பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்தப் பகுதியில் காணலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மும்பைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தோனி சிக்சர் மழை - சிஎஸ்கே அசத்தல், மும்பை அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசி அசத்தல்

    தோனி ஹாட்ரிக் சிக்சர்

    பட மூலாதாரம், SPORTZPICS

    படக்குறிப்பு, தோனி ஹாட்ரிக் சிக்சர்

    மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே என இருவரும் அரை சதம் அடித்தனர். கடைசி ஓவரில் பேட் செய்ய வந்த தோனி, ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே களம் கண்டனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் உள்ளே வந்தார். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தோனி ஹாட்ரிக் சிக்சர்

    பட மூலாதாரம், SPORTZPICS

    படக்குறிப்பு, தோனி ஹாட்ரிக் சிக்சர்

    மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் மிட்செல் அவுட்டானார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் தோனி களமிறங்கினார். முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் தோனி. தோனி அத்துடன் நிற்கவில்லை, ஹர்திக் வீசிய அடுத்த இரு பந்துகளையுமே எல்லைக்கோட்டிற்கு வெளியே பறந்து போகச் செய்தார். தோனி ஹாட்ரிக் சிக்சர்களை விளாசியதும் ரசிகர்களின் ஆரவாரம் எல்லை கடந்து போனது. கடைசிப் பந்திலும் தோனி சிக்சர் விளாசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, எதிர்பாராத வகையில் அந்த பந்து பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்றது. அதில் தோனி 2 ரன்களை எடுத்தார். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர்களுடன் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறு முனையில் ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார்.

    20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை நோக்கி மும்பை அணி ஆடி வருகிறது.

    தோனி நடப்பு ஐ.பி.எல். தொடரில் 25 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்களை குவித்துள்ளார். ஒரு முறை கூட அவுட்டாகவில்லை. 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து இதுவரை அவர் 82 பந்துகளை எதிர்கொண்டு 16 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 163 ரன்களை அவர் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 198.78.

    தோனி ஹாட்ரிக் சிக்சர்

    பட மூலாதாரம், SPORTZPICS

    படக்குறிப்பு, தோனி ஹாட்ரிக் சிக்சர்
  2. வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - பெங்களூரு ரயில்கள் தாமதம், வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூரு ரயில்கள் தாமதம்

    வாணியம்பாடி அருகே ரயில் தடம் புரண்டது
    படக்குறிப்பு, வாணியம்பாடி அருகே ரயில் தடம் புரண்டது

    வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூரு மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் 2 மணி நேரத்துக்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி - ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே சென்னை - பெங்களூரு சரக்கு ரயிலின் ஒரு பெட்டி திடீரென தடம் புரண்டது. ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு உடனடியாக இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்,

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சரக்கு ரயிலை மீட்கும் பணியி ஈடுபட்டனர். இதனால் பெங்களூர் மார்க்கத்தில் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பெங்களூரு மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இரண்டரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தடம் புரண்ட சரக்கு ரயிலை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதையடுத்து ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

  3. நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நண்பர்கள் வீடுகளில் போலீசார் சோதனை

    நயினார் நாகேந்திரன்

    பட மூலாதாரம், NAINAR NAGENTHRAN/FACEBOOK

    படக்குறிப்பு, நயினார் நாகேந்திரன்

    திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நண்பர்கள் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் வருமானவரித்துறையினர் மூலம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதை கண்காணிக்கும் வகையில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்க அவருடைய நண்பரான பிரபல எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் மாவீரர் என்பவரின் வீடுகள் மற்றும் கடையில் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து, நெல்லை சந்திப்புப் பகுதியில் பாஜகவின் தேர்தல் அலுவலகம் எதிரே இருக்கக்கூடிய ராஜேஷ் எலக்ட்ரானிக் கடை மற்றும் அம்மன் சன்னதி பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய இரண்டு வீடுகளிலும் மூன்று குழுக்களாக பத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் பணம், பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என முதல்கட்டமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, கடந்த வாரம் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தப்பட்டு மது பாட்டில்கள், பரிசு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்றிருக்கிறது.

  4. இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலுக்கு ஜோ பைடன் கண்டனம்

    இஸ்ரேல் மீதான இரான் தாக்குதலுக்கு ஜோ பைடன் கண்டனம்

    ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில் உள்ள அதன் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், "இரான் மற்றும் ஏமன், சிரியா, இராக் ஆகிய நாடுகளில் உள்ள இரான் கூட்டாளிகள் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

    கிட்டத்தட்ட அனைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீழ்த்த நாங்கள் உதவினோம். இரானின் வெட்கக்கேடான இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்த ராஜ்ஜீய நடவடிக்கை எடுக்க ஜி7 தலைவர்களுடன் நாளை கூட்டம் நடத்த உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

  5. சல்மான் கான் வீட்டின் முன்பாக மூன்று முறை துப்பாக்கிச்சூடு

    சல்மான் கான் வீட்டின் முன்பாக மூன்று முறை துப்பாக்கிச்சூடு

    பட மூலாதாரம், ANI

    இன்று (14/04/2024) அதிகாலை 5 மணியளவில் பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஏ,என்,ஐ செய்தி முகமையின்படி, மும்பை காவல்துறைக்கு மூன்றுமுறை துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

    சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே காவல்துறை, தடயவியல் துறை குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. அங்கு துப்பாக்கிக் குண்டு தாக்கிய இடம் குறிக்கப்பட்டுள்ளன.

  6. பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன?

    பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன?

    பட மூலாதாரம், BJP

    • பிரதமர் சூர்ய கர் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும்.
    • ஆயுஷ்மான் பாரத் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைக்கும்.
    • நடுத்தர குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படும்.
    • தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்.
    • 2036இல் ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்தும்.
    • உள்கட்டமைப்பு, உற்பத்தி, ஸ்டார்ட் அப், விளையாட்டு, முதலீடு, உயர்மதிப்பு சேவைகள், சுற்றுலா மூலம் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
    • விதையிலிருந்து சந்தை வரை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முயற்சி எடுக்கப்படும். நானோ யூரியா மற்றும் இயற்கை விவசாயம் மூலம் நிலம் பாதுகாக்கப்படும்.
    • படகு காப்பீடு, மீன் பதப்படுத்தும் பிரிவுகள், செயற்கைக்கோள் மூலம் உரிய நேரத்தில் தகவல் என மீனவர்களின் வாழ்வுக்கு முக்கியமான ஒவ்வோர் அம்சமும் வலுப்பெறும்.
    • மீன் விவசாயிகள் கடல் பாசி, முத்துகள் பயிரிட ஊக்குவிக்கப்படும்.
    • டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டுப் பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அனைவரும் இ-ஷ்ராமில் இணைக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
    • திருவள்ளுவர் பண்பாட்டு மையம் மூலம் இந்தியாவின் கலாசாரம் உலகுக்கு எடுத்துச் செல்லப்படும்.
    • உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் செம்மொழிகளைப் படிக்க ஏற்பாடு செய்யப்படும்.
    • 2025ஆம் ஆண்டை பழங்குடியின பெருமை ஆண்டாக அறிவிக்கப்படும்.
    • வனப் பொருட்களில் மதிப்புக் கூட்டல் மற்றும் சூழலியல் சுற்றுலா ஊக்குவிக்கப்படும்
  7. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு: ராஜ்நாத் சிங் கூறியது என்ன?

    பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு: ராஜ்நாத் சிங் கூறியது என்ன?

    பட மூலாதாரம், BJP

    நடக்கவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு ‘மோதியின் உத்தரவாத சங்கல்ப் பத்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

    ராஜ்நாத் சிங் பேசியது என்ன?

    பாதுகாப்புத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோது, “நாங்கள் சொல்வதைச் செய்கிறோம்,” என்று தெரிவித்தார்.

    “ஜம்மு காஷ்மீரில் இருந்து 370 சட்டப்பிரிவை நீக்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம், அதை நிறைவேற்றியுள்ளோம்,” என்றார்.

    மேலும், மோதியின் உத்தரவாதம் 24 காரட் தங்கம் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

    பாஜகவின் புதிய தேர்தல் அறிக்கை 24 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், நல்லாட்சி, நாட்டின் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, விளையாட்டு மேம்பாடு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகள் அடங்கும்.