You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பட்ஜெட் 2024: 'பணக்காரர்களுக்கான அரசின் பட்ஜெட்' - ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுவது என்ன?
பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பிப்ரவரி 1ஆம் தேதியன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் அது இந்தியாவின் பொருளாதரம் மற்றும் மக்களின் வாழ்வின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆனந்த ஸ்ரீனிவாசன் பிபிசி தமிழிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
"இது இடைக்கால பட்ஜெட். அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் என முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமேயான பட்ஜெட் தான். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கிடையாது என்பது என் கருத்து" எனக் கூறுகிறார் அவர்.
மேலும், "நாட்டின் வரவு செலவுகளைச் சரியாக கூற வேண்டும், அதுவே சரியான பட்ஜெட். அமைச்சர் பேசியதில் அதைக் குறித்து தெளிவாக கூறவில்லை. இது என்ன மாதிரியான ஒரு பட்ஜெட் எனப் புரியவில்லை" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு நாட்டின் வரி குறித்த தகவல்கள் பட்ஜெட்டில் சரியாக இடம்பெற வேண்டும். கச்சா எண்ணெய் மீதான வரியை பட்ஜெட்டிற்கு வெளியே அடிக்கடி மாற்றுகிறார்கள். பல கடன்களை பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை, ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை போல ஒரு தனி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என நிதி ஆயோக் தலைவர் கூறுகிறார். பின் எதற்கு இந்த பட்ஜெட்" என கேள்வியெழுப்புகிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த ஸ்ரீனிவாசன்.
இந்த பட்ஜெட் என்பது பணக்காரர்களுக்கானது என்றும், ஏழைகளுக்கு இதில் ஒன்றும் இல்லை எனவும் பல விமர்சனங்களை முன்வைத்தார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)