மனித மூளை முதிர்ச்சி அடைவதைத் தடுக்க வழி தேடும் விஞ்ஞானிகள் - என்ன கிடைத்தது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், லாரா லீவிங்டன்
- பதவி, தொகுப்பாளர், பிபிசி கிளிக்
நமது வாழ்க்கை முறைதான் நம் ஆயுளை நீட்டிக்கும் என்பது நெடுங்காலமாகத் தெரிந்த ஒன்று. நமக்கு வயதாகும்போது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்து புதிய தொழில்நுட்ப உதவிகளுடன் வயதாவதன் வேகத்தைக் குறைக்க இயலுமா என்பதை விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்குப் பகுதியில், ஒரு மணிநேரம் பயண தூரத்தில் அமைந்திருக்கும் லோமா லிண்டாவில் மாரிஜ்கே மற்றும் அவரது கணவர் டாம் வசித்து வருகின்றனர். இருவரும் நெதர்லாந்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். என்னை ஒரு நாள், காலை உணவுக்காக அவர்கள் அழைத்திருந்தனர்.
நான் அன்று காலை சாப்பிட்ட உணவில் ஓட்ஸ், சியா விதைகள், பெர்ரி பழங்கள் போன்ற உணவுகள் இருந்தன. அதில் சர்க்கரை அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட தானிய உணவோ, காஃபியோ வழங்கப்படவில்லை. லோமா லிண்டாவின் குறிக்கோளைப் போல் மிகச் சத்தான ஆகாரமாக இருந்தது அந்த உணவு.
சராசரி வாழ்நாளைக் காட்டிலும் நீண்ட காலம் வாழும் மனிதர்களைக் கொண்டிருக்கும் நீல மண்டலங்களில் (Blue Zones) ஒன்றாக லோமா லிண்டாவும் அறியப்படுகிறது. செவன்த் - டே அட்வெண்டிஸ்ட் திருப்பள்ளியைச் (Seventh-Day Adventist Church) சேர்ந்த மக்களே லோமா லிண்டாவில் நீண்ட காலம் உயிர் வாழும் குழுவினர்.
பொதுவாகவே மது, காஃபியை எடுத்துக் கொள்ளாத அவர்கள் சைவம் அல்லது வீகன் உணவு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். உடல் நலனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுதலை மதம் வலியுறுத்தும் கடமைகளில் ஒன்றாக அவர்கள் பார்க்கின்றனர்.
இதுதான் அவர்களின் "ஆரோக்கிய செய்தி,". இந்தச் செய்திதான் லோமா லிண்டாவை உலக வரைபடத்தில் முக்கிய இடமாக மாற்றி, இங்கு வாழும் மக்கள் ஏன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்கின்றனர் என்ற ஆராய்ச்சியைப் பல தசாப்தங்களாக நடத்த வைத்திருக்கிறது.
அதிக நாள் வாழும் லோமா லிண்டா மக்கள்

லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் காரி ஃப்ராஸெர், செவன்த் - டே அட்வெண்டிஸ்ட் திருப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வது மட்டுமின்றி, நல்ல ஆரோக்கியத்துடன் வாழும் காலத்தையும் அதிகமாகக் கொண்டுள்ளனர் என்று கூறினார். பெண்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் கூடுதலாகவும், ஆண்கள் ஏழு ஆண்டுகள் கூடுதலாகவும் வாழ்கின்றனர்.
மாரிஜ்கேவும் டாமும் வயதான காலத்தில் இங்கே இடம் பெயர்ந்தனர். இப்போது இந்த நீண்ட ஆயுளைக் கொண்ட மக்கள் குழுவின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டனர்.
லோமா லிண்டாவில் பெரிய ரகசியங்கள் ஏதும் இல்லை. மிகவும் எளிமையான வாழ்வை அவர்கள் வாழ்கின்றனர். மன நிலையை சீராகவும், ஒரு மதம் வழங்கிய சமூகத்தை மதித்தும் வாழ்கின்றனர்.
லோமாவில் தொடர்ச்சியாக ஆரோக்கியமான வாழ்வு முறை குறித்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இசை நிகழ்வுகளும், உடற்பயிற்சி வகுப்புகளும் நடைபெறுவதும் வழக்கம்.
வயது முதிர்ந்தோருக்கான இல்லத்தில் 112 நபர்களுடன் இருக்கும் ஜூடி என்னுடன் உரையாடும்போது, அந்த இல்லம் "மனதைத் திறக்கும், சிந்தனையைத் தூண்டும் உரையாடல்களுக்கு வழி வகை செய்யும் திறனைக் கொண்டுள்ளதாக” குறிப்பிட்டார்.
“சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது உங்களின் மூளைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உணரவில்லை. அது இல்லாமல் போனால், வாழ்வு சுருங்கிப் போய்விடும் போல் இருக்கிறது” என்று ஜூடி கூறினார்.
சமூக நிகழ்வுகளில் பங்கேற்றல் மற்றும் தனிமையைத் தவிர்த்தலால் ஏற்படும் நன்மைகளை அறிவியல் நீண்ட காலமாக அங்கீகரித்துகிறது.
தற்போது, இயல்பைக் காட்டிலும் யாருடைய மூளை அதிகமாக வயதாகிறது என்பதை அறிவியலால் அடையாளம் காண முடியும். அதை ஆய்வு செய்து, வருங்காலத்தில் அதைத் தடுக்கும் வகையில் சிகிச்சையும் அளிக்க இயலும்.

தனிநபர் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட, அனுமானிக்கக் கூடிய, தடுக்கக் கூடிய மருத்துவ முறைகளை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரிய அளவிலான தரவுகளின் உதவியுடன் ஆரம்பக்காலத்திலேயே நோயைப் பற்றி அறிதல் அவசியமாகிறது.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கெரோன்டோலஜி மற்றும் கணக்கீட்டு உயிரியல் துறையில் இணைப் பேராசிரியராக இருக்கும் ஆண்ட்ரேய் இரிமியா, நம்முடைய மூளைக்கு எப்படி வயதாகிறது, அதன் வளர்ச்சி எப்போது நிற்கும் என்பதை மதிப்பாய்வு செய்யும் கணினி மாதிரிகளை என்னிடம் காட்டினார்.
ஆரோக்கியமான முறையில் வயதாகும் மூளை, டிமென்சியா போன்ற நோயைக் கொண்டிருப்பவரின் மூளையின் பயணத்தைப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த மாதிரிகளை எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள், 15,000 மூளைகள் பற்றிய தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இரிமியா உருவாக்கியுள்ளார்.
மனிதர்களாக நமக்குத் தெரியாத, ஆனால் செயற்கை நுண்ணறிவால் புரிந்துகொள்ளக் கூடிய விஷயங்களைக் காண்பதற்கான நுட்பமான வழி இது, என்றும் அவர் குறிப்பிட்டார். இரிமியா என்னுடைய மூளையையும் அவ்வாறாகச் சோதித்தார்.
அவரைச் சந்திக்கும்போது நான் எம்.ஆர்.ஐ ஸ்கேனுடன்தான் சென்றேன். அதை ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு என்னுடைய உண்மை வயதைக் காட்டிலும் என்னுடைய மூளை 8 மாதங்கள் வயதானதாக உள்ளதாகக் கூறினார். ஆனாலும், இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகள் கால அளவு வரை முன்னும் பின்னும் இருக்கலாம் என்று அவர் கூறினார்.
தனியார் நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தையும் வணிகமயமாக்கத் துவங்கியுள்ளனர். ப்ரைன்கீ என்ற ஒரு நிறுவனம் உலகெங்கிலும் உள்ள பல மருத்துவ மையங்களுக்கு இந்தச் சேவையை வழங்கி வருகிறது. வருங்காலத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது மிக எளிமையானதாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஓவென் பிலிப்ஸ் கூறினார்.

மக்களால் இப்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களை மிக எளிதாக அணுக முடிகிறது. ஸ்கேன்களின் படங்களும் முன்பைக் காட்டிலும் மிகச் சிறப்பானதாக நமக்குக் கிடைக்கிறது என்றும் அவர் கூறினார்.
“நான் என்னை ஒரு மேதாவி போலக் காட்டிக் கொள்வதாக நினைக்க வேண்டாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பம், முன்கூட்டியே அனைத்தையும் பார்க்கும் ஒரு நிலைக்கு வளர்ந்துவிட்டது. ஒரு நோயாளியின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும் என்பதைத்தான் இது காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இதை இன்னும் சிறப்பாக நிறுவ இயலும்," என்றும் அவர் கூறினார்.
இரிமியா கூறியதற்கு மாறாக, ப்ரைன்கீ என்னுடைய மூளையின் வயதில் ஓராண்டைக் குறைத்துவிட்டது. மேலும் எனக்கு 3டியில் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்கேன் படங்களை வழங்கினார்கள். அது மனித மூளையைப் போன்று, பார்க்க இயல்பானதைப் போன்றுதான் இருக்கும் என்றும் எனக்கு உறுதியளித்தார்கள்.
இந்த ஆய்வின் நோக்கமானது, துல்லியமான சிகிச்சை அணுகுமுறை மட்டுமல்ல, எந்தெந்த தலையீடுகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் கணக்கிடுவதும் ஆகும்.
கடந்த 200 ஆண்டுகளில் அதிகரிக்கத் துவங்கிய மனிதனின் சராசரி ஆயுட்காலம், வயோதிகம் தொடர்பான நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாம் அனைவரும் அதிக காலம் உயிர் வாழ்ந்தால் அனைவருக்கும் டிமென்சியா ஏற்படுமா என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
நிறைய பேர் ஆய்வு செய்தும் இந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை என்கிறார் பேராசிரியர் இரிமியா. டிமென்சியாவை பின்னுக்குத் தள்ளுவதுதான் இதன் நோக்கம்.
இந்த அனைத்து ஆராய்ச்சிகளும் ஒற்றை இலக்கைத்தான் கொண்டுள்ளன. ஒவ்வோர் ஆராய்ச்சியாளரும், மருத்துவரும், நீல மண்டலங்களில் வாழும் மக்களும் கூறுவது என்னவென்றால் அந்த இலக்கு வாழ்க்கை முறைதான். நல்ல உணவுப் பழக்கம், சுறுசுறுப்பாகச் செயல்படுதல், சிறந்த மனநிலை, மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவை நம் மூளை எப்படியாக மூப்படைகிறது என்பதற்கு முக்கியமானது.
மூளை ஆரோக்கியத்துக்கு தூக்கம் அவசியம்

பட மூலாதாரம், Getty Images
பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் மற்றும் உளவியல் பேராசிரியரும், ஒய் வி ஸ்லீப் (Why We Sleep) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான மேத்யூ வாக்கர் கருத்துப்படி, மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு மற்றொரு முக்கியமான காரணியும் உள்ளது.
"அதுதான் தூக்கம். உங்கள் மூளை, உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள ஒரு செயல் தூக்கம்" என்று அவர் குறிப்பிடுகிறார். உங்களுக்குத் தேவையான உறக்கம் கிடைக்கும்போது, மேம்படுத்தப்படும் உங்கள் மனதின் செயல்பாடு, நீங்கள் போதுமான அளவு உறங்காதபோது செயலிழப்பதாக" விளக்குகிறார் மேத்யூ வாக்கர்.
"நாம் தூங்கும்போது நடைபெறும் மூளையின் சுத்தகரிப்பு செயல்பாடு அல்சைமர் நோயின் அடிப்படைக் காரணங்களான பீட்டா-அமிலாய்டு (beta-amyloid) மற்றும் டவ் புரதங்களையும் வெளியேற்றுகிறது.
தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் டிமென்சியாவுடன் தொடர்புடையவை. இந்த நோய் 60, 70 வயதுகளில் மட்டும் ஏற்படவில்லை. 30களில் கூட துவங்கலாம்" என்று பேராசிரியர் வாக்கர் கூறுகிறார். எனவே, தூக்கத்தை முறையாகக் கண்காணித்து அந்த மாற்றங்களை அடையாளம் காண்பது நடுத்தர வயதின் தற்காப்பு உத்தியாக அமையும்.
சான் பிரான்சிஸ்கோ புறநகர் பகுதியில் உள்ள பயோடெக் நிறுவனமான ஃபௌனா பயோ, அணில்கள் உறக்கநிலை காலத்தில் இருக்கும்போதும், அதன் பின்னரும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து வருகிறது. இந்த உறக்க கால மந்த நிலையில், அணிகளின் உடல் வெப்பநிலை குறைகிறது. அவற்றின் வளர்சிதை மாற்ற விகிதம் சாதாரணமாக 1% ஆகக் குறைகிறது.
அதே நேரத்தில், இந்த உறக்க காலத்தில், அணில்களில் நியூரான்கள் மீண்டும் வளர்கின்றன. மூளைகளில் இழந்த இணைப்புகள் மீண்டும் உருவாக்கப்படுகின்றன. ஆண்டில் ஆறு மாதம், இந்த அணில்களைப் போல் உறக்க நிலைக்குச் செல்லாமல், ஆனால் இதே போன்ற செயல்பாடுகளை மனிதர்களிடம் ஏற்படுத்த மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ஃபௌனா பயோ.
மனச்சோர்வு தீர்க்கப்படாவிட்டால் டிமென்சியா ஏற்படலாம்

பட மூலாதாரம், Getty Images
சிகிச்சையளிக்கப்படாத மனச்சோர்வு, டிமென்சியா (மூளை பாதிப்பு காரணமாக சிந்தனைத் திறன், நினைவாற்றல் போன்றவற்றை இழப்பது) அபாயத்தை அதிகரிக்கிறது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் லீன் வில்லியம்ஸ், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மூளையில் சில வகை மனச்சோர்வைக் காட்சிப்படுத்தும் முறையைக் கண்டறிந்துள்ளார். இதே முறையைப் பயன்படுத்தி சிகிச்சை முறை வெற்றி பெற்றுள்ளதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
மனச்சோர்வு போன்ற மனநல நிலைமைகளின் மூல காரணங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள இது உதவும். மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்படும் சிகிச்சை முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும்.
தன்னுடைய வயதைக் குறைக்கப் பல லட்சங்களைச் செலவிட்டு வரும் தொழிலதிபர் பிரையன் ஜான்சனை காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ சிலர் அறிவியல் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
சப்ளிமென்டுகள், நாள் ஒன்றுக்கு 19 மணிநேரம் உண்ணாவிரதம், உடல் வெடிக்கப் போவது போல் உணர வைக்கும் உடற்பயிற்சிகள் மற்றும் சர்ச்சைக்குரிய பல சிகிச்சைகள் அவரின் இளமையை அவருக்குத் திருப்பித் தந்துவிடும் என்று நம்புகிறார்.
ஆனால் லோமா லிண்டாவில் நான் சந்தித்த 103 வயதான மில்ட்ரெட், “நீங்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அதுதான் உண்மை. ஆனால், இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இதை நீ அறவே தொடக்கூடாது என்பது போன்ற முறைகளை நான் நம்பவில்லை,” என்று கூறுகிறார்.
வாழ்க்கையை நாம் கொஞ்சமாவது வாழ வேண்டும் என்பதும் முக்கியம். பிரச்னைகள் ஏதும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வோம் என்பதை அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












