You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காசி தமிழ் சங்கமத்திற்கு தமிழ்நாடு அரசிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?
வாரணாசி நகரில் மத்திய அரசால் நடத்தப்பட்டுவரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு அரசிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் அப்படி அழைப்பு விடுக்கப்பட்டதா?
இந்திய விடுதலையின் 75ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் 'விடுதலையின் அமுதப் பெருவிழா'-வின் ஓர் அங்கமாக 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இந்திய அரசு ஒரு மாத காலம் நடத்துகிறது.
நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை வாரணாசியில் இந்திய கல்வி அமைச்சகம் நடத்தும் இந்த ஒரு மாத கால நிகழ்வு நவம்பர் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், கலாசார-பாரம்பரிய நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காசி தமிழ் சங்கமத் தித்திற்கு சென்னை ஐஐடியும் வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழகமும் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்குகின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து பலர் செல்கின்றனர்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் "வாரணாசி நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசின் பங்கேற்பையும் உதவியையும் கோரி எழுதினோம். ஆனால், அவர்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை" என கல்வித் துறை அமைச்சகத்தின் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சகம் பதில்
இந்த தகவலை உறுதிப்படுத்த காசி தமிழ் சங்கமம் நிகழ்வை ஒருங்கிணைந்து நடத்தும் இந்திய கல்வி அமைச்சகத்தின் அமைச்சர் தர்மேந்திர பிரதானை தொடர்பு கொண்டு கேட்டோம்.
அவரது அமைச்சக அதிகாரி, "காசி தமிழ் சங்க நிகழ்ச்சிக்கான கடிதத்தை தமது கையெழுத்திட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதினார். ஆனால், அதன் பிறகு தமிழக அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை," என்று கூறினார்.
தமிழ் தொடர்பாக இவ்வளவு பெரிய நிகழ்ச்சி நடக்கும்போது அதில் தமிழ்நாடு அரசு பங்கேற்காதது குறித்து பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், காசி தமிழ் சங்கமம் குறித்து மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசின் இந்த அறநிலையத் துறைக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று பதிலளித்தார்.
இது குறித்து தமிழக தொழில்துறை ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டபோது, அப்படி எந்த அழைப்பும் தங்களுடைய துறைக்கு வரவில்லை என்றார்.
"காசியில் நடக்கும் தமிழ் சங்கமத்திற்கு என்னுடைய ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறைக்கு எந்த அழைப்பும் கடிதவாயிலாக வரவில்லை. மின்னஞ்சல் வழியாகவும் எந்த அழைப்பும் வரவில்லை. என்னுடைய மின்னஞ்சல் மட்டுமல்லாது, தமிழ் வளர்ச்சித் துறையின் மின்னஞ்சலும் பரிசோதிக்கப்பட்டுவிட்டது. அதிலும் அழைப்பு ஏதும் வரவில்லை. அவர்கள் யாருக்கு அழைப்பு அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
மத்திய அரசு நடத்தும் இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.
தமிழ் மொழியும் இன்றிலிருந்து தமிழர் கையில் இல்லை. தமிழ்நாடு அரசு இல்லாமல், தமிழ்த் துறையுமில்லாமல், தமிழ் அறிஞர்களில்லாமல், காசியில் தமிழ்ச் சங்கமம் ஒன்றிய அரசு நடத்துகிறது. ஸ்டாலின் அரசு, தமிழையும் ஒன்றிய அரசு அபகரித்து செல்ல விட்டுவிட்டார் போலும்" என சூரத் ராமசாமி என்பவர் பதவிட்டுள்ளார்.
"காசி தமிழ் சங்கமம் நல்ல முயற்சி. இது அரசு விழாவா அல்லது அரசியல் கட்சியின் விழாவா? இது அரசு விழா என்றால் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் /அலுவலர்கள் அழைக்கப்பட்டனரா? யார் கலந்து கொண்டனர்?" என ரவி என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை காசி தமிழ் சங்கமம் எனும் அரசு விழாவில் நிராகரித்தது தமிழ்நாட்டை அவமானப்படுத்துவதாகும். அதனை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்." என ஃபாரூக் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்