You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை'- அமெரிக்க அதிபர் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது வளைகுடா பயணத்தில், போயிங் ஜெட் விமானங்கள் உட்பட அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையே ஒப்பந்தங்கள் பலவற்றை அறிவித்தார். அதைத் தொடர்ந்து தோகாவில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இந்தியாவின் வரிவிதிப்பு குறித்தும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து பேசும் போது இக்கருத்தை கூறிய டிரம்ப், "உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்று" என்பதால் அங்கு ஆப்பிள் தொழிற்சாலைகளை நிறுவுவதில் தனக்கு விருப்பமில்லை என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் தான் கூறியதாகத் தெரிவித்தார்.
"அவர்கள் [இந்தியா] எங்களுக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளனர். அதன்படி அவர்கள் எங்களிடம் எந்த வரியும் வசூலிக்கப் போவதில்லை. 'டிம், நீங்கள் சீனாவில் பல தொழிற்சாலைகளை அமைத்தபோதிலும் நாங்கள் உங்களை ஆதரித்தோம். இப்போது நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. இந்தியா தானாகவே எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளும் என கூறினேன்' '' என்றார் டிரம்ப்.
இந்த மாத தொடக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், பெருமளவிலான ஐபோன்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதாகக் கூறியது. அதே நேரத்தில், ஐபேட்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்ற பொருட்களின் முக்கிய உற்பத்தி மையமாக வியட்நாம் இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு