அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் - என்ன நடந்தது?
அதானிக்கு எதிராக அமெரிக்காவில் கைது வாரண்ட் - என்ன நடந்தது?

இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) காலை மட்டும் அதானி குழும பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் 2.5 லட்சம் கோடி சரிந்தது. ஆனால், ஏன் இந்த நிலை?

அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது குழும அதிகாரிகள் சிலர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் இந்தியாவில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சில ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் லாபம் மட்டும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், லஞ்ச விவகாரத்தை மறைத்து அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் பத்திரங்கள் மற்றும் கடன் மூலம் சுமார் 3 பில்லியன் டாலர்கள் திரட்டியுள்ளனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது ஒரு மோசடி என்கிறது அமெரிக்காவின் குற்றப் பத்திரிகை. கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என நாங்கள் நிரூபிப்போம் என, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராக அதானியை எதிர்க்கட்சிகள் தொடர்புப்படுத்துகின்றன. அமெரிக்க நீதித்துறையை மாற்றியமைக்கப் போவதாக உறுதியளித்த டிரம்ப் அதிபராக வெற்றி பெற்ற நிலையில், வழக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. டிரம்பின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அதானி அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)