நெதர்லாந்தை திணறடித்த இந்தியாவின் 9 பந்துவீச்சாளர்கள்

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டங்களில் தோல்வி அடையாத அணி என்ற பெருமையுடன் இந்திய அணி 9 வது வெற்றியுடன் லீக் சுற்றை நிறைவு செய்தது. பெங்களூருவில் இன்று நடந்த உலகக் கோப்பைத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

இந்திய அணி 9 லீக் ஆட்டங்களிலும் வென்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. நெதர்லாந்து அணி 4 புள்ளிகளுடன் தொடரிலுந்து வெளியேறியது. இருப்பினும் 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது நெதர்லாந்து அணி.

ஸ்ரேயாஸ் அய்யர் 128(நாட்அவுட்), கே.எல்.ராகுல்(102), கில்(51), ரோஹித் சர்மா(61), கோலி(51) என 5 பேட்டர்களும் ஆகச்சிறந்த பங்களிப்பு செய்ததால் மிகப்பெரிய இலக்கை இந்திய அணி எட்டியது.

ரோஹித் - கில் கூட்டணி அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த கோலி நன்கு பயன்படுத்தி ரன்களைக் குவித்தார். 4வது விக்கெட்டுக்கு ராகுல், ஸ்ரேயாஸ் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை எட்ட முடியாத நிலைக்கு கொண்டு சென்றனர்.

டாஸ் வென்று இந்தியா முதல் பேட்டிங்

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் இந்த ஆட்டம் வெறும் சம்பிரதாயமான ஒன்றாகவே அமைந்துள்ளது. இருப்பினும் எந்த ஆட்டத்தையும் இந்திய அணி குறைத்து மதிப்பிடவில்லை என்பதால் நெதர்லாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்திலும் முழு பலத்துடன் களமிறங்கியது. பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள், ஜடேஜா, குல்தீப் ஆகியோருடன் இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

கில், ரோஹித் விளாசல்

ரோஹித் சர்மா, கில் ஆட்டத்தைத் தொடங்கினர். தத் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் 2 பவுண்டரிகளை விளாசி 11 ரன்களைக் குவித்தார். ஆர்யன் தத் வீசிய 5-வது ஓவரிலும் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதன்பின் கில் அதிரடியில் இறங்கி நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

வேன் பிரீக் வீசிய 6-வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகல் உள்ளிட்ட 16 ரன்கள் சேர்த்தார். ஆக்கர் மேன் வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்ததால், ரன்ரேட் 9 ரன்கள் வீதத்தில் உயர்ந்தது. வேன் மீக்ரன் வீசிய 10-வது ஓவரில் கில் பவுண்டரி, சிக்ஸர் என 10 ரன்கள் சேர்த்தார்.

பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய சுப்மான்கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 12வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களைக் கடந்தது. சுப்மான் கில் அரைசதம் அடித்தபின் நீண்டநேரம் நிலைக்கவில்லை.

வேன் மீக்ரன் வீசிய 12-வது ஓவரில் நிதானமானாருவிடம் கேட்ச் கொடுத்து கில் 51ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து கில்-ரோஹித் சர்மா கூட்டணி பிரிந்தனர்.

அடுத்துவந்த விராட் கோலி, ரோஹித்துடன் இணைந்தார். அரைசதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா 44 பந்துகளில் வேன் மீக்கரன் வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி விளாசி அரைசதம் அடித்தார்.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

அதிக சிக்ஸர் சாதனை

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை இன்று எட்டினார். ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா எட்டினார். இதற்கு முன்2015ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஒரு காலண்டர் ஆண்டில் 18 இன்னிங்ஸில் 58 சிக்ஸர்கள் விளாசி அதிகபட்ச சிக்ஸர் சாதனையை வைத்திருந்தார், அதை முறியடித்த ரோஹித் சர்மா 24 இன்னிங்ஸில் 59 சிக்ஸர்களை விளாசினார்.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

கங்குலியின் 20 ஆண்டு சாதனை தகர்ப்பு

அது மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 20 ஆண்டுகால சாதனையையும் ரோஹித் சர்மா தகர்த்துவிட்டார். உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்களை விளாசிய கேப்டன் என்ற வகையில் கங்குலியின் சாதனையை ரோகித் சர்மா தகர்த்தார். 2003 உலகக் கோப்பைத் தொடரில் கங்குலி 11 இன்னிங்ஸில் 465 ரன்கள் சேர்த்திருந்தார். ஆனால் இந்த உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா 9 இன்னிங்ஸில் 503 ரன்கள் சேர்த்து கங்குலியின் 20 ஆண்டுகால சாதனையை தகர்த்தார். இதில் ஒரு சதம், 3 அரைசதங்களும் அடங்கும்.

அரைசதம் கடந்து நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 18-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். டீ லீட் வீசிய 18வது ஓவரில் லாங் ஆன் திசையில் பரேசியிடம் கேட்ச் கொடுத்து 61 ரன்னில் (2சிக்ஸர்,8பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஸ்ரேயாஸ் அய்யர், கோலியுடன் சேர்ந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

கோலி அரைசதம்

தொடக்கத்தில் விராட் கோலி நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். அதன்பின் கோலி அதிரடியில் இறங்கினார். வேன் பீக்வீசிய 22-வது ஓவரில் கோலி ஒரு சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஓவருக்கு ஒரு பவுண்டரியை கோலி விளாசினார்.

நிதானமாக ஆடிய கோலி 53 பந்துகளி்ல் ஒருநாள் போட்டியில் 71-வது அரைசதத்தை நிறைவு செய்தார். முதல் 18 பந்துகளில் 7 ரன்கள் சேர்த்திருந்த கோலி அதன்பின் ரன் சேர்க்கும் கியரை மாற்றி, அடுத்த 35 பந்துகளில் 4 3ரன்கள் சேர்த்தார்.

இந்திய அணி 29-வது ஓவரில் 200 ரன்களை எட்டியவுடன் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். வேன் டெர் மெர்வ் வீசிய சுழற்பந்துவீச்சை கணிக்கத் தவறியதால் க்ளீன் போல்டாகி 51 ரன்னில் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் சில நிமிடங்கள் மவுனமாகினர். அதன்பின் கோலிக்கு வழக்கம் போல் கைதட்டி வழியனுப்பினர். 3வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், கோலி கூட்டணி 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த கேஎல் ராகுல், ஸ்ரேயாஸுடன் சேர்ந்தார். ராகுலுக்கு இது சொந்த மண் என்பதால் களமிறங்கும்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்தது. 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரேயாஸ் - ராகுல் சதம்

மிகுந்த பொறுமையாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 84 பந்துகளி்ல் சதம் அடித்தார். உலகக் கோப்பைத் தொடரில் ஸ்ரேயாஸ் அடித்த முதல் சதம் இதுவாகும். ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அடித்த 4வது சதம் இது. அது மட்டுமல்லாமல் நெதர்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய பேட்டரும் ஸ்ரேயாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ லீட் வீசிய 34-வது ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசி, ஸ்ரேயாஸ் அய்யர் 48 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதன்பின் ஸ்ரேயாஸும், ராகுலம் ஓவருக்கு ஒரு பவுண்டரி விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்தது.

41-வது ஓவரிலிருந்து ராகுல், ஸ்ரேயாஸ் அதிரடி ஆட்டத்தைக் கையாண்டனர். வேன் பீக் வீசிய 41-வது ஓவரில் ராகுல் 2 பவுண்டரிகளை விளாசினார். நிதான ஆட்டத்தைக் கையாண்ட ராகுலும், 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 42-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது.

அரைசதம் அடித்த பின் ராகுலின் பேட்டிங்கில் அனல் பறந்தது. வேன் மீக்ரன் வீசிய 44-வது ஓவரில் ஸ்குயர்லெக் திசையில் ஒரு சிக்ஸரை ராகுல் விளாசிய நிலையில் லாங்ஆன் திசையில் ஸ்ரேயாஸ் அய்யர் சிக்ஸர் விளாசினார்.

வேன் பீக் வீசிய 47-வது ஓவரில் ராகுல் ஒரு சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். 49-வது ஓவரை வீசிய வேன் பீக் ஓவரில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 25 ரன்களை வெளுத்துவாங்கினார்.

டீ லீட் வீசிய 50வது ஓவரில் ராகுல் 2 சிக்ஸர்களை விளாசி 62 பந்துகளி்ல் சதம் அடித்து 102 ரன்களில்(4சிக்ஸர், 11பவுண்டரி) ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ், ராகுல் கூட்டணி 208 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் சேர்த்தது. ஸ்ரோயஸ் அய்யர் 128 ரன்களுடனும்(94 பந்துகள், 5 சிக்ஸர், 10பவுண்டரி), சூர்யகுமார் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 126 ரன்கள் சேர்த்தது.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

புதிய சாதனை படைத்த இந்திய அணி

இதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் புதிய சாதனையைப் படைத்தது. ஒரு அணியில் உள்ள டாப்-5 பேட்டர்கள் அரைசதம் அடித்தது இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன் எந்த அணியில் உள்ள டாப்-5 பேட்டர்களும் அரைசதம் அடித்தது இல்லை.

3 பேர் 279 ரன்கள்

நெதர்லாந்து தரப்பில் பாஸ் டீ லீட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேன் டெர் மெர் மட்டுமே மிகக்குறைவாக ஓவருக்கு 5 ரன்கள் வீதம் வழங்கினார். மற்ற பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் நொறுக்கி அள்ளினர். அதிலும் வேன் பீக், மீக்ரன், பாஸ் டி லீட் ஆகியோர் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். இந்த 3 பந்துவீச்சாளர்கள் மட்டுமே 279 ரன்களை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பந்து நன்றாக பேட்டர்களை நோக்கி எழும்பி வந்ததால், ஷாட்களை அடிக்க வசதியாக இருந்தது. இதனால் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாக இருந்தது.

இமாலய இலக்கை நோக்கி நெதர்லாந்து

411 ரன்கள் எனும் எட்ட முடியாத இலக்கைத் துரத்தி நெதர்லாந்து அணி களமிறங்கியது. வெஸ்லி, மேக்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். முகமது சிராஜ் வீசிய 2வது ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து, வெஸ்லி 4 ரன்னில் வெளியேறினார்.

அடுத்துவந்த ஆக்கர்மேன், மேக்ஸுடன் இணைந்து இந்திய பந்துவீச்சை லாவகமாகக் கையாண்டனர். குறிப்பாக சிராஜ் வீசிய 6-வது ஓவரில் ஆக்கர்மேன் 3 பவுண்டரிகள் என 12 ரன்கள் சேர்த்தார். ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் நெதர்லாந்து ரன்களைச் சேர்த்தது. பவரப்ளே ஓவர்கள் முடியும்போது நெதர்லாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது.

10ஓவர்களுக்கு மேல் குல்தீப், ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டனர். இதற்கு பலனும் கிடைத்தது. குல்தீப் வீசிய 13வது ஓவரில் ஆக்கர்மேன் கால்காப்பில் வாங்கி 35 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

மந்தமான ரன்ரேட்

அடுத்து களமிறங்கிய சைபிராண்ட், மேக்ஸுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடிவந்த மேக்ஸ் 30 ரன்கள் சேர்த்தநிலையில் ஜடேஜாவீசிய 16வது ஓவரில் கிளீன் போல்டாகி மேக்ஸ் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கேப்டன் எட்வார்ட்ஸ் களமிறங்கி, சைபிராண்டுடன் சேர்ந்தார்.

ஜடேஜா, குல்தீப் யாதவ் பந்துவீச்சை சமாளித்து ரன்களைச் சேர்க்க நெதர்லாந்து பேட்டர்கள் திணறினர், ரன்சேர்ப்பில் மந்தநிலை நிலவியதால் வெற்றிக்கான ரன்ரேட் உயர்ந்து நெருக்கடி அளித்தது. 20ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்தது.

10 ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்திருந்த நெதர்லாந்து அடுத்த 10 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

கோலி பந்துவீசுமாறு ரசிகர்கள் முழக்கம்

விராட் கோலியை பந்துவீசச் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய கோரிக்கை தொடர்ந்து எழுந்தது. “ பந்தை விராட் கோலியிடம் கொடுங்கள், விராட் பந்துவீசட்டும்” என்று ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக கோஷமிட்டனர். இதைக் கேட்ட கேப்டன் ரோஹித் சர்மா புன்னகையுடன், கோலியை பந்துவீச அழைத்தார்.

தீபாவளியன்று போட்டியை காண வந்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய பரிசாக கோலியின் பந்துவீச்சைக் காண முடிந்தது. கோலி தான் வீசிய முதல் ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார்.

9 ஆண்டுக்குப் பின் விக்கெட் வீழ்த்திய கோலி

25-வது ஓவரை கோலி வீசினார். மிதவேகப் பந்துவீச்சாளரான கோலியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து எட்வார்ட்ஸ் 17ரன்களில் ஆட்டமிழந்தார். நீண்டகாலத்துக்குப்பின் பந்துவீசிய கோலிக்கு விக்கெட் கிடைத்தது. கடைசியாக 2014ம் ஆண்டு விக்கெட் எடுத்திருந்த கோலி இப்போது மீண்டும் விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன் கோலி சர்வதேச அளவில் 8 விக்கெட்டுகளை சாய்த்தநிலையில் 9-வது விக்கெட்டாக இது அமைந்தது.

கோலியின் பந்துவீச்சில் இதற்கு முன் அலிஸ்டார் குக், கிரெய்க் கீஸ்வெட்டர், டீ காக், மெக்கலம், பீட்டர்ஸன், சமித் படேல், முகமது ஹபீஸ், சார்லஸ் ஆகியோர் ஆட்டமிழந்திருந்தனர்.

30ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்திருந்தது. 20 முதல் 30 ஓவர்களுக்கு இடையே 55 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்தது.

அதன்பின் பும்ரா பந்துவீச வந்தபின் நெதர்லாந்துக்கு நெருக்கடி அதிகரித்தது. பும்ரா வீசிய 32-வது ஓவரில் பாஸ் டி லீட் 12 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

நாங்களும் பந்துவீசுவோம்ல…!

நெதர்லாந்து அணி தோல்வி என்பது உறுதியாகிவிட்டநிலையில், பரிசோதனை முயற்சியாக கோலி, சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டது.

சர்வதேச அரங்கில் சுப்மான் கில் 7 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் அவரும் இன்று 2 ஓவர்கள் பந்துவீசி 11 ரன்கள் கொடுத்தார்.

சூர்யகுமார் வீசிய 35-வது ஓவரில் நெதர்லாந்து பேட்டர் நிதாமனாரு 2 சிக்ஸர்கள் உள்பட 13 ரன்கள் சேர்த்தார். சைபிராண்ட் அரைசதம் நோக்கி நகர்ந்து வந்தார். இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேஸ் ஸ்வான் பந்துவீச்சு போல் சூர்யகுமார் பந்துவீசி, 17 ரன்களை வழங்கினார்.

சிராஜ் வீசிய 38-வது ஓவரில் சைபிராண்ட் க்ளீன்போல்டானார். அவர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

40ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி 10ஓவர்களில் நெதர்லாந்து அணி வெற்றிக்கு 221 ரன்கள் தேவைப்பட்டது. 41-வது ஓவர்களில் நெதர்லாந்து அணி 200 ரன்களை எட்டியது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக சேஸிங்கில் 200 ரன்களுக்கு மேல் குவித்த 4வது அணியாக நெதர்லாந்து அணி மாறியது. ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், அணிகளுக்குப்பின் நெதர்லாந்து 200 ரன்களைச் சேர்த்தது.

நிதாமனாரு அரைசதம்

வேன் பீக், நிதாமனாரு இருவரும் களத்தில் இருந்தனர். நெட் ஓவர்களில் பந்துவீச குல்தீப், ஷமி அழைக்கப்பட்டனர். குல்தீப் வீசிய 43-வது ஓவரில் வேன் பீக் 16 ரன்கள் சேர்த்தநிலையில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மேன் மெர்வ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்தநிலையில், அதே ஓவரில் சிராஜிடம் கேட்ச் கொடுத்து 16ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

8-வது விக்கெட்டுக்கு ஆர்யன் தத், நிதானமனாரு களத்தில் இருந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் வீழ்ந்தாலும் நிதானமனாரு அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்து அரைசதத்தை நோக்கி நகர்ந்தார். பும்ரா வீசிய 47-வது ஓவரில் தத் 5 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட்டை இழந்தார்.

நீங்களுமா ரோஹித்..!

கடைசியாக ரோஹித் சர்மாவும் பந்துவீச ஆசைப்பட்டு பந்துவீசினார். 48-வது ஓவரை சர்மா வீசினார். ஏற்கெனவே 8 வீரர்கள் பந்துவீசிய நிலையில் 9-வது வீரராக ரோஹித் பந்துவீசினார். ஐபிஎல் தொடரில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை ரோஹித் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் வீசிய ஓவரில் நிதானமனாரு சிக்ஸர் விளாசி 38 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணிக்கு எதிராக தனது முதல் அரைசதத்தை நிதானமனாரு பதிவு செய்தார். அதே ஓவரின் 5-வது பந்தில் நிதாமனாரு அடித்த பந்தை ஷமி கேட்ச் பிடிக்க ரோஹித் சர்மா விக்கெட் வீழ்த்தினார். நிதாமனாரு 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

47.5 ஓவர்களில் நெதர்லாந்து அணி 250 ரன்களுக்கு ஆட்டமிழந்து 160 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 9லீக் ஆட்டங்களிலும் தோல்வி அடையாமல் தொடர்ந்து 9-வது வெற்றியைப் பெற்றது.

இந்திய அணித் தரப்பில் குல்தீப், ஜடேஜா, பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஹித், விராட் கோலி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பந்துவீசிய 9 வீரர்கள்

இந்த ஆட்டம் பெங்களூரு ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. ஒருபுறம் வெற்றிக்காக நெதர்லாந்து தீவிரமாகப் போராடிய நிலையில், மற்றொருபுறம் இந்திய அணியினர் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கினர்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் தவிர மற்ற 9 பேரும் பந்துவீசி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். அதிலும் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப விராட் கோலி பந்துவீசி 9 ஆண்டுகளுக்குப்பின் விக்கெட்டும் வீழ்த்தினார்.

எல்லோரும் பந்துவீசிவிட்டார்கள் நானும் வீசுகிறேன் என்றரீதியில் கடைசியில் ரோஹித் சர்மாவும் ஒரு ஓவர் பந்துவீசி விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணியின் வெற்றியை ரசித்ததோடு, சிறந்த பொழுதுபோக்கையும் ரசிகர்களுக்கு இந்திய வீரர்கள் வழங்கினர்.

பெங்களூரு மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே சவாலானது. இந்த மைதானத்திலும் குல்தீப், ஜடேஜா, சிராஜ், பும்ரா, ஷமி வழக்கம்போல் சிறப்பாகப் பந்துவீசி தங்களின் திறமையை நிரூபித்தனர்.

ஆறாவது பந்துவீச்சாளர் இல்லை என்ற புகாருக்கு பதில் சொல்லும் வகையில் பந்துவீச்சு உத்தி இருந்ததாகவே கருதலாம்.

இந்தியா vs நெதர்லாந்து

பட மூலாதாரம், Getty Images

கோலி சாதிப்பாரா?

விராட் கோலி இதுவரை 4 உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாடியுள்ளார். இதில் மொத்தம் லீக் போட்டிகளில் மட்டும் 29 இன்னிங்ஸ்களில் 1551 ரன்கள் சே்ரத்து 70.5 சராசரி வைத்துள்ளார். இதில் 15 முறை 50 ரன்களுக்கு அதிகமாகவும், 4 சதங்களும் அடங்கும்.

ஆனால், நாக்அவுட் போட்டிகளில் கோலி சொதப்பியுள்ளார். இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 68 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 சராசரி மட்டுமே கோலி வைத்துள்ளார். 2015, 2019 ஆகியவற்றில் 3 போட்டிகளில் 5 ரன்கள் மட்டுமே கோலி சேர்த்துள்ளார். இந்த முறை அரையிறுதிப் போட்டிகளி்ல் கோலி தனது வழக்கமான ஃபார்மில் விளையாடுவாரா அல்லது கடந்த காலத்தில் நிலவிய சோகம் தொடருமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)