இரான் செலுத்திய ஏவுகணைகள், ட்ரோன்களை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியது எப்படி?
இஸ்ரேல் மீது இரான், 170 ட்ரோன்களையும், 30 க்ரூஸ் ஏவுகணைகளையும், 120 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் ஏவியதாக தகவல்கள் வெளியாகியுளளது. இதில் பெரும்பாலானவை இரானில் இருந்து ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் சிரியா, ஏமன், இராக் ஆகிய நாடுகளில் இருந்து ஏவப்பட்டதாகவும் அமெரிக்கா கூறுகிறது.
இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99 சதவீதத்தை தங்கள் இலக்குகளைத் தாக்காதவாறு இடைமறித்து விட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு, இரானின் புரட்சிகர காவலர் படை (IRGC) இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாகக் கூறியது.
இராக் வானில், இஸ்ரேலின் திசை நோக்கி ஏவுகணைகள் பறந்ததாக இராக் பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தன.
மெதுவாக நகரும் ட்ரோன்கள் ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இரான் புரட்சிகர காவலர் படை கூறியது. அவை இரண்டும் இஸ்ரேலை ஏறக்குறைய ஒரே நேரத்தில் தாக்கும் என்றும் இரானின் புரட்சிகர காவலர் படை கூறியது.
இந்நிலையில், இரான், இராக், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து ஏவப்பட்ட டஜன்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
லெபனானில் உள்ள இரான் ஆதரவு ஹெஸ்பொல்லா குழு, சிரியாவில் இருக்கும் கோலன் குன்றுகளில் இருக்கும் இஸ்ரேலிய ராணுவத் தளத்தின் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவியதாகக் கூறியிருக்கிறது.
இரான் ஏவிய 99% ஏவுகணைகள் இஸ்ரேலிய வான்வெளிக்கு வெளியே அல்லது இஸ்ரேலின் வான்வெளியிலேயே இடைமறிக்கப்பட்டன என்று ரியர் அட்மிரல் ஹகாரி கூறினார்.
இவற்றில், நேரான பாதையில் செல்லும் ட்ரோன்கள், மற்றும் புவியீர்ப்பு விசையைப் பயன்படுத்தி வளைந்த பாதையில் செல்லும் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.
பெரும்பாலான ஏவுகணைகள் தொலைவில் இருந்து வந்ததால், அவற்றை இடைமறிக்க இஸ்ரேல் தனது F-35 போர் விமானங்களை அனுப்ப முடிந்தது. இரான் அனுப்பிய 30 குரூஸ் ஏவுகணைகளில் 25 நாட்டிற்கு வெளியே சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.
இந்த முதல் நிலை தற்காப்பினைக் கடந்துவந்த ஏவுகணைகளைச் சமாளிக்க, இஸ்ரேல் அதன் வான்வழி பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தியது. இது கடந்த அக்டோபர் 7 முதல் செயல்பாட்டிலிருக்கும் மூன்று-அடுக்கு ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பாகும்.
இதன் மிக உயர்ந்த அடுக்கு ஏரோ (arrow) ஆகும். இது நீண்ட தூர ஏவுகணைகளை நேரடியாக இடைமறிக்கப் பயன்படுகிறது. இஸ்ரேல் மீது ஏவப்பட்ட பெரும்பாலான பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்த ஏரோ அமைப்பே இடைமறித்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஏவுகணைகளில் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் வெளியாகின. இக்காட்சிகளின் மூலம், இதனைச் செய்தது ஏரோ 3 அமைப்பு என்று புலப்படுகிறது. இது மிகவும் மேம்பட்ட அமைப்பு. இது வளிமண்டலத்திற்கு வெளிப்புறத்தில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி உள்வரும் ஏவுகணைகளை இடைமறிக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14) பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இரானால் ஏவப்பட்ட அனைத்து ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் வீழ்த்த இஸ்ரேலுக்கு அமெரிக்கப் படைகள் உதவியதாக கூறினார். முன்னோடியில்லாத இந்தத் தாக்குதலைச் சமாளிக்க அமெரிக்கா விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு நகர்த்தியதாக அவர் கூறினார்.
இரண்டு விமானங்களும் இரண்டு கப்பல்களும் இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டன.
அமெரிக்க மத்திய கட்டளை (Centcom), தனது படைகள் 80-க்கும் மேற்பட்ட ட்ரோன்களையும், குறைந்தது ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அழித்ததாகக் கூறுகிறது.
இப்பகுதியில் ரகசிய தளங்களில் இருந்து செயல்பட்ட அமெரிக்கப் படைகள் ஜோர்டான் எல்லைக்கு அருகே தெற்கு சிரியாவில் இரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் செய்தி முகமையிடம் தெரிவித்தன.
ஆனால், முன்னாள் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜியோரா ஐலாண்ட் அமெரிக்காவின் மிகப்பெரிய உதவி, ‘மிகவும் துல்லியமான உளவுத்துறை தகவல்கள் தான்’ என்று ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், இங்கிலாந்தின் RAF டைஃபூன் ஜெட் விமானங்கள் பல இரானிய தாக்குதல் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதை உறுதிப்படுத்தியுள்ளார். இரானிய தாக்குதல் ‘ஆபத்தான மற்றும் தேவையற்ற செயல், இதை நான் கடுமையாக கண்டித்துள்ளேன்’ என்று சுனக் கூறினார்.
பிரான்ஸ் வான்வெளியில் ரோந்து செல்ல உதவியது, ஆனால் அது ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியதா என்பது இன்னும் தெளிவாக இல்லை என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், REUTERS
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



