வயநாடு தொகுதியில் ராகுலை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் அதன் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார், பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்‘.
ரேபரேலி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர அவர் விருப்பம் தெரிவிக்க வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் அறிவிக்கப்பட்டது. இது நாள் வரையில் காங்கிரஸ் கட்சியின் இதர மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணிகளிலும் பிரசாரத்திலும் பங்கேற்ற பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் ராகுல் காந்தி 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது அவரைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













