You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூவுவதற்கான உரிமையை சட்டப்போராட்டம் நடத்தி வென்ற சேவல்
சேவல் ஒன்று காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் சண்டையின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மோரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவல் வைத்திருக்கும் வீட்டின் அருகில் வசிக்கும் பிரொன், சேவலின் சத்தம் தங்களுக்கு தொந்தரவாக உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பிரான்ஸின் அட்லாண்டின் கடற்கரை பகுதியில் உள்ள ஒலெரான் எனும் தீவில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த சேவல் உள்ளது.
அந்த ஒலெரான் தீவு, பிரான்ஸில் உள்ள நகரவாசிகள் தங்கள் விடுமுறைக்காக வந்து தங்கும் இடமாக மாறியுள்ளது.
மோரிஸ் தினமும் விடியற்காலையில் கூவுவது, தனக்கு தொந்தரவாக உள்ளது என சேவலின் உரிமையாளர்களிடம் ஜீன் லூயிஸ் பிரொன் தெரிவித்தார்.
தேசிய விவாதம்
"இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது," என பிரொன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஃபெசெளவுக்கு 2017ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மோரிஸ், பிரான்ஸின் கிராம மற்றும் நகரவாசிகளுக்கு இடையே ஒரு பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டது.
சேவலின் உரிமையாளர்கள் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பிரொன் இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.
இந்த வழக்கு விரைவில் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. பிரான்ஸில் நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கிராமங்களில் அதிகரித்திருக்கும் நகர்புறவாசிகளால் வாழ்வியல் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறப்பட்டது.
"கிராமங்கள் இவ்வாறுதான் இருக்கும். அவர்கள் ஏதும் சொல்லக்கூடாது," என சேவலின் உரிமையாளர் ஃபெசெள தெரிவித்துள்ளார்.
"பிரான்ஸ் நாட்டு மக்களின் சார்பாக மோரிஸ் வெற்றிப்பெற்றுள்ளது," என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் மூலம் மோரிஸ் நாட்டில் பெரும் ஆதரவை பெற்றது. அதனை காப்பாற்ற வேண்டும் என இணையத்தில் 1,40,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று உருவானது. மேலும் பலர் அதன் முகம் பதித்த டீ- ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கினர்.
"இது மோரிஸுக்கு ஆதரவு தரும் வகையில் செய்யப்பட்டதுதான். எனினும், சேவல் ஒன்றை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்கு எதிரானதும்கூட" என டி ஷர்ட்டுகளை விற்கும் உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"மேலும், அவர்கள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள்? புறா, சீகல் போன்ற பறவைகளும் ஒலி எழுப்பக்கூடாது என வழக்கு போடுவார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
சேவலின் உரிமையாளர் ஃபெசெள, தனக்கு அதிகடிப்படியான இழப்பீடு தரவேண்டும் என பிரொனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மோரிஸுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு, சேவலின் உரிமையாளருக்கு ஏற்படுத்திய துயருத்துக்கு பிரொன் 1,100 அமெரிக்க டாலர்கள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
''தற்போது மேலும் மேலும் அதிக அளவில் மக்கள் கிராமப்புறங்களுக்கு செல்கின்றனர். அவர்கள் அங்கு போவது விவசாயம் செய்ய அல்ல, அங்கேயே வாழ்வதற்காக'' என்று பொய்டேர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஜீன்-லூயிஸ் என்ற புவியியலாளார் கூறுகிறார்.
''மக்கள் அனைவரும் தங்கள் பகுதியை தற்காத்து கொள்ள முயற்சிக்கின்றனர்'' என்று மேலும் அவர் தெரிவித்தார். ஃபெசெள வாழ்ந்துவரும் செயின்ட்-பியர் டி' ஒலெரான் கிராமத்தில் சில முக்கியமான உள்ளூர் மக்களுக்கு, பிரச்சனை மேலும் அதிகமாக உள்ளது.
''உள்ளூர் சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். சகிப்புத் தன்மை இன்மையின் உச்சகட்டம் இது'' என்று செயின்ட்-பியர் டி' ஒலெரானின் மேயரான கிறிஸ்டோபி சுயர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்