You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொலம்பியா நிலச்சரிவில் 154 பேர் பலி
தென் மேற்கு கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 154 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டின் அதிபர் ஜுவான் மானுவெல் சான்டோஸ் தெரிவித்துள்ளார்.
பல மணி நேரங்கள் பெய்த கனமழையால், மொகோவா ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, புடுமயோ மாகாணத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் சிக்கிய பல பேரைக் காணவில்லை.
சுற்றுப்புறப் பகுதிகள் அனைத்தும் நிலச்சரிவில் புதைந்திருப்பதாக அப்பகுதியின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
மோசமான வானிலை மற்றும் கட்டமைப்பு வசதிகளால், மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து மூன்று மணி நேரம் பயணித்தால்தான் நிலச்சரிவு நடந்த இடத்தை அடைய முடியும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நகரம், மின்சாரம், தண்ணீர் வசதியின்றி முழுமையாக துண்டிக்கப்பட்டிருப்பதாக மொகோவா மேயர் தெரிவித்துள்ளார்.
ஆற்றின் கரைகள் உடையும் அபாய நிலையை அறிந்ததும் மக்கள் எச்சரிக்கப்பட்டதால், பலர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டனர். இல்லாவிட்டால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என உள்ளூர் பத்திரிகை தெரிவிக்கிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு விவசாயம் மற்றும் பெட்ரோலியம் பிரதான தொழிலாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்