''ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி'' - தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்ற மம்தா

ஏன் தர்ணாவில் அமர்ந்தார் மம்தா? யார் இந்த ராஜீவ் குமார்?

பட மூலாதாரம், Getty Images

கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் மேற்கொண்டு வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வாபஸ் பெற்றார்.

தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்ட மம்தா, "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களின் தார்மீக வெற்றியாகும், நாங்கள் நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம், ராஜீவ் குமார் ஒருபோதும் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இல்லை என்று கூறவில்லை" என்றார்.

''இந்த தர்ணா போராட்டம் ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி'' என்று மம்தா பானர்ஜி கூறினார்.

சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த ஞாயிறு மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் ஆலோசனை நடத்திய முதல்வர் மம்தா , கூட்டாட்சி முறையை பாதுகாக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். உடனடியாக, கொல்கத்தா மெட்ரோ சாலைப் பகுதியில் தர்ணாவையும் தொடங்கினார். அவருடன் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.

மம்தா - ராஜிவ் குமார்

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு தொடுத்தது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் வழங்கியது.

ராஜீவ் குமார் சிபிஐக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் காவல் ஆணையரை கைது செய்ய இயலாது என்றும் தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில் மம்தா தனது தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

மம்தா பானர்ஜி ஏன் தர்ணாவில் அமர்ந்தார்?

இந்த அரசியல் களேபரங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தோமானால் இந்த தர்ணா, இந்த அரசியல் பரபரப்பு அனைத்தும் ராஜிவ் குமார் எனும் ஒற்றை மனிதரிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது.

சரி. யார் இந்த ராஜிவ் குமார்?

ராஜிவ் குமார் 1989ஆம் ஆண்டு, மேற்கு வங்க பிரிவை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி. அவர் தற்சமயம் கொல்கத்தா போலீஸ் ஆணையராக பணியாற்றுகிறார்.

ராஜிவ் குமார் உத்தர பிரதேச மாநில அஜாம்கார்க் மாவட்டத்தில் பிறந்தவர். ஐ.ஐ.டி கான்பூரில் கணினி துறையில் பொறியியல் படித்தவர்.

ராஜிவ் குமார்

பட மூலாதாரம், Kolkata Police

படக்குறிப்பு, ராஜிவ் குமார்

இந்த தொழிற்நுட்ப அறிவை அவர் தனது போலீஸ் பணியில் பெரிதும் பயன்படுத்தி இருக்கிறார். தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்தி கண்காணிப்பு பணியை மேற்கொண்டவராகவே அவர் மேற்கு வங்கத்தில் அறியப்படுகிறார்.

நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக 90களில் அவர் மிகத்திறமையாக பணியாற்றினார். அவர் பிர்பும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்.

அவர் பல சுரங்க மாஃபியாக்களை கைது செய்திருக்கிறார். அந்த சமயத்தில் அதிகாரிகள் யாரும் நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை.

மம்தாவின் இந்த போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் ஓங்கி ஒலித்தது.

மம்தாவின் போராட்டத்தின்போது சமூக ஊடகங்களில் ராஜமன்னார் கமிட்டி குறித்து பலர் இடுகைகளை பகிர்ந்தனர்.

ராஜமன்னார் கமிட்டி

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைUMAMAHESHVARAN PANNEERSELVAM

'ராஜமன்னார் கமிட்டி'

ராஜமன்னார் கமிட்டி 1969ஆம் ஆண்டு கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒன்று.

இந்த கமிட்டியானது மத்திய மாநில அரசுகளின் அதிகார பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டது.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969ஆம் ஆண்டு1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது.

அக்குழுவின் அறிக்கை மத்திய-மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் முக்கிய சாசனமாக கருதப்பட்டது.

மத்திய - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கியக் காரணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :