ஜெய்சங்கர் சீனா பயணம்: பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன?
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உட்பட சில உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.
உறவுகளை மீண்டும் வலுப்படுத்த இரு நாடுகளும் முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்திருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஜெய்சங்கரின் பயணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
சீனாவுடன் நெருக்கமாவதன் மூலம் அமெரிக்காவுடனான உறவில் சமநிலையை பராமரிக்க இந்தியா விரும்புகிறதா? இது புதிய அத்தியாயத்தின் தொடக்கமா அல்லது ஒரு அடையாள பயணம் மட்டுமா?
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இருவரும் சந்தித்துக்கொண்டனர். 2020ம் ஆண்டு எழுந்த பதற்றத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டது அதுவே முதல் முறையாகும்.
அதன்பின், சீனாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த ஜூலை மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பெய்ஜிங் சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
தற்போது ஜெய்சங்கர் சீனா சென்றிருக்கிறார். இதை இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நேர்மையான முயற்சியாக பார்க்க வேண்டும் என பிபிசியிடம் பேசிய ராஜ்ஜீய விவகார நிபுணர் ஷ்ருதி பாண்ட்லே கூறுகிறார்.
"அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளால் உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இப்போது உருவாகி வரும் உறவுகளில் நாடுகடந்த தேசியவாதம் பங்காற்றுகிறது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. முன்பு, பிரச்னைகளை தீர்க்க சில நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பு, சீனாவை சமாளிப்பது ஒரு பிரச்னையாக இருந்தது. ரஷ்யாவை சமாளிப்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இப்போது, டிரம்பின் முடிவுகளை சமாளிப்பது பிரச்னையாக உள்ளது. எனவே, ஜெய்சங்கரின் பயணத்தை இந்த பார்வையுடனும் அணுக வேண்டும்" என்கிறார் ஷ்ருதி பாண்ட்லே .
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 3,000 கி.மீ நீள எல்லை உள்ளது. அப்பகுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் இருப்பதால் எல்லைக் கோடு தெளிவாக இல்லை. இதனால். இருநாட்டு படையினருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா மீது இறக்குமதி வரிகளை அறிவித்தார். சீனா அதை வெளிப்படையாக எதிர்த்தது, ஆனால் இந்தியா பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தது.
சரி, இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன?
இந்த கேள்விக்கு பதிலளித்த சர்வதேச அரசியல் துறை பேராசிரியர் புஷ்ப் அதிகாரி, "எல்லைப் பிரச்னை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபரின் கொள்கைகள், இந்தியா-சீனாவை ஒன்றாக இணைத்துள்ளன." என்றார்.
"இரு நாடுகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை எந்தளவுக்குச் செல்லும் என்பதை பார்க்க வேண்டும். அமெரிக்கா இந்தியாவை இருதரப்பு வர்த்தகத்துக்கு அழைத்து, ரஷ்யா மற்றும் சீனா உட்பட பிரிக்ஸ் நாடுகளிடமிருந்து விலகி இருக்குமாறு கூறுவதற்கான சாத்தியம் உள்ளது. டிரம்பின் வார்த்தைகளை இந்தியா ஏற்றுக்கொண்டால், சீனாவுடனான உறவு வெகுதூரம் செல்லாது என நினைக்கிறேன். ஜெய்சங்கரின் முயற்சிகள் சிறப்பானவை, ஆனால் அதன் முடிவு வெகுவிரைவில் ஏற்படாது.'' என்றும் புஷ்ப் அதிகாரி கூறுகிறார்.
சரி, இந்த பயணம் மூலம் பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன?
டெல்லி பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் இணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், "வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றிருக்காவிட்டால், இந்தியாவின் விருப்பங்கள் வேறு எங்காவது பாதிக்கப்பட்டிருக்கலாம். எஸ்.சி.ஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் குரல் எழுப்பியிருந்தார். அவர் அங்கு சென்றிருக்காவிட்டால், இத்தகைய கருத்தை எழுப்பியிருக்க முடியாது. இந்தியா அதில் பங்கேற்காமல் இருந்திருந்தால், அந்த தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கக் கூடும்'' என கூறினார்.
இந்தியா ஒரு பன்முக உலகம் பற்றிப் பேசுகிறது. இந்த சூழலில், ஜெய்சங்கரின் சீன பயணத்தை மற்ற நாடுகள் எப்படி பார்க்கின்றன?
பேராசிரியர் புஷ்ப் அதிகாரி கூறுகையில், "ரஷ்யா-சீனா-இந்தியா என முத்தரப்பு கூட்டணியை செயல்படுத்த வேண்டும் என விரும்புவதாக ரஷ்யாவிலிருந்து செய்தி வெளியானது. தற்போது இந்தியா இதற்குப் பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக செல்கிறது. எனவே தங்கள் கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் இந்தியா சவாலை எதிர்கொள்ளும். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்." என்றார்.
சரி, இந்தியா முன்னுள்ள சவால்கள் என்ன?
ராஜ்ஜீய ரீதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் இயல்பானதாக இருப்பதாகத் தோன்றினாலும், களத்தில் இருநாடுகளுக்கிடையே அடிப்படையான மற்றும் நிரந்தரமான சவால்கள் பல உள்ளன.
பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கம் மற்றும் பெல்ட் அண்ட் ரோட் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் குவாட் அமைப்பில் அங்கம் வகிப்பது போன்றவை சீனாவை அசௌகரியமாக்குகின்றன.
இப்படியான சூழலில், இருநாட்டு உறவை மேம்படுத்த இந்தியா எதில் கவனம் செலுத்த வேண்டும்?
இந்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் புஷ்ப் அதிகாரி, "சீனாவுடன் உறவை மேம்படுத்த பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தினால், இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கலாம். பிராந்திய அளவில் சிறப்பான ஒத்துழைப்பு இருந்தால்தான் எந்த தவறான புரிதலும் ஏற்படாது. இது நடந்தால், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக முடியும்." எனக் கூறினார்.
இந்தியாவும் சீனாவும் முதலில் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி உறவை வலுப்படுத்த வேண்டும் என்கிறார் பேராசிரியர் ராஜிவ் ரஞ்சன்.
அவர் மேலும் கூறுகையில், "முதலாவதாக, உறவில் நிலைத்தன்மை அவசியம். இரண்டாவதாக, நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மூன்று விஷயங்களிலும் இந்தியாவும் சீனாவும் கவனம் செலுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறந்த திசையில் நகரும்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



