அர்ஜென்டினா ரசிகர்களை அழவைத்த எம்பாப்பேவின் ‘ரோலர் கோஸ்டர்’ தருணங்கள்

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் அர்ஜென்டினா கால்பந்து அணிக்கும் மெஸ்ஸிக்கும் ரசிகராக இருந்தால் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின்போது உங்கள் இதயத்துடிப்பு ரோலர் கோஸ்டரில் பயணிப்பதைப் போன்று இருந்திருக்கும்.

சென்னை ராயபுரத்தில் அகலத் திரையில் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெஸ்ஸி ரசிகர், தாம் போட்டியின் இரண்டாம் பாதியில் விக்கித்து அழுது கொண்டிருந்ததாகச் சொன்னார். 

கத்தாரின் லூசாய்ல் மைதானத்தில் இருந்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அர்ஜென்டினா ரசிகர்கள் மாத்திரமல்ல, பிரான்ஸின் அதிபரே மைதானத்தில் சிறுபிள்ளையைப் போலக் குதிப்பதும் பின்னர் சோகத்தில் கலங்குவதுமாக இருப்பதைத் தொலைக்காட்சித் திரையில் காண முடிந்தது.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்தார் எம்பாப்பே

அர்ஜென்டினாவின் 3 வெற்றிகளும் 2 தோல்விகளும்

அர்ஜென்டினா இந்தப் போட்டியில் மூன்று முறை வெற்றி பெற வேண்டியிருந்தது என்றே சொல்லலாம். போட்டியின் பாதியில் இனி தோல்விக்கு வழியில்லை என்றே அர்ஜென்டினா ரசிகர்கள் வந்திருப்பார்கள். 

ஆனால் இரண்டே நிமிடத்தில் எம்பாப்பே அந்தக் கனவைச் சிதைத்துவிட்டார். அடுத்தாக கூடுதல் நேரம் முடிய சில நிமிடங்களே இருந்தபோது மெஸ்ஸி கோல் அடித்ததும் கோப்பை கைக்கு வந்துவிட்டதாகவே அர்ஜென்டினா ரசிகர்கள் கருதியிருப்பார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் பெனால்ட்டி மூலம் கோல் அடித்த அதே எம்ப்பாப்பே மீண்டும் அர்ஜென்டினாவை தோல்வியை நோக்கித் தள்ளிச் சென்றார். 

கடைசியாக பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. இந்த முறை அர்ஜென்டினாவுக்கு நல்வாய்ப்பாக, எம்பாப்வே போன்று வேறு யாரும் கனவைக் கலைக்க வரவில்லை. 36 ஆண்டுகளுக்குப் பிறகு கால்பந்து உலகக் கோப்பையை கைகளில் ஏந்தும் வாய்ப்பு அர்ஜென்டினாவுக்குக் கிடைத்தது.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

120 நிமிட ரோலர் கோஸ்டர் பயணம் எப்படி இருந்தது?

ஆட்ட நேரம் முடிந்து, கூடுதல் நேரமும் முடிந்த பிறகு, இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; பெனால்டி ஷூட் அவுட்டில் பிரான்ஸை 4-2 என்ற கணக்கில் வென்றது அர்ஜென்டினா.

எமிலியானோ மார்ட்டினெஸ், ஐந்து பெனால்டி ஷூட்களில் இரண்டை தடுத்து அணியைக் காப்பாற்றினார். பிரான்ஸ் அணிக்கு எதிராக, அர்ஜென்டினாவிலிருந்து மெஸ்ஸி, டிபாலா, பாரெடெஸ், மோன்டியல் ஆகியோர் தொடர்ந்து கோல் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றியை உறுதி செய்தார்கள்.

அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு இந்த முறை சாத்தியமாகியுள்ளது.

ஒவ்வொரு வீரரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிகிறது. அங்குள்ள அனைவரின் பார்வையும் லியோனெல் மெஸ்ஸியின் மீதே இருந்தது. அவருடைய சாதனைகளில் இல்லாமல் இருந்த ஒரேயொரு வெற்றி, உலகக் கோப்பையாகவே இருந்தது. அதுவும் இன்று சாத்தியமாகியுள்ளது.

உலகத்திற்கே மகிழ்ச்சியளித்த ஒரு கால்பந்து கலைஞனின் உலகக்கோப்பை "இறுதிப்போட்டி"முழுவதும் அன்பால் நிரம்பியுள்ளது. இப்படியொரு அபாரமான போட்டியின் மூலம் கால்பந்து விளையாட்டு அவருக்கு உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து அவருக்கு பிரியாவிடை அளிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இரண்டாம் பாதியில் பிரான்ஸின் எம்பாப்பே அடித்த மூன்று கோல்களும் அர்ஜென்டினா ரசிகர்களின் இதயங்களை நொறுக்கிவிட்டது என்றே சொல்லலாம். கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்பான ஆட்டங்களில் ஒன்றாக இந்த இறுதிப்போட்டி மாறியதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

2018இல் பிரான்ஸ் அணிக்காக, 19 வயதில் எம்பாப்பே உலகக்கோப்பையை வென்று, உலகளாவிய பார்வையைப் பெற்றார்.

முதல் பாதியில் அர்ஜென்டினாவில் ஆதிக்கம் அர்ஜென்டினா அணியினர் முதல் பாதியில், வெறும் தங்களுடைய தற்காப்பையும் மெஸ்ஸி, ஆல்வாரெஸின் தாக்குதலையுமே நம்பியிருக்காமல், பிரான்ஸ் அணியைச் சிந்திக்க விடாமல் ஆடினார்கள். டி மரியா, டிபால், மெக் ஆலிஸ்டர், ரொமேரோ என்று அனைவரும் அதிரடி ஆட்டத்தைக் காட்டினார்கள். அதற்கான பலனாக பிரான்ஸை திணறடித்தது, அவர்களுடைய தடுப்பாட்டமும் தாக்குதல் ஆட்டமுமே.

அர்ஜென்டினா இதற்கு முன்பு 1930ஆம் ஆண்டில் இதேபோல் இரண்டு கோல் முன்னிலையில் உருகுவேகவுக்கு எதிராக இருந்தது. ஆனால், இறுதியில் உருகுவே 4-2 என்ற கணக்கில் வென்றது.

எம்பாப்பே பெனால்டி ஷாட்டை கோலாக்கி, பிரான்ஸுக்கான முதல் கோலை அடித்தார். ஒட்டமெண்டியின் தவறால், பிரான்ஸுக்கு ஒரு கம்பேக் கிடைத்தது. எம்பாப்பேவின் ஆறாவது உலகக்கோப்பை கோல் இது.

மற்றொரு தனிமனித தவறால் அர்ஜென்டினாவுக்கு மீண்டும் ஓர் அபாய நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பிரான்ஸுக்காக கிலியன் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இரண்டே நிமிடங்களில் ஒட்டுமொத்த போட்டியின் நிலைமையை மாறிப்போனது. பிரான்ஸின் வசம் போட்டி வந்தது.

அத்தோடு நில்லாது கூடுதல் நேரத்தில் 1 கோல், பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு கோல் என ஆச்சரியப்படுத்தினார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்ததன் மூலம் கோல்டன் பூட் விருதையும் தட்டிச் சென்றார். பிரான்ஸ் தோல்வியைத் தழுவியிருந்தாலும் எம்பாப்வேவின் ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் எம்பாப்பே அர்ஜென்டினாவின் கோல் எல்லைக்கு அருகே கொண்டு சென்றார். ஆனால், அவர் இறுதி நேரத்தில் தடுக்கப்பட்டார். அதில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பையும் கோல் கீப்பர் மார்ட்டினெஸ் தடுத்துவிட்டார். அதையும் கோலாக்கி இருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

எம்பாப்பே

பட மூலாதாரம், Getty Images

டி மரியாவின் அற்புத ஆட்டம்

அர்ஜென்டினாவின் டி மரியாவின் ஆட்டம் ஓர் ஆச்சர்யம் தான். அவர் இடையே சில காலம் ஆடவில்லையே, அவரை ஏன் இப்போது இறக்கினார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவருடைய ஆட்டத்தை இறுதிப்போட்டிக்காக ஸ்கலோனி ஒளித்து வைத்திருந்ததைப் போலவே தோன்றியது.

ஒரு கோல் அடித்ததோடு, இன்னொரு கோலுக்கான பெனால்டியையும் பெற்றுக்கொடுத்த டி மரியா 64வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்கு பதிலாக தடுப்பாட்டக்காரரான அகுனா களமிறக்கப்பட்டார். 64 நிமிடங்களில் ஒரு வீரரால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் அணிக்காக செய்துகொடுத்து விட்டுச் சென்றார்.

பிரான்ஸின் ஆட்டம் அவ்வளவு திறன் மிக்கதாக இந்தத் தொடர் முழுவதுமே இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அவர்களை ஆடவே எதிரணி விடவில்லை. இரண்டாவது பாதியில் அவர்கள் கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போதுதான் எம்பாப்பே ஹாட்ரிக் கோல் அடித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: