You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரபரப்பான சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில்
தமிழகத்தில் அமைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்னும் சிறிது நேரத்தில் நடக்கவுள்ள சூழலில், சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
I
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய தினம் (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், சட்டப்பேரவை அமைந்துள்ள பகுதியில் போலீஸார் விதித்துள்ள கடும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத்தொடர்ந்து, 30 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
இச்சூழலில், தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக சட்டமன்றச் செயலர் ஜமாலூதீன் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இன்று காலை கூவத்தூரிலிருந்து சுமார் 9.15 மணிக்கு சென்னை நோக்கி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புறப்பட்டனர்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் போலீஸார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
சட்டப்பேரவை அமைந்துள்ள பகுதியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்குமுன் போலீஸார் தடுப்பு பேரிகார்டுகளை அமைத்துள்ளனர்.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு புறப்பட்ட ஸ்டாலின் உள்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள், போலீஸார் விதித்துள்ள கடும் கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்திற்கு முன்பே தங்களுடைய வாகனங்களில் இருந்து இறங்கி நடந்தப்படியே சட்டப்பேரவைக்குள் சென்றனர்.
முன்னர், சட்டப்பேரவையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து தி.மு.க வாக்களிக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
சட்டப்பேரவையில் மொத்த இடங்கள் 234 என்றாலும், இன்று வாக்களிக்கவிருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதைவிடக் குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில், அவர் வாக்களிக்க சட்டப்பேரவை வரமாட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் ஜெயல்லிதாவின் இடம் அவர் மறைவை அடுத்து காலியாக இருக்கிறது.
சபாநாயகர் தனபால் வாக்கெடுப்பில் சம நிலை காணப்பட்டால் மட்டுமே அவரது வாக்கைச் செலுத்துவார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்