ஹரியாணா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? (காணொளி)
ஹரியாணா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் குறித்தும் அவை காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு என்னென்ன விஷயங்களை உணர்த்துகின்றன என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.
ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையில் சரியான கூட்டணி ஏற்பட்டிருந்தால், எளிதாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியும் என்ற நிலையில், அந்த வாய்ப்பு தவறவிடப்பட்டதாக குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
"ஹரியாணாவில் தொகுதி தொகுதியாக பார்த்தால், ஆம் ஆத்மி கட்சி பல இடங்களில் காங்கிரசின் வாக்குகளைப் பிரித்திருப்பது தெரியும். ஆகவே, இது காங்கிரசின் தோல்வி மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் தோல்வியும்கூட. ஹரியாணாவில் கூட்டணி ஏற்படுவதில் யார் தவறு செய்தார்கள் என இங்கிருந்து கூற முடியாது" என்கிறார் அவர்.
ஹரியாணாவில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரசும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆம் ஆத்மி கட்சி 10 - 12 இடங்களைக் கோரிய நிலையில், காங்கிரஸ் சுமார் 6 இடங்கள் வரை அளிக்க முன்வந்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த நிலையில், எந்தெந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவது என்பதை முடிவுசெய்வதில் சிக்கல் ஏற்பட்டது. முடிவில், இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட முடிவுசெய்தன. இந்த விவகாரத்தில் காங்கிரசை மட்டும் குறைசொல்ல முடியாது என்கிறார் பன்னீர்செல்வன்.
"தமிழ்நாட்டில் தி.மு.க. சொல்வதை காங்கிரஸ் கேட்கிறது என்றால், இன்னொரு மாநிலத்திலும் பிராந்தியக் கட்சி சொல்வதை காங்கிரஸ் கேட்க வேண்டுமென சொல்ல முடியாது. அந்தந்த மாநிலத்தின் கட்சி நிலவரங்களோடு சம்பந்தப்பட்ட விஷயம் அது. பெரிய கட்சிக்கு மட்டும்தான் கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்றும் சொல்ல முடியாது. ஆம் ஆத்மிக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது" என்கிறார் அவர்.
இந்தத் தேர்தல் முடிவுகளை கூர்ந்து கவனிக்கும்போது, தமிழ்நாடும் உத்தரப்பிரதேசமும் அளித்த பாடத்தை இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் கற்றுக்கொள்ளவில்லை என்பது புரிகிறது என்கிறார் பன்னீர்செல்வன்.
"எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் கூட்டணியை தொடர்ந்து தக்க வைக்கவேண்டும். தமிழ்நாட்டில் மக்கள் நலக் கூட்டணி என்ற பரிசோதனை முயற்சி தோற்ற பிறகு, அதில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் பல தி.மு.க. கூட்டணியில் இணைந்து, எவ்வித பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுதான் இத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கிறார்கள். இதேதான் உத்தரப்பிரதேசத்திலும் நடந்தது.”
“தேர்தல்களில் கூட்டணிக் கணக்கு என்பது மிக மிக முக்கியம். ஆனால், இந்த நிதர்சனம் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் எடுபட ஆரம்பிக்கவில்லை. இன்று ஹரியாணாவில் நடந்ததுதான் சில மாதங்களுக்கு முன்பாக மத்தியப் பிரதேசத்தில் நடந்தது. கூட்டணி வலிமையை உணராதவரை, எதிர்க்கட்சிகள் பா.ஜ.கவை வீழ்த்துவது எளிது எனத் தோன்றவில்லை" என்கிறார் பன்னீர்செல்வன்.
ஹரியாணாவில் கிடைத்த தோல்வியால், காங்கிரஸ் துவண்டு போயிருந்தாலும் ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்று என்கிறார் அவர்.
"ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகளை மிக முக்கியமான எதிர்வினையாக பார்க்க வேண்டும். அந்த மாநிலத்தில் ஐந்து நியமன எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என அறிவித்துவிட்டதால், வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே அவர்களிடம் ஐந்து எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்துக்கள் அதிகமுள்ள ஜம்முவில் அதிக இடங்களும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும் முடிவுகள் தீர்க்கமாக பா.ஜ.கவுக்கு எதிராக வந்திருக்கின்றன. 370ஐ நீக்குவதன் மூலமாக காஷ்மீரிகள் என்ற உணர்வை அம்மாநில மக்களிடம் நீக்க முடியவில்லை.” என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆகவே இன்னும் நீண்ட நாட்களுக்கு ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக வைத்திருக்க முடியாது. விரைவிலேயே அதன் மாநில அந்தஸ்தை திரும்பத் தர வேண்டியிருக்கும். 370வது பிரிவை திரும்ப கொண்டுவர மாட்டார்கள் என்றாலும் சில அம்சங்களாவது திருப்பியளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில் நாங்கள் எடுத்த முடிவை மக்கள் ஆதரிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் அதற்கு நேரெதிராக, தீர்க்கமாக வாக்களித்திருக்கிறார்கள்" என்றார்.
இந்தத் தேர்தல் முடிவுகளில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் ஜம்மு - காஷ்மீரில் தொங்கு சட்டமன்றம் இருக்கும் என்றும் கூறின. ஆனால், ஹரியானாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்திருப்பதோடு, ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி தெளிவான வெற்றியோடு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
"2017க்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளுமே தவறாகத்தான் முடிந்தன. அதனுடைய நீட்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகளை ஒரு சோம்பேறித்தனமான இதழியலாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதில் எவ்வித கடின உழைப்பும் செலுத்தப்படுவதில்லை என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



