You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை மாணவி கூட்டு வன்புணர்வு வழக்கு: தேடப்பட்டுவந்த இளைஞர் கைது
கோவையில் பிறந்த நாள் கொண்டாட பூங்காவுக்கு சென்ற பள்ளி மாணவியை, கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் இன்று மாலை கைது செய்துள்ளனர்.
கோவையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் 17 வயது பள்ளி மாணவியை, 6 நபர்கள் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 26ஆம் தேதி, மாலை தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது மாணவி. அப்போது அங்கிருந்த 6 நபர்கள் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதனையடுத்து, சிறுமியின் தாயார் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கும்பலை இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சிறுமியை வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வல்லுறவு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் பெண்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பூங்காவில் இருந்த மாணவியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.
"அந்தப் பெண்ணையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், அந்தப் பெண்ணை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வன்புணர்வு செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்", என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
மாணவியை அழைத்துச் சென்ற நபர் தான், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரோடு கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்தார், எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை முறையான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.
இந்நிலையில், மாணவி வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மணிகண்டன், கோவை பெண்கள் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
மற்றொரு முக்கிய குற்றவாளியான கார்த்திக் என்ற இளைஞரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கோவையில் இன்று மாலை அந்த நபர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் காவல் துறையின் பிடியில் வந்துள்ளதால், விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவியை கூட்டு வன்புணர்வு செய்த நபர்கள் அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்