டிரம்ப் - புதின் சந்திப்புக்கு சௌதி அரேபியாவை தேர்வு செய்தது ஏன்?

காணொளிக் குறிப்பு,
டிரம்ப் - புதின் சந்திப்புக்கு சௌதி அரேபியாவை தேர்வு செய்தது ஏன்?

ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, சௌதி அரேபியாவில் டிரம்ப் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த சந்திப்புக்கு யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என யுக்ரேன் அரசு தரப்பில் இருந்து பிபிசிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே நீடித்த அமைதி நிலவ தன்னுடைய முயற்சிகளை சௌதி ராஜ்ஜியம் தொடரும்," என்றும் சௌதி அரேபியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டிரம்ப் - புதின் சந்திப்பை தங்கள் நாட்டில் நடத்த சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் விரும்பியதாக கூறப்படுகிறது

''தர்க்கரீதியாக சௌதி அரேபியா சரியான இடமாக இருக்கும். ஏன் என்றால் இந்த விவகாரத்தில் நடுநிலைத் தன்மையோடு அந்த நாடு திகழ்கிறது," என்கிறார் பால் சலேம். வாஷிங்டனில் அமைந்திருக்கும் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டியூட்டின் துணைத் தலைவராக உள்ளார் அவர்.

"பாரம்பரியமாக, ஜெனிவா போன்று நடுநிலைப்போக்குடன் இருக்கும் இடங்களில்தான் இத்தகைய சந்திப்பு நடைபெறும். ஆனால் சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு மோசமாக உள்ளதால், இப்படி ஒரு மாற்று இடத்தை தேர்வு செய்திருக்கலாம்," என்று முனைவர் கட்டார் அபு தியாப் தெரிவிக்கிறார். அவர் சர்வதேச உறவுகள் குறித்த பேராசிரியராக உள்ளார்

மேலும், ''புதினின் நம்பிக்கையை அந்நாடு கொண்டுள்ளது. சௌதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமில்லை'' என்கிறார் அவர்

யுக்ரேன் மீதான படையெடுப்பில் போர் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2023-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

சௌதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக இல்லை என்பதால் புதின், தான் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சம் ஏதுமின்றி அங்கே பயணிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே கைதிகளை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்று. இந்த நடவடிக்கை மூலம் இரண்டு நாடுகளின் நம்பிக்கையையும் சௌதி பெற்றுள்ளது.

சௌதி அரேபியா தொடர்ச்சியாக ஸெலென்ஸ்கி மற்றும் புதினை பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைத்துள்ளது. மேலும் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இரு நாடுகளையும் வலியுறுத்தி உள்ளது. இதை நோக்கமாக கொண்டு பல நாட்டு பிரதிநிதிகளுடன் சர்வதேச சந்திப்பு ஒன்றையும் சௌதி நடத்தியது.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத் வந்த புதினை வரவேற்ற இளவரசர், அவரை "சௌதி அரேபிய அரசு மற்றும் மக்கள் அதிகமாக மதிக்கும் சிறப்பு விருந்தினர்," என்று குறிப்பிட்டார்.

ரஷ்யா-யுக்ரேன் போர் உலக எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திய போது, கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க சௌதி அரேபியா முக்கிய பங்காற்றியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களான சௌதி அரேபியாவும், ரஷ்யாவும் பொதுவான எண்ணங்களைக் கொண்டுள்ளன என்று கூறுகிறார் வளைகுடா விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற பாபூத்.

டிரம்ப் - புதின் சந்திப்பின்போது, யுக்ரேன் போரை நிறுத்துவது குறித்து மட்டும் கவனம் செலுத்தாமல் உலக அளவிலான எண்ணெய் விலை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்படும் என்கிறார் பாபூத்.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிகழும் போட்டியின் ஒரு அம்சமாக, சௌதி அரேபியாவில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்த டிரம்ப் முயல்கிறார். சௌதி அரேபியா மனித உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்ற நிலையில் தற்போது அங்கே சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருப்பதாக அபு தியாபும், சௌகைரும் கூறுகின்றனர். மதக் காவலர்கள் பணிகளை முடிவுக்கு கொண்டு வந்தது மற்றும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை வழங்கியது போன்ற செயல்கள் உலக அரங்கில் அந்த நாட்டிற்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

முழு விவரம் காணொளியில்....

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)