ஏர் இந்தியா விபத்து - விசாரணை அறிக்கையின் முழு விவரம்
கடந்த மாதம் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்?
இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகமான ஏ.ஏ.ஐ.பி. (AAIB) 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் 'கட்-ஆஃப்' நிலைக்கு சென்றுவிட்டன. இந்த இரண்டு சுவிட்சுகள் தான் என்ஜினை நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.
விமானம் அதன் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகமான 180 நாட்ஸ் என்ற அளவை பிற்பகல் 1 மணி 38 நிமிடம் 42 நொடியாக இருந்த போது எட்டியது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே, என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-க்கான எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகள் ஒரு விநாடி இடைவெளியில் கட்-ஆஃப் நிலைக்கு சென்றன.
ஏன் நீங்கள் கட்-ஆஃப் செய்தீர்கள் என ஒரு விமானி கேட்க, நான் அப்படிச் செய்யவில்லை என சக விமானி பதிலளிப்பது பதிவாகி உள்ளது.
இதில் கேள்வி கேட்டது யார்? பதில் கூறியது யார்? என்பதில் தெளிவில்லை.
சுமார் 10 விநாடிகள் கழித்து, என்ஜின் 1-ன் கட்-ஆஃப் சுவிட்ச் 'கட் ஆஃப்' இலிருந்து 'ரன்' ஆக மாறியது. பின்னர் நான்கு விநாடிகள் கழித்து, எஞ்சின் 2-ன் கட்-ஆஃப் சுவிட்சும் 'கட் ஆஃப்' என்பதிலிருந்து 'ரன்' ஆக மாறியது. " அப்போது நேரம் பிற்பகல் 1 மணி 38 நிமிடம் 56 நொடி.
அதன் பின் 9 விநாடிகள் கழித்து, விமானிகளில் ஒருவர் தரையில் இருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு "மேடே, மேடே" என்று ஒரு செய்தியை அனுப்பினார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, சிறிது நேரத்திற்குப் பிறகு விமானம் விபத்தில் சிக்கியது.
என்ஜின்கள் வேலை செய்வதை நிறுத்தியபோது, ரேம் ஏர் டர்பைன் அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்க தானாகவே செயல்படுத்தப்பட்டது.
விமான நிலையத்திலிருந்து வந்த சிசிடிவி காட்சிகள், விமானம் மேலே பறக்கத் தொடங்கிய போது, அதாவது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேம் ஏர் டர்பைன் (RAT) செயல்படுத்தப்பட்டதைக் காட்டியது. விமானப் பாதையில் பறவைகளின் நடமாட்டம் எதுவும் பெரியளவில் பதிவாகவில்லை. விமான நிலைய ஓடுபாதை எல்லையைக் கடப்பதற்கு முன்பே விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது என அந்த அறிக்கை கூறுகிறது.
விமானியும் விமானக் குழுவினரும் உடற்பகுதியுடன் இருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அறிக்கையின்படி, 2 விமானிகளும் மும்பையைச் சேர்ந்தவர்கள், விமானம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ஆமதாபாத்தை அடைந்த அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்தது.
அனைத்து விமானிகளும் விமானக் குழுவினரும் உள்ளூர் நேரப்படி காலை 06:25 மணிக்கு சுவாசப் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்கள் 'விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள்' என்று கண்டறியப்பட்டது.
விமானத்தின் எரிபொருள் மாதிரிகள் திருப்திகரமாக உள்ளதாகவும் விசாரணை அறிக்கை கூறுகிறது.
அறிக்கையின்படி, ஏர் இந்தியா விமானத்திற்கு எரிபொருள் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் "திருப்திகரமானவை" என்று கண்டறியப்பட்டுள்ளது.
விபத்துக்கு எரிபொருள் பிரச்னை ஒரு காரணமாக இருக்கலாம் என்று விமான நிபுணர்கள் முன்பு பிபிசியிடம் கூறியிருந்தனர். எரிபொருள் பிரச்னை அல்லது அடைப்பு இரண்டு என்ஜின்களும் செயலிழக்க காரணமாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
ஆனால்,விமானத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் திருப்திகரமானவையாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது.
முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியான பிறகு ஏர் இந்தியா நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
அதில், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தோடு துணை நிற்கின்றோம், விசாரணை முகமைகள் நடத்தும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளது.
விசாரணை நடைபெற்று வருவதால் எந்த ஒரு குறிப்பிட்ட தகவல்களுக்கும் எங்களால் கருத்தை தெரிவிக்க இயலாது என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான சாத்தியக்கூறு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது முதல் கட்ட அறிக்கை மட்டுமே என்பதால் கூடுதல் தகவலுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
இருப்பினும், அறிக்கையில் உள்ள சில விஷயங்கள் ஆச்சரியமளிக்கின்றன. குறிப்பாக இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு சென்றது தெளிவாகியுள்ளது.
இது தொழில்நுட்பக் கோளாறா? மென்பொருள் சிக்கலா? மனிதப் பிழையா? என்பன போன்ற இன்னும் பல கேள்விகள் உள்ளன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



