You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
18 வயதை எட்டாத `மனைவி'யுடனான பாலுறவு குற்றம்: நீதிமன்ற தீர்ப்பு நடைமுறையில் சாத்தியமா?
திருமண வயதை அடையாத மனைவிகளுடன் பாலுறவு கொள்ள ஆண்களை அனுமதிக்கும் சட்டத்தை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் படி 18 வயதை விட குறைவான வயதுடைய பெண்ணுடன் பாலுறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும்.
ஆனால், 15 வயதைவிட அதிகமான மனைவியிடம் உறவு கொள்வது குற்றமல்ல என்று அதில் ஒரு விதிவிலக்கு இருந்தது.
ஓர் அரசு சாரா அமைப்பு தொடுத்த வழக்கில், புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்த விதிவிலக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி 18 வயது நிறைவடையாத, திருமண உறவில் உள்ள பெண்கள், கட்டாயமாக பாலுறவு வைத்துக்கொள்ள தங்கள் கணவன்மார்கள் வற்புறுத்தியதாக, சம்பவம் நடந்த ஓராண்டுக்குள், புகார் தெரிவிக்க முடியும்.
ஆனால், இந்த உத்தரவை அமல் படுத்துவது கடினம் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்தாலும், திருமண உறவில் நிகழும் பாலியல் வல்லுறவு குற்றமாகக் கருதப்படவில்லை.
இந்தத் தீர்ப்பு பெண்ணுரிமைக்காகப் போராடும் அமைப்புகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
"பெண்களுக்கு எதிராக வரலாற்றுப் பிழையைத் திருத்தும் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாகும். திருமணத்தை எப்படி பெண்களைப் பாரபட்சமாக நடத்துவதற்கான காரணியாகக் கருத முடியும்?" என்று பிபிசியிடம் கூறினார், இவ்வழக்கின் முக்கிய மனுதாரரான 'இன்டிபென்டென்ட் தாட்' எனும் அரசு சாரா அமைப்பின் நிறுவனரான, விக்ரம் ஸ்ரீவத்சவா.
வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், குழந்தைத் திருமணங்கள் மிகவும் பரவலாக நடக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவது மிகவும் கடினம் என்கிறார் டெல்லியிலுள்ள பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.
"நீதிமன்றங்களும், காவல் துறையும் திருமண வயதை எட்டாதவர்களின் படுக்கை அறையைக் கண்காணிக்க முடியாது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணமான இளம் பெண்களுக்கு, தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக நீதிமன்றத்தையோ காவல் துறையையோ அணுகுவதற்கு, வழக்கமாகத் துணிச்சல் இருக்காது," என்கிறார் அவர்.
வறுமை மற்றும் பட்டினி ஆகியவற்றை ஒழித்தல், எல்லோருக்கும் ஆரம்பிக்க கல்வி வழங்குதல், பாலின சமத்துவத்தை அதிகரித்தல், குழந்தைகளின் உயிரைக் காத்தல், பெண்களின் உடல் நலத்தை முன்னேற்றுதல் போன்ற முன்னேற்றத்திற்கான இலக்குகளை அடைவதற்கு குழந்தைத் திருமணங்கள் மிகப்பெரிய தடையாக இருப்பதாக இந்திய அரசு கூறுகிறது.
பிற செய்திகள்
- யாருக்கு அறிவு அதிகம்? வெளியுறவு செயலருக்கு டிரம்ப் சவால்
- இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி?
- `சே' குவேராவின் வாரிசாக வாழ்வதில் உள்ள சவால்கள் என்ன? மனம் திறக்கும் மகன்
- தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி வளர்ச்சி அடைந்தாரா அமித் ஷா மகன்?
- நாங்கள் பள்ளிக்குச் செல்வது எப்படி? 360 டிகிரி மெய்நிகர் காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்