பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர்களின் பென்சில் ஓவியம் வெளியீடு - யார் அவர்கள்?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஹல்காமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப்படை வீரர்

பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழு கூட்டத்திற்குப் பின் பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.

பாஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோதி கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்துகொண்டனர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாக, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் தகவலை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரின் ஓவியங்களை பாதுகாப்பு முகமைகள் வெளியிட்டுள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் ஆசிப் ஃபௌஜி, சுமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூசா, யூனுஸ் மற்றும் ஆசிஃப் என்ற குறியீட்டுப் பெயர்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் இவர்கள் மூவரும் வரையப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காம் தாக்குதல்

பட மூலாதாரம், PTI

தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தெரிய வருவது என்ன?

பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ் வழங்கிய தகவல்கள்:

பஹல்காமில் செவ்வாய்கிழமை நடைபெற்ற இந்த மோசமான தாக்குதலை நடத்தியது யார் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான தகவல் ஏதும் இல்லை.

எனினும், பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் ஆயுதக்குழுவான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய, அதிகம் அறியப்படாத தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF) இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கலாம் என, உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோளிட்டு, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய பின், இக்குழு உருவாகியிருக்கலாம் என்றும் ஆயுதக்குழுவாக உருவெடுப்பதற்கு முன்னதாக, இணையம் வாயிலாக பிரசாரம் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்குழுவை தீவிரவாத குழு என 2023ல் இந்திய அரசு அறிவித்தது, இளைஞர்களை வேலைக்கு எடுப்பதாகவும், தீவிரவாத கருத்துகளை இணையத்தில் பரப்புவதாகவும் ஜம்மு காஷ்மீரில் ஆயுதங்களை கடத்துவதாகவும் அக்குழு மீது குற்றம்சாட்டியது.

"இந்தியாவின் தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு டி.ஆர்.எஃப் தீங்கு விளைவிப்பதாக" இந்திய அரசு கூறியுள்ளது.

"லஷ்கரிலிருந்து உருவான கிளை அமைப்பாக இக்குழு தோன்றுகிறது, விலகி இருப்பதாக தோன்றும் அதேசமயம் தாங்கள் தொடர்ந்து செயல்படுவதாகவும் சமிக்ஞைகளை காட்டுகிறது," என ராணுவ வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீநாத் ராகவன் பிபிசிக்கு தெரிவித்தார்.

"இப்படி கட்டுப்படுத்தப்பட்ட குழுக்கள், தங்கள் ஆதரவாளர்களுக்கு தாங்கள் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே தாக்குதல்களை நடத்துகின்றனர், தாங்கள் இன்னும் பயன்பாட்டு கருவியாக இருப்பதை உணர்த்துவதற்கு இப்படி செய்வார்கள்."

இதுதொடர்பாக எழுந்திருக்கும் அமைதி, முழு விவகாரத்திலும் தெளிவின்மை நிலவுவதை காட்டுகிறது, சமீப ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நிகழ்ந்த படுமோசமான தாக்குதலுக்குப் பிறகான அமைதியின்மையை இது அதிகப்படுத்துகிறது.

தாக்குதலில் கொல்லப்பட்ட உள்ளூர்வாசி ஹுசைன் ஷா

பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சையது ஹுசைன் ஷாவின் தந்தை

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த சையது ஹுசைன் ஷா, தன் வாழ்வாதாரத்துக்காக சுற்றுலா பயணிகளை குதிரை சவாரி அழைத்துச் செல்லும் வேலை பார்த்துவந்தார். அவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர்.

அவருடைய தந்தை ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "என் மகன் ஒரு அப்பாவி, ஆனாலும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டான்" என தெரிவித்துள்ளார்.

"நேற்று மாலை 3 மணி இருக்கும், அங்கு விபத்து நிகழ்ந்ததாக கேள்விப்பட்டோம். நான் என் மகனுக்கு போன் செய்தேன், ஆனால், அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

பின் நாங்கள் காவல் நிலையம் சென்றோம், அங்கு என் மகன் விபத்தில் சிக்கியதாகக் கூறினர். பின்னர் மருத்துவமனை சென்றபோது என் மகன் இறந்தது தெரியவந்தது," என்றார்.

அரசுக்கு ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா என செய்தியாளர் கேட்டபோது, "என் மகன் போய்விட்டான், என்ன கோரிக்கை வைப்பது?" என்றார்.

பயணத்தை ரத்து செய்யும் மக்கள்

பஹல்காம் தாக்குதல், ஜம்மு-காஷ்மீர்

பட மூலாதாரம், Siddharth Bakaria

படக்குறிப்பு, கோ ஜம்மு அண்ட் காஷ்மீர் பயண நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் பக்காரியா

பிபிசியின் செரில்லன் மோல்லன் மும்பையிலிருந்து வழங்கிய தகவல்கள்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலால் பயண முகவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக சுற்றுலாவை நம்பியுள்ள பலரும் தங்களுடைய தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்.

கோ ஜம்மு அண்ட் காஷ்மீர் எனும் பயண நிறுவனத்தை நடத்திவரும் சித்தார்த் பக்காரியா, பலரும் தங்களுடைய பயணத்தை ரத்து செய்துவருவதாக தெரிவித்தார்.

"இதுவரை 270 பேர் தங்கள் பயணத்தை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்," என கூறும் பக்காரியா, இதனால் தங்களுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறினார்.

பயணத்தை ரத்து செய்ய கோரிய வாடிக்கையாளர்களுள் சிலர் காஷ்மீர் மக்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியதாகவும், இந்த தாக்குதலுக்கு அவர்களை குற்றம்சாட்டுவதாக தோன்றுவதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர், மேலும் நேற்று மாலையிலிருந்து அப்பகுதியில் சில போராட்டங்களும் நடைபெற்றன.

பஹல்காமில் உள்ள மூன்று ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும் வேலை பார்த்துவரும் தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத பெண் ஒருவர், ஹோட்டல் அறை முன்பதிவையும் பலர் ரத்து செய்துவருவதாகவும் இதுபோன்று முன்பு நடந்ததில்லை என்றும் கூறினார்.

"மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளனர்; அவர்கள் காஷ்மீருக்கு வருவதற்கு விரும்பவில்லை," என்றார் அவர்.

பஹல்காமில் டாக்ஸி இயக்கிவரும் உம்மெர் ஷம்மெர் ஷஃபி வானி, அப்பகுதியிலிருந்து மக்கள் விரைவில் வெளியறி வருவதாக தெரிவித்தார். தாக்குதல் நடைபெற்றதிலிருந்து சுமார் 700 பேர் டாக்ஸிகள் மூலமாக தங்கள் வீடுகளுக்கும் விமான நிலையத்துக்கும் சென்றதாக அவர் தெரிவித்தார்.

"இந்த தாக்குதல் எங்கள் தொழில்களை முற்றிலுமாக அழித்துவிட்டது. எங்கள் வாழ்வாதாரத்துக்கு நாங்கள் சுற்றுலாவைதான் நம்பியுள்ளோம். இந்த சம்பவத்துக்குப் பிறகு தங்களால் மீள முடியுமா என ஓட்டுநர்களிடையே அச்சம் நிலவுகிறது," என கூறினார்.

திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷுபம் திவேதி, இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், தனது மனைவியுடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஷுபம் திவேதியின் உறவினர் சௌரப் திவேதி, "ஷுபமுக்கு, இந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதிதான் திருமணம் நடந்தது. அவர் தனது மனைவியுடன் பஹல்காமில் இருந்தார்.

சம்பவத்திற்குப் பிறகு, அவரது மனைவி என் மாமாவை தொலைபேசியில் அழைத்து ஷுபம் தலையில் சுடப்பட்டதாகக் கூறினார். தனிநபர்களின் பெயர்களைக் கேட்ட பிறகு துப்பாக்கிச் சூடு தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்து 2-3 நாட்களுக்குப் பிறகு ஷுபமின் உடல் விடுவிக்கப்படும் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது" என்று கூறினார்.

'ஆண்களை குறிவைத்து தாக்குதல்'

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சௌரப் திவேதி

'ஆயுததாரிகள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது' என்று தாக்குதலை நேரில் கண்டவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

"தீவிரவாதிகள் எத்தனை பேர் என்று என்னால் சொல்ல முடியவில்லை, ஒரு ஒரு சிறிய புல்வெளிக்கு அருகில் உள்ள காட்டில் இருந்து வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர்," என்று ஒரு பெண் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

"அவர்கள் தெளிவாக பெண்களை விட்டுவிட்டு, ஆண்களை மட்டுமே குறிவைத்துச் சுட்டனர். சில ஆண்களை ஒரே தோட்டா மூலமும், சில ஆண்களை பல தோட்டாக்கள் மூலமும் கொன்றனர். அந்த இடமே ஒரு புயல் வீசியது போல இருந்தது," என்று அவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்காக பேசியுள்ள பல்லவி ராவ் என்ற மற்றொரு பெண் (சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் அவரது கணவரும் ஒருவர்) 'ஆண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக்' கூறினார்.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்
படக்குறிப்பு, அனந்த்நாக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்திய பிரதமர் மோதி அவசர ஆலோசனை

பிரதமர் மோதி 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (ஏப்ரல் 22) சௌதி அரேபியா சென்றிருந்தார். இன்றிரவு (ஏப்ரல் 23) அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக தனது சௌதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோதி.

அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோதி நடத்திய ஆலோசனை கூட்டம்

சௌதி அரேபியா கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலை 'பயங்கரவாத தாக்குதல்' என்று கண்டித்து சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

'கொடூரமான தாக்குதல்' என்று கடுமையாக கண்டித்துள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் கூறியது என்ன?

இந்தத் தாக்குதல் கடுமையான குற்றச் செயல் என்று கூறும் ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கை, பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறது.

"இந்தக் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய அரசுக்கும் மனமார்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரான் கூறியது என்ன?

இந்தியாவிலுள்ள இரானிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இரான் தூதரகம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளது.

உலக முஸ்லிம் லீக் கண்டனம்

இந்தத் தாக்குதல் பற்றிய செய்திகள் வெளிவந்தபோது, ​​இந்திய பிரதமர் மோதி சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்தார். அங்கு, உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் முகமது பின் அப்துல் கரீம் அல்-இசா இந்திய பிரதமர் மோதியை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார். 'கொடூரமான பயங்கரவாத தாக்குதலில்' கொல்லப்பட்டவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷேக் முகமது பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸா, "இன்று நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜெட்டாவில் சந்தித்தேன். பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும், பன்முகத்தன்மை மற்றும் அமைதி மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று தெரிவித்துள்ளார்.

பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பஹல்காம் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் ஏரிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்

'இந்தியாவின் சுவிட்சர்லாந்து'

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

"இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளது.

ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இந்திய படையினர் ஓடுவதைக் காட்டுகின்றன. வேறொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது.

டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், ANI

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி முகமையான பிடிஐ தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டெல்லி போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக சுற்றுலா தலங்கள் மற்றும் நகர எல்லைகளில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகக் கண்டறியும் வகையில் கடுமையான சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மறுபுறம், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு அதிகாரிகள், காவலர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர், மேலும் சாலைகளில் விரிவான தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்து இந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களின் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. பஹல்காமில் உள்ள சிலரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்று, தாக்குதல் குறித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

'நான் அதிர்ச்சியடைந்தேன்' - முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

"நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது", என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் கூறியதென்ன?

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

"பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்", என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

"இந்த சம்பவம் குறித்து வீடியோ அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அனந்த்நாக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்

"பாதிக்கப்பட்டோரில் தமிழர்கள்"

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனந்த்நாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர சுற்றுலா சென்றிருந்த 57 வயது சந்துரு என்பவருக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், விலைமதிப்பற்ற பல உயிர்களை பலியாக்கியது. இது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள உள்ளுறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்", என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவி மையத்தை தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு சார்பாக 011-24193300, 9289516712 என்ற உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அப்தாப் ரசூலை, ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு நேரடியாக சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வகையான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன", என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இந்த தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது பற்றிய செய்திகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனதை உடைக்கிறது" என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்,

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.