பிகார் தேர்தல் முடிவுகள்: 200க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை

தேர்தலில் முன்னிலை பெற்றதை இனிப்புடன் கொண்டாடும் ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள்
படக்குறிப்பு, தேர்தலில் முன்னிலை பெற்றதை இனிப்புடன் கொண்டாடும் ஐக்கிய ஜனதா தளம் தொண்டர்கள்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ் 'மகா' கூட்டணி 34 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், 8.30 மணி வரை மொத்தம் 202 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணி இதுவரை 168 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மகா கூட்டணி இதுவரை 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பிகாரின் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜகவின் சதீஷ் குமாரை விட 14,532 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவின் துணை முதல்வர் வேட்பாளர் சாம்ராட் சவுத்ரி தாராபூர் தொகுதியில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

ஜன் சுராஜ் கட்சியின் நிலை என்ன?

பிரசாந்த் கிஷோர் , பிகார் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜன் சுராஜ் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் களம் கண்டார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் எனும் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் போட்டியிட்டார். காலை, 1 தொகுதியில் மட்டுமே இவரது கட்சி முன்னிலை பெற்றது. எனினும் அடுத்தடுத்த சுற்றுக்களில் பின்னடைவை சந்தித்தது.

மைதிலி தாகூர் வெற்றி

மைதிலி தாகூர்

பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty

பிகாரின் அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மைதிலி தாகூர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் மைதிலியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வினோத் மிஸ்ரா மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் பிப்லப் குமார் சவுத்ரி போட்டியிட்டனர்.

25வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், மைதிலி 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ்வி யாதவ் வெற்றி

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பிகாரின் ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பாஜகவின் சதீஷ் குமாரை விட 14,532 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவு

தேஜ் பிரதாப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பிகாரின் மஹுவா தொகுதியில் ஜன்சக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள தரவுகளின் படி, 19வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேஜ் பிரதாப் யாதவ் 26,426 வாக்குகள் பெற்று, மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மஹுவா தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) வேட்பாளர் சஞ்சய் குமார் சிங் முன்னணியில் உள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் ஜன்சக்தி தள் எனும் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

கேசரி லால் யாதவ் பின்னடைவு

கேசரிலால் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பிகார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான கேசரி லால் யாதவ், பின்னடைவை சந்தித்துள்ளார்.

சாப்ரா தொகுதியில் போட்டியிட்ட போஜ்புரி சினிமா நட்சத்திரமான கேசரி லால், சுமார் 7,739 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

முக்கியத்துவம் ஏன்?

இந்த ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பிகாரில் 1951ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில்தான் அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த முறை பிகாரில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட 9.6% அதிகம்.

ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர்களில் 8.15 சதவிகிதம் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

ஆண் வாக்காளர்களில் 62.98 சதவிகிதத்தினரும், பெண் வாக்காளர்களில் 71.78 சதவிகிதத்தினரும் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 3.51 கோடி பெண் வாக்காளர்களும் 3.93 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ள பிகாரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியாக உயர்ந்துள்ளது.

தொண்டர்கள் உற்சாகம், பிகார் தேர்தல்
படக்குறிப்பு, பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்

நிதிஷ் குமாருக்கு சாதகமா?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) முன்னிலை வகிக்கிறது.

தேர்தலுக்கு சற்று முன்பு, செப்டம்பர் மாதத்தில் நிதிஷ் குமார் முதலமைச்சர் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கினார். அதில், பிகார் முழுவதும் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தொகை அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், தலா 10,000 ரூபாய் செலுத்தப்பட்டது.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவொரு தொடர்ச்சியான திட்டம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. எனவே, பெண்களின் உற்சாகமான பங்கேற்பு நிதிஷ் குமாருக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்

நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கும் என்று கணித்துள்ளன.

ஆக்ஸிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கலாம். என்.டி.ஏ-வுக்கு 121 முதல் 141 இடங்களும், மகா கூட்டணிக்கு 98 முதல் 118 இடங்களும் கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பிகாரில் தேர்தல் களத்தில் இறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கலாம்.

டுடேஸ் சாணக்யாவின் கருத்துக் கணிப்புப்படி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 160 இடங்களைப் பெறலாம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 77 இடங்கள் கிடைக்கலாம்.

பிகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், புதன்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​76 லட்சம் வாக்காளர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நிதிஷ் குமார் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதாக கருத்துக் கணிப்புகள் கூறியபோது, ​​மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நம்ப முடியுமா? வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மீது உளவியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர இது வேறெதுவும் இல்லை" என்று தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

தேஜஸ்வி யாதவ் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் 85க்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றியுள்ளார். பிகாரில் தான் ஆட்சி அமைத்தால் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பிகார் மக்களில் 16 முதல் 18 சதவிகிதம் பேர் மட்டுமே நிதிஷை முதலமைச்சராக்க விரும்புவதாகக் காட்டிய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டிய தேஜஸ்வி, கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு