பது உடனடியாக கிடைக்க வேண்டுமென்றில்லை. நீதியை பழிவாங்கலின் மூலம் பெறக்கூடாது. பழிவாங்கலின் மூலம் பெறும் நீதி அதன் அம்சத்தை இழப்பதாக நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.
மேலும், "சமீபமாக நடைபெற்ற நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள் பழைய விவாதத்தை புதிய வீரியத்துடன் கிளப்பியுள்ளது. கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கப்படுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் தொய்வு குறித்து ஆராய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை," என்றும் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியின் இந்த கருத்து ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு பெண் கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நான்கு பேர் நேற்று போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர் இந்த என்கவுன்டரை கண்டித்தும், பாராட்டியும் இருதரப்பு கருத்துகள் வெளியாகி வரும் நிலையில் தலைமை நீதிபதியின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
யார் இந்த பாப்டே?
எப்ரல் 24, 1956ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்த நீதிபதி பாப்டே, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 1978ஆம் ஆண்டு, சட்டம் படித்து முடித்தார். முதலில் பாம்பே நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர் 1998ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார்.
29 மார்ச், 2000 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2012ல் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார் பாப்டே. அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
பாப்டேவின் குடும்பத்தில் பல வழக்கறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவரது தாத்தாவும் ஒரு வழக்கறிஞர்தான். பாப்டேவின் தந்தையான, அர்விந்த் பாப்டே, 1980 மற்றும் 1985ல் மகாராஷ்டிராவின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தார்.
ஆதார் வழக்கு, என்ஆர்சி அசாம் உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பாப்டே பங்கு வகித்திருக்கிறார்.
அண்மையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு தீர்ப்பு இறுதியானது அல்ல என்று தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்து இருந்தார்.
பிற செய்திகள்:
- 30 கோடி சந்தாதாரர்களை பாதிக்கும் குறைபாட்டை சரிசெய்த ஏர்டெல் - நடந்தது என்ன?
- "குழந்தை என்னை அடித்தால்கூட அவர் தாங்கமாட்டார்" - சூடானில் இறந்த தமிழரின் மனைவி குமுறல்
- 200 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம் - விவசாயிகளுக்கு கிடைப்பது என்ன?
- உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: தீ வைக்கப்பட்ட பெண் உயிரிழப்பு - நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: