கழிவுநீர்த் தொட்டியில் கணவரைக் கொன்று வீசிய மனைவி 9 ஆண்டுக்குப் பிறகு சிக்கியது எப்படி?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒன்பது ஆண்டுகள் முன்பு காணாமல் போன நபரின் மண்டை ஓடு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது கிடைத்துள்ளது. இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், இறப்புக்கு காரணம் எனக் கருதப்படும் நெருங்கிய நபரை காவல்துறையினர் 24 மணிநேரத்தில் கண்டுபிடித்துள்ளனர். உடலை கழிவுநீர் தொட்டியில் வீசியவர், அதே பகுதியில் ஒன்பது ஆண்டுகளாக இருந்து வந்துள்ள அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பர் தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளர், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது கழிநீர் வாகன உதவியுடன் தொட்டியில் இருந்த கழிவுநீரை உறிஞ்சப்பட்டது.
முழுவதுமாக, உறிஞ்சி முடிப்பதற்கு முன்பாக, அவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. கழிவுநீர் உறிஞ்சப்படும் போது, தொட்டியில் மண்டை ஓடு ஒன்று மிதந்தது. பதற்றமடைந்த வீட்டின் உரிமையாளர், கழிவுநீர் உறிஞ்சுவதை அப்படியே நிறுத்திவிட்டு, உடனே, தேவகோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தேவகோட்டை நகர் காவல்துறையினர் விரைந்தனர். தகவல் கிடைத்தவுடன் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சென்று கழிவுநீர் தொட்டியில் சோதனை செய்தனர்.
காவல்துறையினர் வந்த பிறகு, லாரி மூலம் தொட்டியில் மேலும் இருந்த கழிவுநீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. அப்போது மேலும் சில ஆதாரங்களும் கிடைத்தன.

கழிவு நீர் தொட்டியில் இருந்து மனித மண்டை ஓடு மட்டுமல்லாமல், எலும்புகள் சிலவும் கிடைத்தன. அதோடு, கைலி, சட்டை மற்றும் கையில் கட்டியிருந்த கயிறு ஆகியவையும் கிடைத்தன.
இவற்றை கையகப்படுத்திய காவல்துறையினர் அவற்றை ஆய்வுக்காக பத்திரமாக ஒரு பெட்டிக்குள் எடுத்து வைத்துக் கொண்டனர்.
வீட்டின் உரிமையாளர் இந்த மண்டை ஓட்டுக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறவே, போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரிக்க தொடங்கினர்.
அப்போது அந்த வீட்டில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் வசித்து வந்ததாகத் தெரிய வந்தது. அந்த பெண்ணின் கணவர் ஒரு முறை வெளியூர் சென்றதாக மனைவி அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், வெளியூர் சென்ற கணவர் மீண்டும் ஊருக்குத் திரும்பவில்லை என்றும், வெளியூர் சென்ற கணவரை அதன் பிறகு யாரும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதை அறிந்த போலீசார் அந்த பெண்ணைத் தேட ஆரம்பித்தனர். அப்போது அந்தப் பெண் அதே பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அவரைக் கண்டறிந்த போலீசார் அவரிடம் விசாரணையைத் தொடங்கினர்.

சுகந்தி என்ற அந்தப் பெண் முதலில், அக்கம் பக்கத்தினர் கூறிய கதையையே கூறினார்.
தன் கணவர் கோவை சென்றதாகவும் அங்கு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் கோவையிலேயே தங்கிவிட்ட கணவர் தனக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் மட்டும் அனுப்பி வருவதாகக் கூறியுள்ளார்.
ஆனால், போலீசார் அதை நம்ப மறுத்தனர். அவர்கள் சுகந்தியிடன் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது சில அதிர்ச்சித் தகவல்களை சுகந்தி போலீசாரிடம் கூறியுள்ளார்.
கழிவுநீர் தொட்டியில் கிடந்தது தனது கணவரின் மண்டை ஓடுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அதில் கிடைத்த எலும்புகள், கைலி, சட்டை ஆகியவையும் தன் கணவருடையதே என்றும் தெரிவித்துள்ளார். தன் கணவரின் உடலை தானே கழிவுநீர் தொட்டியில் வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் மேலும் விசாரிக்கவே, அவர் இறந்த அன்று என்ன நடந்தது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து இறந்துபோன பாண்டியனின் தங்கை சுதாவை தொடர்பு கொண்டு பேசினோம்.
அவர் பிபிசி தமிழிடம் கூறும்போது, "எனது அண்ணன் காணாமல் போய் 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அண்ணன் வீட்டை விட்டுச் சென்ற ஆறாவது மாதத்தில் நான் தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
அண்ணனின் மனைவி சுகந்தியை போலீசார் அழைத்து விசாரித்தபோது கணவர் கோவையில் உள்ள பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அங்கேயே தங்கிவிட்டார். அவ்வப்போது செலவிற்கு மட்டும் பணம் அனுப்பி வருவதாகக் கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

அப்போது காவல்துறையில் சுகந்தி கூறிய தகவல்களை சுதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுதாவுக்கு தொடர்ந்து சந்தேகம் இருந்து வந்தது.
“கடைசியாக நான் தான் எனது அண்ணனை வீட்டிற்குச் சென்று வாசலில் விட்டு வந்தேன். அன்றைய தினம் எனது அண்ணன் உடுத்திyiருந்த கைலி மற்றும் சட்டை தான் இன்று கழிவு நீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுடன் இருந்தது,” எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் தன் அண்ணன் கையில் கட்டிய சிவப்புக் கயிறு கழிவுநீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் இறந்தவர் தனது அண்ணன் தான் என்பதை சுதா உறுதி செய்துள்ளார்.
காணாமல் போன அண்ணன் குறித்து எப்போதுமே சந்தேகம் இருந்த சுதா மேலும் சில சந்தேகங்களை எழுப்புகிறார்.
“எனது அண்ணன் பருமனாக இருக்கக்கூடியவர். ஒரே ஆளாக அவரைத் தூக்கி கழிவு நீர் தொட்டியில் போட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே போலீசார் விசாரணை நடத்தி இதற்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார்.

இந்த விவகாரம் குறித்து, பாண்டியனின் சித்தப்பா சேகர், தனக்கும் பாண்டியன் காணாமல் போனது குறித்து சந்தேகம் இருந்ததாக கூறினார்.
அவர் பிபிசி தமிழிடம் கூறும்போது “நான் 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மனைவி சுகந்தி எனது மகனை கொலை செய்து ஆற்றில் வீசி இருப்பார் என உறவினர்களிடம் கூறினேன். ஆனால், எனக்கு மதுப் பழக்கம் இருந்ததால் எனது பேச்சை யாரும் காது கொடுத்துக் கேட்கவில்லை,” என்றார்.
“அந்த வீட்டின் கழிவு நீர் தொட்டியில் இருந்து எலும்புக் கூடுகள் எடுத்தபோது எனது மச்சான் மகன் இதுகுறித்த தகவலை எங்களிடம் கூறினார். பிறகு நேரில் சென்று பார்த்து எனது அண்ணன் மகன் பாண்டியன் என்பதை உறுதி செய்தோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
காவல்துறை இந்தக் கொலை தொடர்பாக விசாரணை செய்து இதற்குப் பின்னால் இருந்து உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கொலை நடந்தது எப்படி?
பாண்டியன் எப்படி இறந்தார், அவர் இறந்த தினத்தன்று என்ன நடந்தது என காவல் ஆய்வாளர் சரவணன் பிபிசி தமிழிடம் விளக்கமாக கூறினார்.
கழிவுநீர் தொட்டி இருந்த வீடு, நான்கு வீடுகளைக் கொண்ட காம்பவுண்டு வீடு என்றும் அதன் உரிமையாளர் சீராளன் சென்னையில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“சீராளன் மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில் தான் சுகந்தியும் அவரது கணவர் பாண்டியனும் வசித்து வந்துள்ளனர்.
தற்போது, வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யத் தொடங்கிய போது, மண்டை ஓடு, எலும்புகள், சட்டை, கைலி ஆகியவை கிடைத்தன.
விசாரணையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டில் வசித்த பாண்டியன் மாயமானவர் எனத் தகவல் கிடைத்தது,” என்று தெரிவித்தார் ஆய்வாளர் சரவணன்.
அருகில் வசித்த பாண்டியன் என்பவரின் மனைவி சுகந்தி(39) என்ற பெண்ணை விசாரித்தபோது கணவர் பாண்டியன்(43) ஓட்டுநராக இருந்ததாகவும், கடைசி 6 மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தபடி மது அருந்திவிட்டு சுகந்தியுடன் சண்டையிட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது எனக் கூறினார்.

“கடந்த 2014ஆம் ஆண்டு, மே 1ஆம் தேதி, பாண்டியன் இறந்த தினத்தன்று, மாலை 6 மணியளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் பாண்டியன், மனைவி சுகந்தியை தாக்கியுள்ளார்.
இதில் கோபமடைந்த சுகந்தி வீட்டுக்கு அருகில் இருந்த தனது தாய் வீட்டுச் செல்வதாகக் கூறியுள்ளார். வெளியே செல்ல முயன்ற அவரை பாண்டியன் தடுத்துள்ளார். அவரை மீறிச் செல்வதற்காக சுகந்தி கணவர் பாண்டியனை கீழே தள்ளி இருக்கிறார். அப்போது அருகில் இருந்த தூணில் மோதி கீழே விழுந்திருக்கிறார்,” என்று ஆய்வாளர் சரவணன் தெரிவித்தார்.
மேலும், “இதைக் கண்டு கொள்ளாமல் தாய் வீட்டிற்குச் சென்று சில மணிநேரத்திற்குப் பின் வந்து பார்த்தபோது பாண்டியன் அதே இடத்தில் அசையாமல் இருந்துள்ளார். அருகில் சென்று மூக்கில் கை வைத்து பார்த்தபோது கணவர் உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது,” என அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அருகில் இருந்த கழிவு நீர் தொட்டியின் மூடியை திறந்து கணவரின் உடலை உள்ளேத் தள்ளிவிட்டு மீண்டும் மூடியை பூட்டியுள்ளார் சுகந்தி. ஆறு மாதத்திற்குப் பிறகு வீட்டைக் காலி செய்து அருகில் இடம்பெயர்ந்து உறவினர்களுடன் சகஜமாகப் பழகியபடியே தையல் தொழில் நடத்தி வந்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பாண்டியன்-சுகந்தி தம்பதியினருக்கு 16 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
“போலீசார் விசாரணையில் கொலை செய்ததை சுகந்தி ஒப்புக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிந்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்", என ஆய்வாளர் சரவணன் கூறினார்.
தகவல் தெரிந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினருக்கு சிவகங்கை எஸ்.பி அரவிந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எலும்புக் கூட்டை வைத்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான, சவால் நிறைந்த பணி. அதை தேவகோட்டை போலீசார் மிக நுட்பமாகக் கையாண்டு 24 மணிநேரத்தில் குற்றவாளியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துள்ளேன். இந்தக் கொலைக்கு பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்," எனக் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












