You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கலிஃபோர்னியா காட்டுத்தீயால் 8 லட்சம் பேர் இருளில் தவிப்பு மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 8 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சான்ஃபிரான்ஸிஸ்கோவின் கடற்கரை பகுதியின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கோபத்தில் ஆழ்ந்தனர்.
அங்கு மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனமான பசிஃபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த மின்சார துண்டிப்பு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் மின்சார கம்பிகளால் கடந்த வருடம் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்டது.
அதிகபடியான காற்றடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மேலும் காட்டுத்தீ பரவாமல் இருப்பதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த பகுதியில் கடந்த வருடம் நடைபெற்ற காட்டுத்தீ சம்பவத்தால் 150,000 ஏக்கர் நிலம் தீயில் கருகியது. அதில் 86 பேர் உயிரிழந்தனர்.
சிஃபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மோசமான உபகரணங்களே இந்த காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற காட்டுத்தீ சம்பவத்திற்கும் அந்த நிறுவனமே காரணம் என்று கூறப்பட்டது.
"அமேசான் - பிளிப்கார்ட் விற்பனை போரால் சேர்ந்த பணம்"
தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன.
கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.
இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் இது குறித்து பேசினோம்.
அவரின் பேட்டியை் மேலும் படிக்க:ரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இல்லையா?
ஜியோ எண்ணில் இருந்து பிற நெட்வொர்க் எண்களுக்கு கால் செய்தால் நிமிடத்துக்கு 6 பைசா வரை வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு நெட்வொர்க்கில் இருந்து இன்னொரு நெட்வொர்க் எண்ணுக்கு செய்யப்படும் கால்களுக்காக விதிக்கப்படும் கட்டணம் ஆங்கிலத்தில் இன்டர் கணெக்ட் யூசேஜ் சார்ஜ் சுருக்கமாக ஐ.யூ.சி. என்று அழைக்கப்படுகிறது.
பயனர்களுக்கு இதுவரை ஐயூசி கட்டணம் விதிக்காமல் இருந்த ஜியோ தற்போது கட்டணம் வசூலிக்கப் போகிறது. ஆனால், பயனர்களுக்கு விதிக்கப்படும் இந்தக் கட்டணத்தை ஈடுகட்டும் வகையில், ரூ.10 கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்குப் பதிலாக 1 ஜிபி அளவு இணைய சேவை இலவசமாக வழங்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
நரேந்திர மோதி- சீன அதிபர் ஷி ஜின் பிங் சந்திப்பு: தமிழகத்தில் ஏன் நடக்கிறது தெரியுமா?
இதுவரை சீன அதிபர் ஷி ஜின் பிங் சென்னை வருகை குறித்து மத்திய அரசு தகவல் ஏதும் பகிராமல் இருந்தது.
சீன அதிபர் சென்னை மாமல்லபுரம் வருவது உறுதியான பின்னும், மத்திய அரசு இது குறித்து அலுவல் பூர்வமாக ஏதும் தெரிவிக்காமலிருந்தது. ஆனால், அதே நேரம் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு மாமல்லபுரம் சென்று ஆய்வு செய்தது.
இப்படியான சூழலில் இந்தியப் பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்திப்பதை வெளியுறவு அமைச்சகம் நேற்று உறுதி செய்துள்ளது .
ஏன் இந்த சந்திப்பு?
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, சீன அதிபரைச் சந்தித்தார். அப்போது இந்தியா வர ஷி ஜின்-பிங்குக்கு அழைப்பு விடுத்தார் மோதி.
இந்த அழைப்பை ஏற்று இந்தியா வரும் ஜின் பிங், அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்கள் சென்னைக்கு வருகிறார்.
மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்களும் சந்திக்கிறார்கள். இது நட்புமுறையிலான சந்திப்பாகும்.
இந்த சந்திப்பில் இந்தியா சீன எல்லை பிரச்சனை குறித்துப் பேசப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில், பறிக்க வந்தவரிடம் தப்பிய மிகச் சிலரில் ஒருவர் பூந்தமல்லியைச் சேர்ந்த 50 வயது தனலட்சுமி.
சங்கிலி பறிப்பு சம்பவங்களில் பாதிக்கப்படும் பெரும்பாலான பெண்கள் காயமடைந்து, அச்சத்தில் உறைந்து போகும் சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை பறிக்க வந்தவரிடம் போராடி தனலட்சுமி சாதுரியமாக தனது நகையை மீட்டுள்ளார்.
சுமார் பத்து நிமிடங்கள் தன்னைத் தாக்கியபடியே சங்கிலியை பிடுங்க முயன்ற நபரின் கையை வளைத்துப் பிடித்த தனலட்சுமி, தனது பிடியை இறுக்கியபடி,உதவிக்காக கத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் கத்தியால் தனலட்சுமியின் கையில் குத்தியபோதும், ரத்தம் வழியும் நேரத்தில், அவரை தள்ளி தனது சங்கிலியை மீட்டுள்ளார்.
Mumbai: பிச்சை எடுத்து ரூ.10 லட்சம் சேர்த்த Beggar - அள்ள அள்ள coins, 8 Lakh வைப்பு நிதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்