You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புகைப்பிடித்தல்: புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் 'மந்திர' திறன் கண்டுபிடிப்பு மற்றும் பிற செய்திகள்
புகைப்பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் பிறழ்வுகளை சரிசெய்யும் ஒருவித 'மந்திர' திறன் நுரையீரலுக்கு உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இதற்கு ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டியது அவசியம்.
நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பிறழ்வுகள், ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகுகூட தொடர கூடியது என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் நேச்சர் எனும் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள ஆய்வு கட்டுரையின்படி, நுரையீரலில் ஏற்படும் இந்த விரும்பத்தகாத மாற்றத்தின்போது, அதிலிருந்து தப்பிக்கும் ஒருசில செல்கள் பிறகு, பாதிக்கப்பட்ட நுரையீரலை குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
ஒரு பாக்கெட் சிகரெட்டை சுமார் 40 ஆண்டுகளுக்கு புகைத்துவிட்டு, பிறகு அந்த பழக்கத்தை விடுத்தவர்களிடம் இந்த வியத்தகு மாற்றம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
புகையிலையில் உள்ள ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் நுரையீரல் செல்களில் உள்ள டி.என்.ஏவை சிதைத்து மாற்றியமைக்கின்றன. இது நாளடைவில் புற்றுநோயாக மாறுகிறது.
கோவை தொழில் துறை பட்ஜெட் மூலம் ஜி.எஸ்.டி வரியின் பாதிப்பிலிருந்து மீளுமா?
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழகத்தின் தொழில் நகரம் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கிவருகின்றன.
பெரும் உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்களைத் தயாரித்து ஒப்படைக்கும் பணியை நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
கொரோனா வைரஸ் பரவ சீனர்களின் உணவுப் பழக்கம் காரணமா?
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். 4500 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனா தவிர வேறு எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவுகிறது என்பது குறித்தும், இந்த வைரஸ் பாதிப்பின் காரணம் வௌவால் இறைச்சி உள்ள சூப்தான் என்று கூறும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இவ்வாறான காணொளிகள் எங்கிருந்து பகிரப்பட்டது, ஏன் பரவுகிறது என்பது குறித்து பிபிசி மானிடரிங் குழு ஆராய்ந்தது.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் பரவ சீனர்களின் உணவுப் பழக்கம் காரணமா?
'தமிழ் மொழிக்கு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் பிரதான இடம்'
தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
விரிவாக படிக்க: 'குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு பிரதான இடம்': தஞ்சை பெரிய கோயில்
டி20 தொடரை இந்தியா வென்றது எப்படி?
ஹாமில்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த 3-வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் வென்ற இந்தியா தொடரை 3-0 என்று வென்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுக்க, போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: