பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, காணுங்கள்: அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளி

யார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசி துணைவியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார்.

இருந்தபோதும், அந்த நேரத்தில் "இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது" என்று அந்த நபர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்.

நடந்த சம்பவம் குறித்து நார்த் யார்க்ஷயர் காவல்துறை கூறுகையில், "23 வயதான ஒரு நபர் பொது ஒழுங்கை மீறிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்றது.

கூட்டத்தில் இருந்தவர்கள், "கடவுளே அரசரைக் காப்பாற்றுங்கள்" என்றும், எதிர்ப்பாளரை நோக்கி "உனக்கு அவமானம்" என்றும் குரல் எழுப்பினர்.

காணொளிக் குறிப்பு, யார்க்கில் அரசர் சார்ல்ஸ் மீது முட்டைகளை வீசிய நபர் கைது செய்யப்பட்டார்

யார்க்ஷயருக்கு அலுவல்பூர்வமாக அரசர் வருகை தந்த இரண்டாம் நாளில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த பயணத்தின்போது அரசருடன் அரசி துணைவியாரும் டான்காஸ்டருக்கு பயணம் செய்தார்.

இந்த அரச தம்பதியை யார்க்கில் நகரத் தலைவர்கள் வரவேற்றனர், அப்போது எதிர்ப்பாளர் தரப்பில் இருந்து அரச தம்பதியை நோக்கி ஏராளமான முட்டைகள் வீசப்பட்டன.அந்த நேரத்தில் லார்ட் மேயர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் அரசர் சார்ல்ஸ் கைகுலுக்கியபடி இருந்தார்.

திடீரென்று தரையில் விரிசல் விழுந்த முட்டை ஓடுகளைப் பார்க்க சில நொடிகள் அரசர் நின்று கீழே பார்த்தார்.

முட்டைகள் அரச தம்பதி மீது விழாதபோதும் அந்த பகுதியில் இருந்து இருவரையும் உடனடியாக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதேவேளை மற்றொரு அதிகாரிகள் குழு, அரசரின் வருகைக்காக அமைக்கப்பட்ட தற்காலிக வேலிகளுக்குப் பின்னால் சந்தேக நபரை தரையில் தடுத்து கட்டுப்படுத்துவதைக் காண முடிந்தது.

பிரிட்டன் கூட்டம்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, மறைந்த தமது தாயின் சிலையை திறப்பதற்காக நகருக்கு வருகை தரும் அரசை வாழ்த்த மக்கள் திரண்டிருந்தபோது எதிர்ப்பாளரின் குரல்கள் கேட்கப்பட்டன.

சம்பவத்தை நேரில் பார்த்த ப்ளாசம் ஸ்ட்ரீட் கேலரியின் உரிமையாளரான கிம் ஓல்ட்ஃபீல்ட், தனது கடையின் வாசலில் நின்று தம்பதியின் வருகையை "மகிழ்ந்து" கொண்டிருந்தபோது "திடீரென சத்தமும் முட்டைகளும் பறந்தன" என்று கூறினார்.

"நான் முழுவதையும் பார்த்தேன், போலீசார் தடுப்பு மீது ஏறி அந்த நபரின் மேலே படுத்து அவரை கட்டுப்படுத்த முயன்றனர்.

"அதற்குள்ளாக அந்த நபரால் ஐந்து முட்டைகளை வீச முடிந்தது."

"சத்தம் தொடங்கும் போது கமில்லா கொஞ்சம் பதற்றமாக இருந்தார். ஆனால் மிக விரைவாகவே நிலைமையை காவல்துறையினர் கையாண்டனர். அந்த நபரின் அவமானகர செயல் ஒரு அழகான தருணத்தை கெடுத்துவிட்டது," என்கிறார் கிம் ஓல்ட்ஃபீல்ட்.

2px presentational grey line
Analysis box by Sean Coughlan, royal correspondent

எதிர்ப்பாளரால் வீசப்பட்ட முட்டைகள் சம்பவம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசர் எவ்வளவு ஆபத்தை சந்திக்கக் கூடிய சூழலில் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது என்கிறார் அரண்மனைக்கான பிபிசி செய்தியாளர் சீன் கோக்லான். நடந்த சம்பவம் குறித்த அவரது பார்வை:

"அரசர் சார்ல்ஸ் நலம் விரும்பிகள் அடங்கிய கூட்டத்திடம் மிகவும் அணுகக்கூடிய நபராகவே இருந்துள்ளார். மக்களுடன் கைகுலுக்கி வருவதும் நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்வதும் என மக்கள் சந்திப்பு பயணத்தின்போது உண்மையிலேயே அவர் ஒரு அரசரைப் போலவே மாறினார்.

அரசர், தனது தாயின் மரணத்திற்கு அடுத்த சில நாட்களில் மக்களைச் சந்தித்த போது அவர்களின் அரவணைப்பை அனுபவித்ததாகவே தோன்றுகிறது. நேற்று அவர் லீட்ஸின் வீதிகளில் வரிசையாக நிற்கும் கூட்டத்தை வாழ்த்தினார். அந்த தருணத்தை பதிவு செய்த செல்பேசி புகைப்பட கிளிக்குகளையும் அவர் எதிர்கொண்டார்.

ஒரு அமெரிக்க அதிபரை சுற்றியுள்ள அடர்த்தியான பாதுகாப்பிற்கு சற்று குறைவாகவே இந்த நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு இருந்திருக்கும். எனவே பிரிட்டனில் உள்ள மூத்த அரசியல்வாதிகள், இத்தகைய கூட்டத்தின் சீரற்ற தன்மையால் இனி இதுபோல வெளிப்படையாக நடந்து கொள்ள வாய்ப்பில்லை. கூட்டத்துக்கு வரும் மக்களில் யார் எதை எடுத்து வருவார்கள் என யாருக்குத் தெரியும்?

ஆனால் பாதுகாப்பாக வலம் வருவதற்கும், மக்களிடையே அணுகும் முகமாக இருப்பதற்கும் இடையே எப்போதும் ஒரு பாகுபாடு இருக்கவே செய்யும். இதுவே கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளாக இருந்தால் அரசருக்கும் கூட்டத்திற்கும் இடையில் சிறிய இடைவெளி ஏற்படுத்தப்படும்.

இந்த நிகழ்வின் மறுபுறம் 'இவர் என் ராஜா அல்ல' என்ற பதாகையுடன் சில போராட்டக்காரர்கள் காணப்பட்டனர். அவர்கள் நின்றிருந்த சில அடி தூரத்தில் இருந்து தான் முட்டைகள் வீசப்பட்டன.

ஆனால், நடந்த நிகழ்வால் அரசர் கவலைப்படவில்லை என்றே தோன்றுகிறது. காவல்துறை விரைவாக எதிர்வினையாற்றியது. ஆனால் அதற்குள் முட்டைகள் வீசப்பட்டு விட்டன," என்கிறார் சீன் கோக்லான்.

2px presentational grey line

யார்க் நகருக்கு அதிகாரபூர்வமாக வருகை தரும் அரசரை லார்ட் மேயர் வரவேற்கும் பாரம்பரிய நிகழ்வில் நின்றிருந்த கூட்டத்தில் அரசர் சார்ல்ஸ் குழப்பமில்லாமல் தோன்றினார்.

இத்தகைய பாரம்பரிய நிகழ்வில் அரசரின் தாய் ராணி இரண்டாம் எலிசபெத் 2012ஆம் ஆண்டு கலந்து கொண்டார்.

இப்போது அரசர் மற்றும் அரசி துணைவியார் யார்க் மின்ஸ்டரில் மாட்சிமை வாய்ந்த அரசியின் சிலையை திறப்பதற்காக யார்க்கிற்குச் வந்துள்ளனர். மறைந்த அரசியாரின் மரணத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட அவரது முதல் சிலையின் திறப்பு விழா நிகழ்ச்சி இதுவாகும்.

யார்க் பேராயர், ஸ்டீபன் காட்ரெல், "நடந்த சம்பவம் பொதுமக்களை சந்திப்பதில் இருந்து அரச தம்பதியை தடுக்காது," என்று கூறினார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், "பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சில சமயங்களில் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் இருக்கிறார்கள். நாம் சந்திக்க முடியாத அளவுக்கும் அரட்டை அடிக்க முடியாத அளவுக்கும் சிந்தனை கொண்ட மக்கள் அல்லாத ஒரு நாட்டில் உண்மையில் உலகில் வாழவே நான் ஆசைப்படுகிறேன்," என்கிறார்.

"நிச்சயமாக அரசியும் அரசி துணைவியாரும் இதைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மக்களுடன் [பின்னர்] கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் நடந்த சம்பவம் தங்களை பாதித்து விட அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராயர் ஸ்டீபன் காட்ரெல்.

அரசர் சார்ல்ஸ்
படக்குறிப்பு, வீசப்பட்ட முட்டைகள் அரச தம்பதி மீது விழவில்லை
பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்
படக்குறிப்பு, யார்க்கில் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் மற்றும் கமில்லாவை காண அலைமோதிய மக்கள் கூட்டம்.

பின்னர், செளத் யார்க்ஷயரில் உள்ள டான்காஸ்டருக்கு அதன் நகர அந்தஸ்தை முறையாக வழங்குவதற்காக அரசர் வந்தபோது, அவரை உள்ளூர் மக்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

சார்ல்ஸ் மற்றும் கமில்லா பின்னர் முட்டை மற்றும் வாட்டர்கெஸ் சாண்ட்விச்கள் உள்ளிட்ட மெனுவுடன் கூடிய விருந்து அடங்கிய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிரிட்டன் அரசர் சார்ல்ஸ்

பட மூலாதாரம், PA Media

படக்குறிப்பு, டான்காஸ்டருக்கு நகர அந்தஸ்தை வழங்குவதற்காக மேன்ஷன் ஹவுஸுக்கு வந்த அரசர் தமது நலம் விரும்பிகளைச் சந்தித்து கைகுலுகுக்கிறார்.
línea

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: