You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல'
இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல'
நோய்களால் ஏற்படும் மரணம் குறித்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்த செய்தியை 'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
மார்பக புற்றுநோயை தவிர பெரும்பாலான புற்றுநோய் தொடர்பான மரணங்களுக்கு வயது சார்ந்த காரணங்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், 1990 முதல் 2016 ஆண்டு வரை நிகழ்ந்த மரணங்களை ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் இந்த செய்தி கூறுகிறது.
தற்போதுள்ள நிலையில் புற்றுநோய் தொடர்பான மரணத்தை தவிர்க்க 20 முதல் 30 மட்டுமே சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதற்கு காரணம் பெரும்பாலான புற்றுநோயாளிகள் தங்களுக்கு நோயின் பாதிப்பு தீவிரநிலையை எட்டியபிறகே மருத்துவரை அணுகுவதாகவும், ஆரம்பநிலையில் பரிசோதனை செய்ய தவறுவதே இதற்கு காரணம் என்றும் மேலும் கூறியுள்ளனர். மேலும் இந்த செய்தியில் இதயம் தொடர்பான நோய்களே உயிர்கொல்லி நோய்களில் முதலிடத்தில் உள்ளது என்றும், அதற்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்திலே புற்றுநோய் இருப்பதாகவும் ஆய்வு செய்தியை மேற்கோள்கட்டி குறிப்பிட்டுள்ளது.
நீரழிவு நோயும் சமூகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாக கூறும் இந்த நாளிதழ் செய்தி, தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் நீரழிவு தொடர்பாக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தினமணி: தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை - ராஜபக்ச
விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரை, இனரீதியிலான போராக கருதக்கூடாது என்றும், அப்போரில் தமிழர்களை குறிவைத்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ச கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
'இந்தியா - இலங்கை உறவுகள்; அதை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பாதை' என்ற தலைப்பில் தில்லியில் நடந்த கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, விடுதலைப்புலிகள் அமைப்பின் செயல்பாட்டானது இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது. இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை படுகொலை செய்தனர் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது.
இந்தியாவுடன் இணக்கமான நட்புறவு வைத்துக்கொள்வது மற்றும் இருநாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவை தனது எதிர்கால வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாகும் என்று ராஜபக்ச கூறியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்) - தமிழகத்தில் ஹெலி ஆம்புலன்ஸ் சேவை
தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
விமான நிலையங்கள் அருகில் இல்லாத இதய மாற்று அறுவை சிகிச்சை மையங்களுக்கு ஹெலி ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.
'இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்' - முன்னாள் ஹாக்கி கேப்டன் சர்தார் சிங்
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள செய்தியை 'தி நியூ இந்திய எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ளது
கடந்த 2006ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த சர்வதேச போட்டியில் இந்திய அணியின் சார்பாக சர்தார் சிங் அறிமுகமானார். அப்போது முதல், இந்திய அணியின் நடுக்கள வீரராக அவர் இருந்துவந்தார் என்பதையும் அந்த நாளிதழ் நினைவுகூர்ந்துள்ளது. சுமார் 350 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள சர்தார் சிங், கடந்த 2008 முதல் 2016 வரையிலான எட்டு ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது இந்திய ஹாக்கி அணியை வழிநடத்திய இளம் இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய போட்டிகளின் வெண்கலம் வென்று ஏமாற்றம், வரும் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை தவறவிட்டது, வயது, வேகமின்மை உள்ளிட்ட காரணத்தால் இவர் சர்வதேச அளவில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். ஜகார்த்தாவில் நடந்த ஆசிய போட்டிகளின் போது 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பேன் என சர்தார் முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்தார் ஓய்வை அறிவித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
''12 ஆண்டுகளுக்கு மேல் நான் விளையாடிவிட்டேன். இது நீண்ட காலகட்டமாகும். தற்போது இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம். அவர்களுக்கு வழிவிடுகிறேன்' என்று அவர் தெரிவித்ததாக நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்