You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹாரி, மேகன் மெர்கலுக்கு நாங்கள் செலவு செய்யமாட்டோம்: டிரம்ப் மற்றும் பிற செய்திகள்
கனடாவில் இருந்து அமெரிக்கா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனின் பாதுகாப்பு செலவினங்களை அமெரிக்கா ஏற்காது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசியுடன் தான் நல்ல நட்பு பாராட்டுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், இளவரசர் ஹாரி மற்றும் மேகனுக்கான பாதுகாப்பு செலவினங்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் பொது பாதுகாப்பு நிதியை தாங்கள் கோர போவதில்லை என ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அறிவித்திருந்தனர்.
தற்போது கொரோனா வைரஸ் பரவுகிற காரணத்தால், மேகனின் சொந்த ஊரான கலிஃபோர்னியாவிற்கு இந்த தம்பதிகள் இடம்பெயர்ந்துள்ளனர். மார்ச் 31ம் தேதி முதல் இவர்கள் பிரிட்டன் அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளனர்.
ஹாரி மற்றும் மேகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக அமெரிக்க அரசாங்க உதவியை பெற போவதில்லை. தனியார் பாதுகாப்பு நிதியை பயன்படுத்தப்போவதாக குறிப்பிட்டிருந்தனர்.
ஹாரி மற்றும் மேகன் கனடாவில் வசித்தபோது, கனடா அரசாங்கமும் பாதுகாப்பு செலவினங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. தற்போது அமெரிக்காவும் அதையே பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹாரி மற்றும் மேகன் தங்கியுள்ள கலிஃபோர்னியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,565 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கலிஃபோர்னியாவின் ஆளுநர் மக்கள் அனைவரையும் தங்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இளவரசர் ஹாரியின் தந்தையான வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என அண்மையில் பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது. ஆனால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை நிர்வாகம் கூறுகிறது.
மிரட்டும் கொரோனா: ஒரே நாள் பலி எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்ட மலேசியா
மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இது புதிய உச்சமாகும். இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதும் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,470 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
கொரோனா வைரஸ் பரிசோதனை கருவியை உருவாக்கிய மறுநாள் குழந்தை பிரசவித்த இந்தியப் பெண்
கொரோனா பாதிப்பால் கடுமையாக போராடிவரும் உலகநாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் சரியான முறையில் விரைவாக மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.
இந்நிலையில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சரியான முறையில் உபகரணங்கள் கிடைத்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பெண் வைராலஜிஸ்ட் ஒருவர் தனது குழந்தையை பெற்றேடுக்கும் சில மணி நேரத்துக்கு முன்பு, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்களை கண்டுபிடித்தார்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் பரிசோதனைக் கருவி முதல் முறையாக, கடந்த வாரம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் வந்தாலே மரணம்தானா? உயிர் பிழைக்கும் வாய்ப்பு விகிதம் எவ்வளவு?
கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.
கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை.
விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலே மரணம்தானா?
ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் - பிரதமர் நரேந்திர மோதி
"கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உங்கள் வாழ்க்கையை, முக்கியமாக ஏழைகளின் வாழ்க்கையை கடினமாக்கியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்களில் சிலர் என் மீது கோபத்தில் இருப்பீர்கள். ஆனால், இந்த யுத்தத்தை வெல்ல சில கடினமான நடவடிக்கைகள் தேவை" என மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
இந்திய மக்களை பாதுகாப்பதுதான் முக்கியம் என்று மோதி குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: